கொரோனாவில் குளிர்காயும் தனியார் மருத்துவமனைகள்
1 min read
தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது, இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 8,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2,134 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு ஒருபுறமிருக்க தனியார் மருத்துவமனைகள் வியாபாரத்தை தொடங்கி விட்டது. அதாவது இந்த நோயை வைத்து எப்படி சம்பாதிக்கலாம் என்று ஸ்கெட்ச் போட்டு மக்களை சோதித்து வருகின்றனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் ராயப்பேட்டையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். ஒரு நாளைக்கு ஒருவரை சேர்த்து மருத்துவம் பார்ப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ 80,000 ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு ஷாக்காகி உள்ளார் போனில் பேசியவர். பின்பு மற்றொரு தனியார் மருத்துவமனையில் விசாரித்த போது ரூ30,000 ஒரு நாளைக்கு என்று தெரிவித்துள்ளனர். அதை விட சற்று குறைவாகத்தான் உள்ளது என்று தற்போது இங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவம் என்றால் கொரோனாவுக்கு மருந்து இல்லை அப்படியெனில் என்ன மருத்துவம் பார்க்கப் போகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகள் கொரோனாவில் குளிர்காயும் காலம் வந்து விட்டது, மனிதநேயம் இருக்கிறதா.? இல்லையா.? என்பதை அரசுதான் நிலைநாட்ட வேண்டும். ரமணா படத்தில் வருவது போன்று நிஜத்தில் நடக்கிறது நாம் பார்த்துள்ளோம், ஆனால் இந்த நேரத்தில் இதே போல் செயலை அரசு தடுக்க வேண்டும்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் எப்படி தங்களை காப்பாற்றிக் கொள்வது. இப்போது உங்களுக்கு இன்னொரு கேள்வியும் தோன்றும். அரசு மருத்துவமனைக்கு சென்றால் என்ன.?
அரசு மருத்துவமனை என்றாலே அது அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த வைரஸ் தரமான பாடத்தை கற்பித்து விட்டது. அரசு ஆஸ்பத்திரியில், தற்போது அனைத்து வசதிகளுடன் தரமான சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனால் மக்கள் எந்த ஒரு நிலையிலும் பீதி அடையாமல் அரசு மருத்துவமனையை அணுகி இதற்கான தரமான ட்ரீட்மென்ட் எளிதாக பெறலாம்.