May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

1 min read
What is Agni Star?

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பிறந்து சித்திரை மாதம் 21-ஆம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை “அக்னி நட்சத்திரம்” என்று சொல்வர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

இவ்வருட அக்னி நட்சத்திர காலம் நாளை சார்வரி வருடம் சித்திரை 21 திங்கட்கிழமை மே 04/2019 துவங்கி வைகாசி 28 வியாழக்கிழமை மே 28/2019 நிவர்த்தியாகிறது.

இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன. அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும்.

அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை “கர்ப்ப ஓட்டம்’ என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா?

யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன் என்ற பெயரும் உண்டு.)

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டார். “அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

“உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றான். “அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ச்சுனன்.

“நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்” என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். (காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில் இது நடந்தது)

கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன் “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை” என்றான்.

உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான். அப்பொழுது கண்ணன் “அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க “சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

அக்னி பகவான் முதல் ஏழு நாட்கள் பூமியின் கீழ்ப்பகுதியை உண்டார். அந்த சமயம் வெப்பம் மெதுவாகப் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு நாட்கள் வளர்ந்திருந்த அடர்காட்டை உட்கொண்டார். அந்த நேரத்தில் வெப்பம் கடுமையாகப் பரவி சுடத் தொடங்கியது. இறுதியாக ஏழு நாட்கள் பாறைகளை விழுங்கியதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து முழுமையாகத் தாழ்ந்து இளம் வெயில் மட்டும் வரத் தொடங்கியது. இப்படியாக அக்னி பகவான் காண்டவ வனத்தை விழுங்கிய 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று சொல்லப்படுகின்றன. கத்திரி வெயில் என்று சொல்லப்படுகின்ற இந்த வெயில், 21 நாட்களிலும் மூன்று வகையாகப் பரவும்.

முதல் ஏழு தினங்களில் மெதுவாக அதன் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்பதை நாம் அனுபவித்து உணரலாம். கோடைக்காலத்தின் உச்சகட்டமான நேரங்கள்தான் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில்.

சூரியனின் ஆதிக்கம்:

பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. ஜோதிட ரீதியில் காணும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார். இதன்படி தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்துவிடுகிறார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்று குறிப்பிட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை மாதம் 21-ம் நாள் தொடங்கி, வைகாசி 14-ம் நாள் முடிவடைகிறது. இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி இப்போது மே 28 தேதி நிறைவு பெறுகிறது.

அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது என நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்….

தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள்.

அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.

சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள்.
ஆனால் சில சுபசெயல்களை நடத்தலாம் என்கின்றன நட்சத்திரங்கள். திருமணம், சீமந்தம், சத்திரங்கள் கட்டுதல், உபநயனம், பரிகார வேள்விகள் ஆகியவற்றைச் செய்யலாம். ஆனால் வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதைத் தவிர்க்கலாம். தோட்டம், மலர்ச் செடிகள், குளங்கள், குட்டைகள் வெட்டுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு செய்தல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாக்குதல் ஆகியவை வேண்டாம். அக்னி நட்சத்திரத்துக்கு முன்னர் தொடங்கிய பணிகளை இக்காலகட்டத்தில் செய்யலாம். புதிய வாகனங்கள் பயிற்சி, குருவிடம் தீட்சை ஆகியவற்றை இக்காலகட்டத்தில் செய்ய வேண்டாம்.

திருமஞ்சன வழிபாடு:

கிராமப்புறங்களில் முன் ஏழு, பின் ஏழு நாட்களில் மக்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

சிவ, விஷ்ணு ஆலயங்களில் இந்த 21 நாட்களும் பல்வேறு திருமஞ்சன நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அம்மன் சன்னிதானத்தில் வசந்த நவராத்திரி உற்சவம் என்று ஒன்பது தினங்களுக்குக் கொண்டாடுவார்கள். சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் மண்பானை ஒன்றை உறி போல் கட்டிவிட்டு அதில் வெட்டி வேர் போன்ற வாசனைத் திரவியங்களைப் போட்டு அதன் அடியில் சிறு துளை இட்டு நீர் விடும் கலசமாகத் தொங்கவிடுவார்கள்.

அந்தப் பானைக்குள் பச்சிலை, ஜடாமஞ்சி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பச்சைக் கற்பூரம், பன்னீர், மஞ்சள் தூள், ஏலக்காய், கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைச் சிறிதளவு கலந்துபோட்டு நீர் வெண்ணிறம் மாறாமல் இடுவார்கள். அக்னி நட்சத்திர நாட்களில் பல்வேறு அபிஷேகங்களை செய்வார்கள். விஷ்ணு ஆலயங்களில் ராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறும்.

அக்னி வழிபாடு:

அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள் இருப்பதால் ஏழு தினங்கள் முறையான வழிபாடு செய்யலாம். இந்த தினங்களில் அக்னி தேவனின் கோலத்தைப் பூஜையறையில் செங்காவியால் வரைந்து வாசனை மலர்களால் பூஜை செய்து தீபம் ஏற்றிவைத்து
ஞாயிறு பாயசம்,
திங்கள் பால்,
செவ்வாய் தயிர் மற்றும் வாழைப்பழம்,
புதன்- தேன் வெண்ணெய்,
வியாழன்- சர்க்கரை மற்றும் நெய்,
வெள்ளி- வெள்ளை சர்க்கரை பானகம்,
சனி- பசு நெய் மற்றும் தயிர் அன்னம்
என்ற வரிசையில் படைத்து அக்னி தேவனை தியானம் செய்து வழிபட வேண்டும். மனிதனின் இரு உள்ளங்கைகளிலும் அக்னி தேவன் இருப்பதாக நம்பிக்கை உண்டு. அதனால்தான் இரு கைகளையும் காட்டி ஆலய வழிபாடு செய்கிறோம். வெப்ப காலத்தில் இஷ்ட, குல தெய்வங்களை வழிபட்டு வரலாம். அனைத்து ஆலயங்களிலும் ஜலதாரை வைப்பதால் அந்தக் காலகட்டங்களில் பூமி அதிர்வோ இயற்கை உபாதைகளோ , நோய் தாக்கங்களோ ஏற்படாது என்பது வேதங்களின் சொல்லப்பட்ட உயர்ந்த ரகசியம்.

ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது இந்த வேளையில் சகல தோஷத்தையும் நீக்கும்.

சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் :-

நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் நடைபெறும் சித்திரை 30 புதன்கிழமை மே 13, 2020 அன்று நடைபெறும். அன்று உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பில்லா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது சித்தர்கள் வாக்கு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.