June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

வெளிச்சம் – சிறுகதை – முத்துமணி

1 min read

Velicham -Short story By Muthumani

10-6-2020

“யோவ் பழனி சீக்கிரம் வாரும்யா. எப்பவும் நீரு லேட்டுதான். உமக்குப் பெயரே ஊருக்குள்ள ‘லேட் பழனி ‘தான். பஞ்சாயத்துக் கூடிருச்சில்ல”. -வீட்டு வாசலில் இருந்து கறிக்கடை சொக்கலிங்கம் கத்துவது காதில் விழுந்தது.
“இரும்யா. நீரு காலுல வென்னிய ஊத்திகிட்டு நிப்பியரு. உள்ள வந்து உட்காரும். ரெண்டு வாய் சோத்த அள்ளி போட்டு வந்துடறேன். நீரும் சாப்பிடுறியராவே உம்ம கடக்கறிதான். பஞ்சாயத்து முடிய எவ்வளவு நேரம் ஆவுமோ? அது வரைக்கும் பசி தாங்காது.”

“இன்னிக்கு என்ன பஞ்சாயத்து? யார் மேல வழக்கு? ” -சோற்றைப் போட்டுக் கொண்டே கேட்டா கோமதி.
“அடியே, டீக்கடை நாராயணன் வீட்டில நடந்தது உனக்குத் தெரியாதா? நாராயணன்தான், நம்ம குடிமவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்”.

” யாரு அந்த நல்ல கண்ணுப்பயலா? அவன் தப்பு தண்டா எதும் செய்ய மாட்டானே”.
“அவன் இல்லடி! அவன் மவன், காசி மேலதான் கேஸ். ரெண்டு நாளைக்கு முன்ன, நாராயணன் வீட்டுக்கு முடிவெட்ட போயிருக்கான் அந்தக் காசிப் பய. நாராயண மவன். ஆறோ ஏழோப் படிக்கிறானே, அந்தச் சின்னப் பயலுக்கு முடி வெட்டும் போது ஒழுங்கா மண்டைய கொடுக்காமல் அங்கிட்டும் இங்கிட்டுமா மண்டய ஆட்டிபுட்டானாம், அந்த சின்னப் பய. அதுக்கு இந்த நாசு…… பய காசி, அவனை அடிச்சுப்புட்டானாம் .”

“அடியாத்தி! இது என்ன கொடும? அந்த நாராயணன் மோசமான ஆளாச்சே !எதையும் லேசுக்குள்ளே விடமாட்டாரே”.
” இது என்ன லேசா விடற காரியமா? அந்த காசிப் பயலுக்குத் திமிர் ஜாஸ்தி. எல்லார்ட்டயும் வாய் ஓவரா பேசுறான். பெரிய தொர மாதிரி கையில் வாட்ச், மோதிரம்… தொர நடந்து வர மாட்டாரு . சைக்கிள் வேற… ரெண்டு நாளைக்கு முன்னால எதுத்தால பாத்தான். கையெடுத்து கும்பிட கூட இல்லயே. இவனை எல்லாம் வைக்கிற இடத்தில் வைக்கணும்.

“யோ பழனி, வரியா இல்லையா? அங்க என்ன பழக்கம் விட்டுக்கிட்டு இருக்க. நாட்டாமை காரரும் மத்தவங்களும் போய்ட்டாங்க”. – வெட்டுப்பட்ட கிடா மாதிரி துடிச்சான் கறிக்கடை காரன்.
“இந்தா வந்துட்டேன். நீ ஒரு அவசரத்துக்கு பொறந்தவருய்யா”

அடுத்த நாள் விடிகாலை…
“நேத்து ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்தீங்க. அதான் கேக்கல பஞ்சாயத்துல என்ன நடந்துச்சு?.”

