டபுள்ஸ் – சிறுகதை – முத்துமணி
1 min read
dubulz – Short story By Muthumani
பசு பால் தரும். படிக்கிற காலத்தில சுந்தரி டீச்சர் தப்பா சொல்லி கொடுத்திருக்கு. எந்த ஊர்ல பசு பால தருது?. தானா வந்து தருமா? நாமதான் கஷ்டப்பட்டுக் கறக்கணும். கறக்கிறதும் லேசான காரியமில்ல. கண்ணுக் குட்டியைக் கொண்டாந்து கொஞ்ச நேரம் குடிக்க விட்டு பசுவை ஏமாத்தணும், குட்டி வாய் வைக்காட்டி வயித்த எக்கிக்கிடும் பசு.
புள்ளைக்குத் தான் கொடுக்கிறோம்ன்னு நம்பி அது பால் சுரக்கிற வரைக்கும் விடக்கூடாது. பிறகு நைஸா கண்ணுக்குட்டியப் புடிச்சு வெளிய இழுக்கணும். பால் மடியில, எண்ணைய போட்டு மெதுவா வலிக்காம கரக்கணும். மாட்டுக்கு வலிச்சுச்சி ,பின்னங்காலத் தூக்கி ஒரே போடு மூஞ்சி உடைஞ்சுடும். அலகு தென்னிடும்.
வீட்டு வாசலில் நின்ற, பசுவிடம் பால் கறந்து கொண்டே இத்தனையும் யோசித்தான் முருகன். இந்த மாடு தான் அவனுக்குச் செல்வம். தினசரி காலையில அஞ்சு லிட்டர், சாயங்காலம் அஞ்சு லிட்டர் கறக்கலாம். கட்டிப்போட தனியா தொழு கூட இல்லை. வீட்டு வாசல் தான் எல்லாமே. சாணியும் மூத்திரமும் அங்கதான். ஒரு ஓரத்தில் வைக்கோல். ஒரு இரும்பு வாளியில் கழனித் தண்ணி.
குத்தவச்சி உட்கார்ந்து பால் கறக்கிறது அப்பப்பா என்ன கஷ்டம்?
நல்ல ஒட்டக் கறந்துட்டான். அஞ்சு லிட்டர், வெங்கலச் செம்பு பொங்க பொங்க பால். செம்போட எந்திக்க நெனச்சா, கால் மரமரப்பு உட்கார்ந்த படியே “செல்லக்கிளி ” என்று மனைவியை அழைத்தான். அடுப்பங்கரையில் இருந்தவ, வந்துட்டா. வாசலில் நின்னுகிட்டா.
“இந்தா பாலு. உள்ளே கொண்டு வை” செம்பை நீட்டினான். அங்க நின்னுக்கிட்டே ஒரு கையை நீட்டி வாங்க எத்தனித்தா அவள். எப்படியோ தவறி, பால் செம்பு தரையில் விழ, அஞ்சு லிட்டர் பாலும் சாணத்தோடு சாணமாய் பச்சைக் கலரில் கரைந்து கொண்டிருந்தது.
“ஐயையோ” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் கோபம் பொத்துக்கொண்டு வந்தது முருகனுக்கு. “சனியனே உனக்கு கண்ணு கிண்ணு இருக்கா? இல்லையா?”
“உங்களுக்குக் கண்ணு என்ன முதுகுலயா இருக்கு? முன்னால பார்த்து கொடுத்தாதான் என்ன?”
“நீ பார்த்து வாங்கினியாடி. வக்கத்தவனுக்கு பிறந்தவளே”

“ஏன் உங்க கை விளங்காம போச்சா? கைய நல்லா நீட்டினா என்ன?” “உன்னால தாண்டி பால் நாசமாப்போச்சு”.
“உமக்குக் கால் விளங்கல்ல அதுக்கு நான் என்ன செய்ய?”.
“படியில் இறங்கி வந்து வாங்கி இருக்கலாம்ல புத்திகெட்ட சொங்கிப் பயபுள்ள.”
“ஏன் நீரு எந்திச்சி வந்து கொடுத்தா ஆகாதோ?”.
“பேசிக்கிட்டே இருந்தா பல்லை உடைச்சிடுவேன்.”
“அடுப்பங்கரையில் வேலையா இருந்தவளை கூப்பிட்ட உடனே ஓடியாந்துட்டேனே. அடுப்பை உங்க அப்பன் அந்த நாதாரிப் பயலா வந்து பாப்பான்?”.
“அஞ்சு லிட்டர் பாலையும் கொட்டிட்டு எங்க அப்பனை ஏண்டி இழுக்குறே! அவரு என்ன உங்கப்பணப் போலக் குடிச்சிட்டு திரிஞ்சாரு?”
“ஏன் கறந்த பாலை நீங்களே உள்ளே கொண்டுவந்து வச்சா ஆகாதா?”
“ஏண்டி நீயாடி என் கழுத்துல தாலி கட்டி இருக்க?. உங்க அப்பன் ஆத்தா வீட்டில முன்ன பின்ன பசுமாடு வளர்த்திருந்தா தெரியும்டி வெறும் பய மவள”.
