இரவுக்குள் வெளிச்சம்- சிறுகதை- கடையம் பாலன்
1 min read
Iraukkul velicham – Short story By Kadayam Balan
“அப்பா… நான் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகல…”
“ஏம்மா…”
“இன்னிக்கு எனக்கு ஹேப்பி பெர்த்டே. எல்லாப் பிள்ளைகளும் பிறந்த நாளுன்னா புது டிரஸ் போட்டுக்கிட்டு வரும். அவங்கள யூனிபாம் போடலன்னாக்கூட டீச்சர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதுக்குத்தான் எனக்கு புது ட்ரஸ் கேட்டேன். அம்மா தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.”
&கனிஷ்காவின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான் ராமகிருஷ்ணன்.
“நீ புறந்த நாள்ன்னு ஏன் பள்ளிக்கூடத்துல சொல்ற…” என்று மகளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்த அவன் ஏதேதோ சொல்லி சமாளித்தான்.
“நீ பள்ளிக்கூடத்துக்கு போகலைன்னா, அம்மா உன்னை அடிச்சே கொன்னுடுவா… சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு… உங்க அம்மா வர்ற நேரமாச்சி. படுத்திருந்கிற தம்பி விகாசை எழுப்பிவிடு…”
ராமகிருஷ்ணன் ஊர் அடங்கி இருக்கும்போதே எழுந்து முத்தம் தெளித்து கோலம்போட்டு வைத்துவிடுவான். பின்னர் காலை உணவு, பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போக மதிய சாப்பாடு தயாரிப்பான். பல நாட்கள் காலையிலும் மாலையிலும் ஒரே சாப்பாடுதான். ஏன் காலையில் சமைத்த சோறு இரவுக்கும்கூட பயன்படும்.
இன்றும் எல்லா வேலைகளையும் முடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சாப்பாடு தயாரித்துவிட்டு தன் மனைவி முத்தம்மாளுக்காக வென்னீர் போட்டுக் கொண்டிருந்தான்.
வெளியில் இருந்து முத்தம்மாள் வருகிறாள் என்பதை அவள் மேனியில் இருந்து வந்த சென்ட் வாசனையும் கூந்தலில் நேற்று இரவு வைத்திருந்த மல்லிகை சரத்தின் மணமும் காட்டிக்கொடுத்தது. அவ்வளவுதான் குழந்தைகள் இரண்டும் சுறுசுறுப்பாகிவிட்டன. சிறுவன் விகாஷ் வீட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பாத்திரங்களை ஒழுங்கு படுத்தினான். கனிஷ்கா விளக்குமாற்றை எடுத்து வீட்டை சுத்தம் செய்தாள்.
வீட்டுக்குள் நுழைந்த முத்தம்மாளின் பட்டுப்புடவை சிறுமி கனிஷ்காவை பொறாமைப்பட வைத்தது. அவள் வைத்திருந்த மணிபர்ஸ் விகாசை ஏங்க வைத்தது. அவளின் சிவந்த உதடு ராமகிருஷ்ணனைக் கடந்த கால நினைவுக்கு கொண்டுச் சென்றது.
அவளின் முகத்தில் விடிய விடிய கண்விழித்திருந்த களைப்பு… அழிக்க முயன்றும் தோற்றுப்போனதற்கான கண்மை திட்டுகள். நெற்றியில் தன் எல்லையை விரித்துக்கொண்ட குங்குமக் கோலங்கள். ஜடைப் பின்னலின் கட்டுப்பாட்டையும் மீறி வெளியே வந்த முடித் துவாலைகள்…
-இந்தக் கோலத்தை பார்ப்பதற்கு ராமகிருஷ்ணனுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. தன்னுடைய இயலாமையை நினைத்து அமைதியாக இருந்தான்.
“வென்னி போட்டிங்களா?”
“அடுப்புல சூடாயிக்கிட்டு இருக்கு…”
“தக்காளிப்பழம் இருக்கா?”
“மூணே மூணுதான் இருந்தது. குழம்புக்கூட வைக்காம உனக்காக எடுத்து வைச்சிருக்கேன்.”
அவற்றை தன் உள்ளங்கைகளால் சிதைத்து முகத்தில் பூசினாள்.
“சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்புங்க…” பிள்ளைகளுக்கு கட்டளையிட்டாள்.
“முத்தம்மா… பிள்ளைங்களுக்கு இன்னிக்கு பீஸ் கட்டணும்.. பணம் இருக்கா?”
“இப்போ எங்கிட்ட இல்லை. நீங்க… கோயில் தர்மகர்த்தாக்கிட்ட போயி நான் சொன்னேன்னு 200 ரூபா வாங்கிக்கிட்டு வாங்க.”
“தருவாரா?”
“நான் சொன்னேன்னு சொல்லுங்க கண்டிப்பாக தருவாரு”
“அம்மா எங்க பள்ளிக்கூடத்தில… டூர் போறாங்க… நானும்…” பயந்து பயந்து கேட்டாள்… கனிஷ்கா.
“இப்போ அதுக்கெல்லாம் பணம் இல்லை. இன்னொருவாட்டி போகலாம்.”
“அம்மா… எனக்கு ஒரு புதுச்சட்டை வேணும். சட்டையின் கீழ் பட்டன் பக்கத்தில கிழிஞ்சிருக்கு.” கோரிக்கை வைத்தான் விகாஷ்.
“சட்டையை இன் பண்ணித்தானே போடுவ… கொஞ்ச நாளுக்கு அப்புறம் புதுச்சட்டை வாங்கலாம்.”
அதற்குள் ராமகிருஷ்ணன் பணத்துடன் வந்தான். -படிப்புக்கான கட்டணத்தை பிள்ளைகளிடம் கொடுத்தான்.
“ஏன் நீங்க கொண்டு பணத்தை கட்ட வேண்டியதுதானே?”
“என்னால முடியலம்மா…”
“சின்னசின்ன வேலையாவது பார்க்கலாமே… இப்படியே எந்த வேலையும் செய்யாம இருந்தா முடமாத்தான் ஆகணும்.”
“என்ன முத்தம்மா இப்படி சொல்ற. ஒரு காலத்துல நான் எப்படி உழைச்சேங்கிறது உனக்கு தெரியுமில்ல. போதாத காலம்… கடவுள் என்னை முடக்கி போட்டிட்டாரு.”
இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அதை கேட்டும் கேட்காதவாறு குளியறைக்குச் சென்றுவிட்டாள் முத்தம்மாள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு முத்தம்மாளின் அழகை பார்த்து அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டவன்தான் ராமகிருஷ்ணன். அப்போது கடுமையாக உழைத்தான். மொத்த வியாபாரிகளிடம் இருந்து சாமான்களை வாங்கி மோட்டார் சைக்கிளில் சில்லறைக் கடைகளுக்கு சப்ளை செய்வான். நல்ல வருமானம். திடீரென்று ஒரு விபத்தில் சிக்க… சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் சிகிச்சையில் கரைந்து போனது. கடுமையாக உழைக்க கூடாது என்ற டாக்டரின் அறிவுரையை அதிகமாகவே பின்பற்றி வருகிறான், ராமகிருஷ்ணன். இப்போது மனைவியின் வருமானத்தில் வாழ வேண்டிய நிலை… அவளுக்கும் முன்பு போல் வருமானம் இல்லை. வயசும் ஆயிடுச்சே…
மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டிருந்தபோதே குளியலறை கதவு திறக்க… அவளது கருத்தக் கூந்தல் பரந்துவிரிந்து தேவதைப் போல வந்தாள். இப்போது அவளது முகம் உண்மையான வயதை காட்டினாலும் அதிலும் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. அவளை அப்படியே பார்த்து ராமகிருஷ்ணன் தன்னையே மறந்தான்.
தயாராக இருந்த டிபனை சாப்பிட்டாள்…
“நான் விடியவிடிய தூங்கல… அதனால என்ன எழுப்பாதீங்க… அதுக்காக போன் வந்தா எழுப்பாம இருந்திடாதீங்க…”
ராமகிருஷ்ணனின் பதிலை எதிர்பார்க்காமல் உள்புறம் இருந்த அறையில் போய் சயனித்துக் கொண்டாள்.