” திமிரு புடிச்சப் பய பஞ்சாயத்துல நிக்ரோம்ன்னு பயம் கொஞ்சம் கூட இல்ல. என்ன பேச்சு பேசுறான்?. முடி வெட்டும் போது.
” ஆட்டாம இரு தம்பி “ன்னு சொல்லி இருக்கான் காசி. அந்தச் சின்ன பையன், “யாருக்கு யாருடா தம்பி? உனக்கு நான் தம்பியா?, மரியாதையா பேசுடான்னு சொல்லிட்டானா, பயலுக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துருச்சு”.
“அண்ணன் தம்பி உறவுமுறை கொண்டாடிட்டு
வந்துட்டானா ?”
“இப்படியே விட்டா வீட்டு படியேறி பொண்ணு கேட்டாலும் கேப்பாண்டி, நாடு போற போக்கு அப்படித்தான் இருக்கு”
வாய்ச்சண்டை பெருசாயிடுச்சு .கோவத்துல அந்த நா…வப்பய காசி, நம்ம நாராயணன் மகன் மண்டையில ஓங்கி ஒரு கொட்டு வச்சிருக்கான். அவன் அழுது கிட்டு அப்பன் கிட்ட சொல்ல, நாராயணன் செருப்பைக் கழட்டிகிட்டு “ஏண்டா ?ஊருக்குச் செரை….. பயலே உனக்கு எம்புட்டுத் திமிரு இருந்தா என் மவன் மண்டையில் கைய வைப்ப?.
“ஐயா, மரியாதை கொடுத்து, மரியாதை வாங்குங்க”- இது காசிப்பயல் சொன்னது.

“என்னடா ஐயா? கையகட்டி மரியாதையா முதலாளின்னு சொல்லுடா.”

  • இப்படியே வாக்குவாதம் நீண்டு கிட்டு போயிருக்கு. நாராயண அவனை அடிக்கப் போயிருக்காரு. கையப்பிடிசிக் கிட்டு பதிலுக்கு அவனும் கையை ஓங்கிருக்காண்டி. பையனுக்கு முடிய வெட்டாம பாதியில் போட்டுட்டு சைக்கிளை எடுத்துட்டுப் போயிட்டானாம்.
    “நாட்டாமை கேட்க கேட்க எல்லாத்தையும் ஒத்துகிட்டான்.”

“என் தொழில கேவலமா பேசுறாரு. என் சாதியைச் சொல்லிக் கேவலமா பேசுறாரு.”

” ஆமாடா நீ ஊருக்குச்.. செரக். .. .பயதான?. நீ என்ன ஜில்லா கலெக்டரா? உனக்கென்னடா மரியாதை வேண்டிய கிடக்கு?”ன்னு பஞ்சாயத்துல நாலு பேரு முன்னால நாராயணன் கேட்டாரு ..
“நீங்க மட்டும் பெருசா என்ன தொழில் பார்க்கிறீங்க? ரோட்டுல டீக்கடை வச்சிருக்கீங்க. வர்றவன், போறவன் உள்ளூர் காரன், வெளியூர்க்காரன் எல்லாருக்கும் டீ போடுறீங்க. வந்தவன் என்ன சாதியோ? என்ன எழவோ?எல்லாரும் குடிச்ச எச்சி கிளாஸ கழுவுற வேலை தானே பாக்குறீங்க ?”ன்னு நாக்கு மேல பல்ல போட்டு கேட்டுட்டு நிக்கிராண்டி.. சிலுக்கு சட்டை போட்டுக்கிட்டு கையை மடிச்சி விட்டுக்கிட்டு.
நாட்டாமை காரர் ஆத்திரத்தில் எந்திச்சி அடிக்கக் கூட போயிட்டாரு. அதற்கும்அவன் அசரல்லை. குத்துக்கல்லு மாதிரி நிக்கிறான் குறுகுறுன்னு பாத்துகிட்டு.

“பிறகென்ன தான் ஆச்சி ?சும்மாவா விட்டாங்க ? கட்டி வச்சி அடிச்சிருப்பாங்க” என்றாள்.

எல்லாருமா சேர்ந்து அவனைக் கட்டி வச்சு அடிச்சு ஊரைவிட்டு விரட்டிடணும்ன்னு தான் சொன்னாங்க. நாட்டாமையும் அந்த முடிவுக்குத்தான் வந்தார்.

அப்பதான் திடீர்னு இந்த பெருசு முத்தையா, அதாண்டி, நம்ம பழைய நாட்டாமை இருக்காரு இல்ல…
“ஆமா அவருக்கு என்ன?”.
” அவரு மெதுவாக குனிந்து நாட்டாமை காதுக்குள்ள என்னமோ கிசுகிசு பேசினாரு. அப்புறம் நாட்டாமை மூஞ்சே மாறிப்போச்சு. “
“சரிடா நாயே என்ன இருந்தாலும் நீ பேசினது தப்பு. யாரை நம்பி பிழைப்பு நடக்குது உனக்கு?. எங்க வீட்டுப் பிள்ளைய நீ பேசினதும் குத்தம் . தொட்டு அடிச்சதும் குத்தம். இப்படியே விட்டா இன்னைக்குப் பேசுவ , சின்னப் பையனை அடிப்ப, அப்புறம் ஊர்ல எல்லா பெரிய மனுஷனையும் கைநீட்ட ஆரம்பிச்சுடுவே. அப்புறம் எங்க தோள்ல துண்டு எதுக்கு? எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை, சாதி சம்பிரதாயம் எல்லாம் இருக்குல்ல. அதனால செஞ்ச தப்புக்கு நாராயணன் கால்ல நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னிப்பு கேளு நீ”

