சுமைதாங்கி – சிறுகதை- முத்துமணி
1 min read
Sumai thanki – short story by Muthumani
17-5-2020

“யோவ் முனுசாமி மூணு நாளுதான் முழுசா இருக்கு ஆடிட்டிங் க்கு. இன்னுமா அக்கவுண்ட்ஸ் முடிக்கல வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யணும் இல்ல”
‘மரியாதையா பேசு டா. என் சர்வீஸ்தான் உன் வயசு. நீ பேசலடா பெரிய சீனியர் மேனேஜர் என்கிற திமிர் பேசுது’’கேட்க வேண்டும் என்று நினைத்த முனுசாமி அடக்கிக்கொண்டு “முடிச்சுடுறேன் சார் “என்றார்.
○”ஒரு சிங்கிள் டீ குடிச்சுட்டு நூறு ரூபாயை நீட்டுனா… சில்லறையா கொடும்”
இப்படி சொன்ன டீக்கடைக்காரரிடம் ‘டேய் ஓங்கி அடிச்சா பல்லு கழந்துடும்… சின்ன பயலே’ வாய் வரைக்கும் வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டு தேடிப்பிடித்துப் பத்து ரூபாயை கொடுத்தார்.
○”பொம்பளைங்க நிற்கிறது கண்ணுக்குத்தெரியலையா கொஞ்சம் தள்ளி நின்னா என்ன?”
– பஸ்ஸ்டாப்பில் ஒருத்தி சொன்னபோது, ‘பெரிய நயன்தாரா நிக்கிற… நாங்க உரசிக் கொண்டு நிக்கிறோம்’ என்று சொல்ல நினைத்தும் வெறுமனே முறைத்து மட்டும் பார்த்தார். பதில் பேச வரவில்லை.
○ “என்ன பெருசு வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா வாசலில் நிக்கிறியே கொஞ்சம் உள்ள போனா என்ன பஸ் குள்ள இடம் நிறைய இருக்கு”
-கண்டக்டர் சொன்னபோது ‘ஏண்டா உங்க அப்பன் வயசு இருக்கும் எனக்கு. கண்டக்டர் என்னும் திமிரில் பேசுறியா நாக்கைக் கடிச்சு விடுவேன்’ என்று மனம் பேசியது வாயை அடக்கிக்கொண்டு உள்ளே நகர்ந்தார்.
○”சிக்னல் இறங்கவேண்டியது யாரு.. இறங்கு இறங்கு சீக்கிரம் இறங்கு ” என்று சொன்னபடி விசிலடிச்சான் கண்டக்டர்.
‘இந்த நாட்டுல எவனுக்கும் வயசுக்கேத்த மரியாதை கொடுக்கணும் தெரியாதா?’ என்று நினைத்தபடி நின்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் புகுந்து கொண்டு வாசல் நோக்கி நகர்ந்தார்.
அப்போது அவரது கைப்பை இளைஞன் ஒருவன் மேல் லேசாக பட்டுவிட அவன் உடனே சூடாகி “மனுஷனா மாடா இடிச்சுட்டு போறியே இடிமாட்டுக்கு பிறந்த பயலே ” என்று சொன்னபோது கோபம் மூக்கு வரை வந்தது. ஆனால் இறங்க வேண்டுமே என்று வேகமாக இறங்கினார்.
○ஸ்டாப்பில இறங்கும் போது மணி ஆறு இருக்கும். வயிற்றுக்குள் சுள்ளென்று ஒரு உணர்வு காபி குடித்தால் நன்றாக இருக்கும். சற்று வேகமாக வீடு நோக்கி நடந்தார்.
“சார் போன மாசம் என் லேண்ட் விஷயமா உங்க ஆபீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தேன் உங்களிடமும்சொல்லிட்டு வந்தேன்… உள்ளூர்க்காரர்… பார்த்து முடிக்க மாட்டீங்களே, நீங்க எல்லாம் என்ன ஆபிஸர். உங்களை எல்லாம் எப்படி நம்புவது” –
-கேட்டவனுக்கு இவர் வயதிலிருந்து பாதி வயதிருக்கும் மூன்றாம் வகுப்பு கூட படிக்கவில்லை.அவனிடம் கொதித்து எழுந்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் போக்கிரி பயல் கத்திகித்தி வைத்திருந்தால்… நடையில் வேகத்தை காட்டி வீடு வந்து சேர்ந்தார்.
○சட்டையை கழட்டி
ஹேங்கரில் மாட்டிவிட்டு “அப்பா டா ” என்றபடி சோபாவில் அமர்ந்தார்.
“வந்துட்டீங்களா? காபி சாப்பிடுறீங்களா?” என்று மனைவி கேட்ட மாத்திரத்தில்
எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை அவ்வளவு கோபம் “வேலை முடிஞ்சு வந்தா காபி
குடிக்காமல் பிறகு சாக்கடையை யா குடிப்பான் உங்கப்பன்? ஓங்கி ஒரு அடி வைச்சென்னா மூஞ்சி
முகரை எல்லாம் உடைந்துடும் கேக்குரா கேள்வி துப்பு கெட்ட பயஉள்ள” என்று எகிறிப்
பாய்ந்து விட்டார்.
○ ‘என்ன ஆச்சு உங்களுக்கு கிறுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா ‘ என்று கேட்கத்தான் நினைத்தாள் கேட்டா என்ன நடக்குமோ என்று கிச்சனுக்குப் போய்விட்டாள் காப்பி போட.
“காப்பி யாடி இது? கர்மம் கர்மம்” இனிப்பு கொஞ்சம் குறைவாக இருந்ததால் காப்பியை தம்ளரோடு தரையில் வீசி எறிந்தார். ஏதும் பேசாமல் மீண்டும் அடுப்பங்கரைக்குள் புகுந்தாள் அந்த சுமைதாங்கி.