கொரோனாவில் இருந்து மீண்டு வரும் தாராவி
1 min read
Corona going out from Dharavi
15-6-2020
கொரோனா பாதிப்பில் இருந்து ஆச்சரியப்படும் வகையில் தாராவி மீண்டு வருகிறது.
தாராவி
தாராவி- இது மும்பையில் இருந்தாலும் தமிழகத்து மக்களுக்கு மிகவும் பரீட்சயமாக ஊர். குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மக்களுக்கு உறவுக்கார ஊராகவே தெரியும். காரணம் தாராவியில் முழுவதும் தமிழர்கள்தான். அதுவும் நெல்லை சீமையையும் சேலம் பகுதியை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
கொரோனா இந்தப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. மிக அதிகமாக பரவியது. அதற்கு காரணம் இந்த பகுதி மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்ததாகும். அதுவும் குடிசைகள் நிறைந்த ஊர். ஆசிய கண்டத்தின் மிகவும் நெரிசலான சேரி பகுதியாக தாராவி விளங்குகிறது. தாராவியில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் இந்த பகுதி வெறும் இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதுதான். அப்படி என்றால் ஜன நெருக்கத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
வேகமாக பரவி வந்த கொரோனா இந்த பகுதியில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொரோனா பரவத் தொடங்கியது. ஜூன் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை இங்கு 2,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை நகரில் 3 சதவீதம் மற்றும் சில வார்டுகளில் 5 சதவீதம் ஆக கொரோனா பரவல் இருக்கும் நிலையில், தாராவியில் மட்டும் 1.57 சதவீதமாக குறைந்துள்ளது.
கொரோனா இறப்பும் அதிகரித்து வரும் நிலையில் தாராவியில் கடந்த மே 30-ந் தேதி முதல் ஜூன் 8-ந் தேதி வரை ஒரு இறப்பு கூட நிகழவில்லை.
8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நான்கு நாட்களில் 4 பேர் இறந்ததால் உயிரிழப்பு 77 ஆகியுள்ளது.
தாராவியில் இந்த அளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதற்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைதான் காரணம் என்று கூறுகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அதிகாரிகள் 47,500 வீடுகளுக்கு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 7 லட்சம் பேரை பரிசோதித்து காய்ச்சல் கிளினிக்குகளை அமைத்துள்ளனர். அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் விளையாட்டு கிளப்புகளை தனிமை மையங்களாக மாற்றி அறிகுறிகளுடன் தென்படுபவர்களை அங்கு பராமரித்தனர்.
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இப்போது அன்றாட கொரோனா பரவல் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 51 சதவிதம் பேர் குணமடைந்து வருகின்றனர்.
அதிகாரி
தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் மும்பை நகராட்சியின் உதவி ஆணையர் கிரண் திகாவ்கர் சிறப்பாக பணியாற்றினார். அவர் கூறுகிறார்…
ஒருவருக்கு கொரோனா வரும் வரை காத்திருப்பதை விட, கொரோனாவைத் தேடி விரட்டுவதே ஒரே வழி. தொற்று ஏற்பட்ட பின் எதிர்வினையாற்றுவதை விட, கட்டுப்படுத்துவதே சிறந்த உத்தி. தொற்று எண்ணிக்கை அதிகரித்தபோதும் பரிசோதனைகள் தொடர்ந்தது. இறப்புகளை மட்டுப்படுத்துவது தான் எங்கள் நோக்கம். ஆரம்ப கட்டத்திலேயே மக்களை தனிமைப்படுத்த முடிந்தது. பிற பகுதிகளில் நோயாளிகள் மிகவும் தாமதமாகத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்.
கொரோனா பரிசோதனை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எங்களது நோக்கமே உயிர்களைக் காப்பாற்றுவதுதான். ஆனாலும், தாராவியில் நாங்கள் இன்னும் போராடி கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.