June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆன்மிகத்தில் அறிவியல்

1 min read


Science in Spirituality

நாம் வழிபடும்போது பல்வேறு சம்பிரதாயங்களை பின்பற்றுவோம். அதை பலர் மூட நம்பிக்கை என்று கேலி செய்வார்கள். ஆனால் அந்த நம்பிக்கையில் புதைந்திருக்கும் அறிவியல் தத்துவங்களை அவர்கள் பரிந்திருக்க மாட்டார்கள். நமது இந்திய ஆன்மிக செயல்பாடுகள் அனைத்தும் அறிவியல் சார்ந்ததே.. அதுபற்றி தமிழாசிரியர் முத்துமணி எம்.ஏ. எம்.எட். எம்.பில். அவர்கள் இங்கே விளக்குகிறார். ஏற்கனவே திருநீறின் அறிவியல் பற்றி நாம் சொல்லி இருக்கிறோம். மேலும் சில இதோ…..

எலுமிச்சம் பழம்.

எலுமிச்சம் பழம் இல்லாத கோவில் காரியங்கள், சுப நிகழ்வுகள் எதுவும் உண்டா? சாமி சிலைகளின் கையில் வைத்திருக்கும், அரிவாள் நுனியில் கூட ஒரு எலுமிச்சம் பழத்தைக் குத்தி வைத்திருப்பார்கள்.

 புது கார் வாங்கியவுடன் காரின் முன்பக்கம் பம்பர் மேல் கருப்பு கயிற்றில் கட்டி வைக்கப்படும் பொருட்களில் ஒன்று எலுமிச்சம்பழம். நான்கு சக்கரங்களிலும் நான்கு எலுமிச்சம் பழங்களை வைத்து அதன் மேல் ஓட்டிச் செல்வார்கள்.

 நடந்து போகும் தெருவின் குறுக்கே எலுமிச்சம் பழம் குங்குமம் எல்லாம் கலந்து கிடந்தால் அதைத்தாண்டி போவதற்கு ஒரு அச்சம். ஏதோ செய்வினை வைத்து போட்டிருக்கிறார்கள் தொட்டு விடாதே. அப்படியானால் ஏதாவது கெட்டது செய்ய வேண்டுமானாலும் எலுமிச்சம்பழம் வேண்டியிருக்கிறது என்பது பொருளாகிறது.

   சாமிக்கு எலுமிச்சம்பழ மாலை போடுவது வழக்கம்.கோவிலில் சாமி ஆடுவதற்கு எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பார்கள்.

   யாராவது ஒரு பெரியவரைப் பார்க்கப் போனால் அவருக்கு எதை வாங்கினாலும் நம் மனம் நிறையாது தங்கத்தை வாங்கி கொடுத்தாலும் மனம் நிறையாது என்றால் அவருக்கு ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொண்டு கொடுத்து ஆசி வாங்குவோம் . தில்லானா மோகனாம்பாள் என்னும் திரைப்படத்தில் நாகேஷ் எப்போதும் தன் கையில் ஒரு எலுமிச்சம்பழம் திரிவதை பார்த்திருக்கலாம்.

   திருமண வீடுகளில் கூட எலுமிச்சம் பழத்தைக் கையில் கொடுப்பது அந்த காலத்து வழக்கம். மணமக்கள் கையிலும் கொடுத்து விருந்தினர் அனைவருக்கும் ஒரு பழத்தைக் கொடுத்து விடுவார்கள். பிறகு தாம்பூல கவருக்குள் போடும் பழக்கம் வந்தது.

      இதற்கு என்ன பொருள்? எலுமிச்சம்பழம் இருக்கும் இடத்தில் எந்த நோய் தொற்றும் அண்டாது. உள்ளங்கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டால் கை வழியாக எங்கிருந்தும் நோய்க்கிருமிகள் அண்டுவதற்கு வாய்ப்பில்லை.