வெளிப்புற சிறிய ஹாலில் பழைய கோரப்பாயை விரித்து சுவரில் சாய்ந்தபடியே கண்ணயர்தான் ராமகிருஷ்ணன்.
அன்று மாலை குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் தாய் முத்தம்மாள் வீட்டில் இருப்பதைக் கண்டதும் அதிர்ச்சி. எப்போதும்போல் கூச்சல் விளையாட்டுக்கெல்லாம் அன்று தடை.
வழக்கமாக பிள்ளைகள் மாலையில் வரும்போது முத்தம்மா வெளியூர் சென்றிருப்பாள். அல்லது வெளியூர் செல்ல நல்ல மேக்கப்புடன் தயாராக இருப்பாள். இன்று அம்மாவுக்கு ரெஸ்ட்போல…
அப்போது ஏலச்சீட்டுக்காரர் வந்தார்.
“அக்கா… இந்த வார சீட்டு ஒங்களுக்குத்தான். பணத்தை கொண்டு வந்திருக்கேங்கா…”
“வாங்க தம்பி… எவ்வளவு பணம் சேரும்?”
“கரசான் போக.. 24 ஆயிரத்து 600 வருது…”
பணத்தை எண்ணிக் கொடுத்தான்..
‘அடேயப்பா நம்ம வீட்ல இவ்ளோ பணத்த பார்த்ததே இல்ல’ – இது இரு குழந்தைகளுக்கும் மனதில் எழுந்த மகிழ்ச்சி
‘அம்மா சொன்னபடி நமக்கு புதுச்சட்டை எடுத்து கொடுத்துடுவாங்க’ என்று விகாஷ் மனதுக்குள் நினைத்தான்.
‘நாளைக்குத்தான் பிறந்தநாள்ன்னு ஸ்கூல்ல பொய் சொல்லிட வேண்யடிதுதான்’ – இது கனிஷ்கா மன ஓட்டம். அதோடு டூர் போக அம்மா பணம் கொடுப்பாங்கங்கிற மகிழ்ச்சியும் கூட.
“முத்தம்மா.. எனக்கு செகன்ஹேட்ல மொபட் ஒண்ணு வாங்கித்தர்யா… கொஞ்சம் கொஞ்சமா ஓட்டிப்பழகறேன்.” என்றான் ராமகிருஷ்ணன்.
அதற்கு முத்தம்மாள் பதில் தரவில்லை. அவளது உதடுகள் மட்டும் லேசாக விரிந்தன. அதன் அர்த்தம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை.
பணத்துடன் வெளியே சென்ற முத்தம்மா இரவு 9 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாள். பெரிய துணி பொட்டலாம்… மற்றும் சிறு சிறு பார்சல்கள்.
அவைகளைக் கண்டதும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல… கணவருக்கும்தான் ஆனந்தம்.
முத்தம்மாளின் சுமையை கணவரும் பிள்ளைகளும் இறக்கினார்கள்.
முத்தம்மாள் துணி பொட்டலத்தை அவிழ்க்க… ஆசைஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வெவ்வேறு வண்ணங்களில் தனித்தனி டிசைன்களில் பட்டுப்புடவைகள். ஒவ்வொன்றும் கண்ணை பறித்தன.
இது அம்மாவுக்கு.. அடுத்து நமக்குத்தான்…
அடுத்து வந்தது… மார்டன் டிரஸ்… சுடிதார், மிடி, ஸ்கட் என…
“அம்மா எனக்கு இது பெரிசா இருக்கும்மா… கொஞ்சம் சிறுசா எடுத்திருக்கலாமில்ல..”
முத்தம்மாளிடம் இருந்து பதில் வராவிட்டாலும், ராமகிருஷ்ணன், “கனிஷ்கா… நீ பெரிய பிள்ளயா வளர்ற வரைக்கும் போட்டுக்கலாம்…” என்றான்.
அடுத்து வந்தது… பனியன், கால்சட்டை..
இதுவும் தனக்கு பெரிசா இருக்குமே… என்று நினைத்தான் விகாஷ்.