“இந்த பசு மாட்டைத் விட்டா உன் கிட்ட வேற என்ன இருக்கு? ஏக்கர் கணக்குல நிலமா இருக்கு? உங்க அப்பன் பிச்ச ஒண்ணுதான் எடுக்கல நீர்தான் வெறும் பயலுக்கு பிறந்த வெட்டி…..”
“ஏண்டி உங்க அப்பன் ஆடு மேச்சவந்தான ? ஊர்க்கார ஆடு காணாம போச்சு .திருட்டுப் பய”.
“ஆமா அந்த ஆட்டை ஆட்டையை போட்டது உங்க அப்பன் தானே. பஞ்சாயத்துல அடி வாங்குனது, உங்க அப்பனா எங்க அப்பனா? ஊருக்கே தெரியுமே?”
“உங்க அம்மா மாங்காய் கள வாண்டு, தேங்காய் களவாண்டு பக்கத்து வீட்டில செருப்ப களவாண்ட தானேடி”
“யோவ் உங்கம்மா, உங்க அய்யா கூட ஒழுங்கா இருந்து வாழ்ந்து கிழிச்சாளா? பெருசா பேச வந்துட்டாரு”.
அதுக்கு மேல முருகனுக்குப் பொறுமை இல்லை. “மரியாத தெரியாத மானம் கெட்ட சி….மவளே”‘ எந்திச்சு சடாரென்று கன்னத்துல ஒண்ணு விட்டான். “ஐயோ அடிக்கிறானே; அடிச்ச கையில கொள்ளி வைக்க’குஷ்டம் பத்த” அவசரத்துல காலைத்தூக்கி மிதிக்க வந்த முருகன் சாணியும் பாலும் கலந்த கலவையில் மிதிச்சு வழுக்கி பொத்துண்ணு மல்லாக்க விழுந்தான் . ஊர்கூடி சிரியா சிரிச்சு வேடிக்கை பார்த்தாங்க. யாரோ முருகனைத் தூக்கி விட்டாங்க “பொண்டாட்டி கிட்ட அடி வாங்குவது உனக்கு வேலை பேசாம போ” உள்ள எவனோ சொன்னான்.
அப்ப ஆரம்பித்த சண்டை அன்னைக்கு ராத்திரி முழுக்க, நினைச்சு நினைச்சு ரெண்டுபேரும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பத்து பரம்பரை பழசை எல்லாம் கிண்டி கிளறி பேச ,ஒருவாரம் அவனும் வீட்டில் சாப்பிடல இவளும்சோறு ஆக்கல. ஒருத்தர் முகத்தில ஒருத்தர் முழிக்கல .
முடிச்சுடலாமா? கதையை படிக்கிற எல்லாரும்’ அஞ்சு லிட்டர் பால் கீழே சிந்திய இடத்துக்கு மறுபடியும் வாங்க. வந்துட்டீங்களா?….”தொடருங்க.
“அய்யய்யோ கஷ்டப்பட்டு பால கறந்தீங்க நீங்க. நான் சரியா பார்த்து வாங்கி இருந்தா கொட்டிருக்காதே.”
“இல்லம்மா, நானே எந்திரிச்சு கொடுத்திருக்கலாம் தப்பு என் மேலதான்”. “அடுப்புல சட்டியை வச்சுட்டு வந்துட்டேன். அந்த அவசரத்துல சரியாக கவனிக்காம வாங்கிட்டேன். தப்பு என் மேல”.
“நான் படியேறி வந்து உன்கிட்ட கொடுத்திருக்கலாம்”.
“இல்லங்க நான் தான் சோம்பேறி இறங்கி வந்து வாங்கி இருக்கணும்”. “இல்லம்மா நீ அடுப்பு வேலையா இருந்தே . பாலை நானே உள்ளே கொண்டு வந்து வச்சிருக்கலாம்”.
நீங்க என்ன செய்வீங்க? ஏற்கனவே உங்களுக்குக் குறுக்கு வலி. நான் தான் கூறு கெட்டவ”.
“சரி விடு உன் தப்பும் இல்ல என் தப்பும் இல்லை எல்லாம் நேரம். பேசிக்கிட்டே இருந்தா கொட்டின பாலு வரவா போகுது?”
“நீங்க உள்ள போயி கைய கால கழுவுங்க. நான் இந்த இடத்தைச் சுத்தம் பண்ணிட்டு வாரேன்”.
“கொஞ்சம் இரும்மா மாட்டை அவுத்து அந்த பக்கம் கட்டுறேன். நீ உள்ள போய் வேலையை பாரு நான் எல்லாத்தையும் அள்ளி போட்டுட்டு வாரேன்.” அக்கம்பக்கத்துல மூக்கு மேல விரல் வச்சு என்ன அன்னியோன்னியம் புருஷன் பொண்டாட்டி இவங்கள போல இருக்கணும்… என்னங்க இப்ப முடிச்சுடுடலாமா கதைய…..