எவ்வளவு சொன்னாலும் அந்தப் பய கேட்கணுமே தன் பக்கம் தான் நியாயம் இருக்கு “பத்து வயசு பையன் முப்பது வயசு காரண போடா வாடா வந்து பேசுவான். அதை கேட்டுக்கிட்டு நான் சும்மா இருக்கணும். எங்களுக்கெல்லாம் சூடு சொரணை இருக்கப்படாது. இந்த நியாயத்தைக் கேட்க நாதியில்லை .அவனும் பேசினான் நானும் பேசினேன். அப்படின்னா முதல்ல அவன்தான் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் . நானும் மனுஷ ஜாதிதான் ” அப்டின்னு தெனாவட்ட்டா பேசுறான்.
அவங்க அப்பன் நல்லகண்ணு அழுதுகிட்டு ஒவ்வொருத்தர் கால்லயும் விழுந்து கடைசில மவன் காலில் விழுந்து “மன்னிப்பு கேளுடா எசமான் காலிலே விழுடா .நமக்கு எதுக்குடா மானமும் ரோஷமும்?”ன்னு அழுதுகிட்டே கேட்டான்,
அப்பவும் பயவுள்ள கேட்கல. எனக்குத் தூக்கிப்போட்டு ரெண்டு மிதி மிதிக்கலாம்ன்னு தோணிச்சு. பஞ்சாயத்து.. அடக்கிக்கிகிட்டு நின்னேன்.

அவன், “ஏன் நாங்க எல்லாம் சிலுக்குச் சட்டை போடக்கூடாதா? வாட்ச் கட்டக் கூடாதா. என் சம்பாத்தியத்தில் மோதிரம் வாங்கி போட்டா உங்களுக்கு என்ன? ன்னு நியாயம் பேசுறான் .சைக்கிள் ஓட்ட மேல் சாதியிலத் தான் பிறக்கணும்ன்னு சட்டம் இருக்குதா என்ன?”ன்னு காட்டமா கேட்டுட்டான். நாராயணன் சாமியாடிட்டார். ஆனா ஒண்ணும் நடக்கல.

கடைசில ,கோயிலுக்கு வெளியில இருந்து , தகப்பனும் மகனும் ஆத்தா கால்ல விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுட்டு, அபராதமா ஒரு அம்பது ரூபாய் கட்டிட்டு கோவில் விளக்கிற்கு எண்ணை வாங்கி ஊத்திட்டு , வீட்டுக்குப் போய் சேருங்க. மரியாதையா ஊருக்கு அடங்கியிருந்து ஊர் வேலைய ஒழுங்கா பார்த்து பிழைக்கிற வழியப் பாரு” அப்படின்னு சொல்லிட்டாரு நாட்டாமை.
அப்பவும் நல்லகண்ணு தான் குப்புற விழுந்தான். காசிப் பய நெஞ்சை நிமிர்த்திக் கிட்டு நிக்கிறான் கையைக் கட்டல. பஞ்சாயத்து முடிஞ்சுப் போச்சு.
எல்லாம் காலக் கொடுமை.

எச்சில் துப்ப வெளியே வந்தபோதுதான் அந்த பெருசு முத்தையா கண்ணுல பட்டார். நொண்டிகி ட்ட்டே காட்டுக்குப் போறாரு. அவரக் கேட்டுட வேண்டியதுதான்.
” என்ன மாமா ?” ஒரு கும்பிடு போட்டுட்டு “நேத்து காரசாரமா போகவேண்டிய பஞ்சாயத்து நாசமா போச்சு .அதுக்கு நீதான காரணம். நாட்டாமை காதுக்குள்ளே அப்படி என்னதான் ரகசியம் பேசின.
அந்த செர…. பயலுக்கு நீர் என்ன வக்கலாத்தா?”அடுத்து உண்மைதான் ரோட்டில வச்சு செருப்பக் கழட்டி அடிப்பான். பாத்துக்கிட்டே இரு”