அடுத்த பார்சலை உடைத்தாள் முத்தம்மாள்…
அவை அனைத்தும் லிப்ஸ்டிக், ஐ புரோ பென்சில். ரோஸ் பவுடர். அந்த பவுடர் முகத்தில் அழியாமல் இருக்க பவுண்டேஷன் கோந்த், பல வண்ணங்களில் நகபாலிஸ் என அனைத்தும் ஆடம்பர பொருட்கள்.
அழகு சாதனபொருட்ளை கொண்டு தன் மகள் கனிஷ்காவை அழகுபடுத்தி பொருட்களின் தரத்தை சோதனை செய்தாள். ஆனாலும் சிறுமிக்கு ஒரு பெருமிதம். தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து அதிசயித்துப்போனாள்.-
அதன்பின் அதே அழகு சாதனங்களைக் கொண்டு தன்னைத்தானே அழகு படுத்தினாள். புதுப்புது புடவைகள் ஒவ்வொன்றையும் எடுத்து உடுத்தினாள். ஒவ்வொரு சேலையை உடுத்தி முடிந்ததும் அதை செல்போனில் படம் எடுக்கச் சொன்னாள். ராமகிருஷ்ணன் அழகாக படம் பிடித்தான்.
அடுத்து சுடிதார், மிடி போன்ற உடைகளை அணிந்து போட்டோ எடுத்துக் கொண்டாள்.
காதலிக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றமாய் அழகு தந்தவள் இன்று ஒரே நாளில் தன் அழகையெல்லாம் கொட்டி தீர்த்துவிட்டாள். திருமண நாளில்கூட இவ்வளவு அழகாய் இல்லை என மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டான்.
இறுதியாக…
குழந்தைகள் இருவரையும் பாடம்படிக்க சொல்லிவிட்டு கணவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றாள். கதவை உள்புறமாக தாழ்போட்டாள். உள்ளே அரைகுறை ஆடை ஒன்றை அணிந்து அதையும் படம் பிடிக்கச் சொன்னாள். படம் பிடித்தான்.
சுமார் இருபது நிமிடங்களுக்குப்பின் சாதாரண புடவையில் வெளியே வந்தாள்.
தனது செல்போனில் உள்ள விதவிதமான போட்டோக்களை யார்யாருக்கெல்லாமோ வாட்ஸ்-அப்பில் அனுப்பினாள்.
படங்கள் போய் சேர்ந்த ஒருசில நிமிடங்களில்.. செல்போனில் அழைப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.
“ஆமா சார்… நான்தான் மோகம் மோனிஷா பேசறேன்… நான்தான் சார்… என்ன சார், நம்ப முடியலியா… இன்னிக்கு எடுத்த போட்டோ சார்…. நேர்ல வேணும்மானா என்னை வந்து பாருங்க சார்… எங்கிட்ட இன்னும் நிறைய மார்டன் டிரஸ் எல்லாம் இருக்கு… எனக்கு மேடையில மெயின்பார்ட் கொடுங்க சார்… நல்லா நடிப்பேன். பழைய பாட்டுல இருந்து புதுப்பாட்டு வரைக்கும் டான்ஸ் ஆடத் தெரியும்..
“……”
ஓ.கே. சார்… டேங்ஸ் சார்…. ஒவ்வொரு மேடையிலயும் என் நடிப்பையும் ஆட்டத்தையும் பாருங்க சார்…
அவளுக்கு வந்த ஒவ்வொரு போன்காலும் புதுபுது ஆர்டரை கொடுத்தன. இனி வரும் இரவுகள் எல்லாம் வெளிச்சமாக தெரிய ஆரம்பித்தன.
டெலிபோன் அழைப்புகள் ஓரளவு முடிந்த நிலையில்… மோனிஷா, முத்தம்மாளாக மாறினாள்.
தன் குழந்தைகளையும் கணவரையும் பார்த்தாள்… சாரிங்க.. உங்களோட ஆசைகள என்னால நிறைவேற்ற முடியல… இது தொழிலுக்கு முதலீடு… இனி வருமானம் அதிகமா கிடைக்கும். அப்போ உங்க ஆசைய எல்லாத்தையும்…
மனம் பேச… கண்கள் பொங்கியது. கன்னத்தில் கண்ணீர் வடிந்தாலும் மேக்கப் கலைய வில்லை. அது அவளது எதிர்காலத்தை பிரதிபலித்தது.