“அடே பழனி, நீ சின்னப்பையன் விவரம் தெரியாமல் பேசாதடா.உனக்குப் புரியாது .அந்தக் காலத்துல ஒரு ஏழு எட்டு குடும்பம், அந்தப் பயலுக குடும்பம் நம்ம சாதி சனத்த நம்பி இருந்தது .அப்போ ஊர்ல எல்லா நல்லது கெட்டதுக்கும் வந்து அவன் தான் சடங்கு சாஸ்திரம் செய்யணும். எல்லாத் தெருவுக்கும் சேர்த்து அவனுக தான் பாத்தானுக. கொஞ்சம் கொஞ்சமா அவனுவளும் படிக்க அப்படி இப்படின்னு சொந்தத் தொழில் பாக்காம வேற வேலைக்குப் போய்ட்டானுவ. சில பேர் ஊறவிட்டு வெளியூர் போயிட்டாங்க. இந்த நல்லகண்ணு குடும்பம் மட்டும்தான் இப்ப இருக்கு. நாளைக்கு நம்ம ஊர்ல கல்யாணம் கருமாதி எது நடந்தாலும் இவன் தானே வந்து நிக்கணும்? சங்கு ஊத வேண்டாமா? குடிமகன் இல்லாம நடத்தமுடியுமா. இருக்கிற ரெண்டு பேரையும் ஊரைவிட்டு கழட்டிவிட்ட அப்புறம் என்ன ஆகும். இப்பவே சில நேரங்களில் கோயில் கொடை அது இதுன்னு வெளியூரிலிருந்து தான் குடிமவன கூப்பிட்டு செய்ய வேண்டியிருக்கு.”
இதத்தான் நாட்டாமை காதுல சொன்னேன்.
“ஓகோ. இதுல இப்படி வேற இருக்கா? சரி மாமா போயிட்டு வாங்க.”
அப்பதான் பஜாரில் இருந்து அவசரமாக வந்தான் சொக்கலிங்கம்.
“யோவ் காலையிலே எங்கிருந்து அவசரமா வார்றியரு. யாவாரம் முடின்சிதா? வயக்காட்டுக்கு போகலையா?. “
“யோவ் பழனி காலையிலே கடைக்கு போனேன். நாராயணன் டீக்கடைக்கு எதுத்தாப்புல காலியாக கிடந்துல்லா அந்த பாய் கடை ,அதை வாடகைக்குப் பிடித்து இந்த காசி பையன் சலூன் கடை தொறந்திருக்கான். திருநெல்வேலி , தென்காசில எல்லாம் பார்ப்போமே, அது மாதிரி லைட் எல்லாம் போட்டு , ஜம்முனு இருக்குதய்யா. வெளியே எழுதி வச்சிருக்கான். முடிவெட்ட 80 ரூபாய். சவரம் பண்ண அம்பது ரூபா. உரிமையாளர் காசி.
அதுக்கு எதுத்த கடை நம்ம நாராயணன் கடை . அவன் காபி 15 ரூபா. டீ பத்து ரூபாய்ன்னு எழுதி வச்சிருக்கான்.
நம்ம கடை அடுத்தது. கறி கிலோ ஐநூறு ரூபான்னு நானும் எழுதி வச்சிருக்கேன். அவ்வளவுதான் வித்தியாசம். அவன் அவன் கடைக்கு அவன் அவன் முதலாளி…
அது சரி. சலூன் கடைக்கு பெயர் என்ன தெரியுமா? காந்தி பியூட்டி சலூன்.
பய வேட்டியிலிருந்து குழாய்க்கு மாறிட்டான். எனக்கே அடையாளம் தெரியல. நான் பார்க்கும் போது யாரையோ சுத்துற நாற்காலியில் உட்கார வச்சி, முடிய வெட்டித் தள்ளி க்கிட்டுருக்கான். அடுத்து சவரம் பண்ண காத்துக் கெடக்கான் ஒருத்தன். அவன்கிட்ட சத்தமா என்னமோ சொன்னானே?
ஆமா. .. வக்கீல் தொழில் பாக்குறவனும், வாத்தியார் வேலை பாக்குறவணும், மயித்த வெட்டுரவனும் வயித்துப் பிழப்புக்குத்தான் பாக்குறாங்க. காந்தி படத்தை வேற மாட்டி வச்சிருக்கான். அவர் பாட்டுக்குச் சிரிச்சிட்டு இருக்காரு படத்துல.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.