       பஸ்ஸில் போகும்போது எலுமிச்சம்பழம் ஒன்றை வைத்துக் கொண்டுஅவ்வப்போது அதை மோந்து பார்த்துக் கொள்வோர் உண்டு. இதனுள்ளே என்ன அர்த்தம் இருக்கிறது என்று அவளுக்கு தெரியுமோ தெரியாதோ? மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் தான் எலுமிச்சம்பழம் அவசியமான ஒன்று. தலையில் எலுமிச்சம் பழத்தைத் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும் குளிர்ச்சி உண்டாகும். வெப்பு நோய்கள் வராது.

      இவனுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சு குற்றாலத்துக்கு க் கூட்டிட்டுப்போய் எலுமிச்சம்பழத்தை தலையில் அரக்கித் தேய்த்துக் குளிப்பாட்டிக் கூட்டி வாருங்கள் என்று கேலி செய்வார்கள்.

     கைகளில் எலுமிச்சம்பழம் இருந்தால், கை உறைகள் போட்டுக் கொண்டதற்கு இணையானது சொல்லப்போனால் அதற்கு மேலாக அது இயற்கை hand sanitizer ஆக விளங்குகிறது. இதெல்லாம் corona வந்தபிறகுதான் நமக்கு உறைக்கிறது.

======

வேப்பிலை.

மாமரத்து இலையை மாவிலை என்று கூறுவதுபோல், வேப்ப மரத்து இலையை வேப்பிலை என்று கூறக்கூடாது. அதை வேப்பந்தழை என்றுதான் கூறவேண்டும்.

 வேப்பந்தழை தெய்வீகத் தன்மை பொருந்தியதாகக் கருதப்படுகிறது. வேப்பமரம் எங்கிருந்தாலும் அதற்கு ஒரு சிவப்பு , மஞ்சள் அல்லது காவித் துணியைக் கட்டி பூமாலை போட்டு அம்மரத்தைக் கடவுளாகவே நினைத்து வழிபடும் பழக்கம் தமிழருக்கு இருந்தது. இன்றும் சாலை ஓரங்களில் சில மரங்களுக்கு அந்த மரியாதை கிடைத்திருப்பதைப் பார்க்க முடியும்.

      இது என்ன மூடநம்பிக்கை ? இந்த மரம் சாமியா? என்று கேட்கக் கூடாது. பண்டைய தமிழகத்தில் இயற்கையைக் கடவுளாக எண்ணி வழிபடும் பழக்கம் இருந்தது. எல்லாக் கோவில்களிலும் தலவிருட்சம் என்று மரங்கள் உண்டு. சிவன் கோவிலில் வில்வ மரம், பிள்ளையார் கோவிலில் அரசமரம், அம்மன் கோவில்களில் வேப்பமரம், அல்லது வேப்ப மரமே அம்மன் கோவில். ஆலமரத்தடியில் சிவன் கோவில் இருக்கும்.

       எல்லாக் கடவுள்களுக்கும் வாகனமாக விலங்குகளையும் பறவைகளையும் சொல்லி அவற்றையும் வணங்குகிறோம். பசுவைத் வணங்குகிறோம் பாம்பைக் கூட கடவுளின் உருவமாக வழிபடும் பழக்கம் இருக்கிறது .பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றி வழிபாடு நடக்கும். இவ்வாறு இயற்கையை வணங்கும் வழக்கம் தமிழனுக்கு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது.

      சூரியன், சந்திரன், மலைகள், நதிகள், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும்  தெய்வங்களாகப் பார்த்து வணங்கிக் கொண்டிருக்கிறோம். பூமியைக் கூட பூமாதா என்று வணக்கத்துக்குரிய தாகச் சொல்வார்கள்.

       அந்த அடிப்படையில் நமக்குப் பயன் தரும் மரங்களைக் கடவுளாக எண்ணினால் தானே, அவற்றை வெட்டுவதற்கு நாம் பயப்படுவோம். அந்த எண்ணமில்லாமல் இன்றைக்குக் கோடிக்கணக்கான மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டு, புவி வெப்பமாதல் என்னும் பயங்கரத்திற்கு ஆளாகி இருக்கிறது உலகம். சாலை விரிவாக்கத்திற்காக மட்டும் பத்து ஆண்டுகளில் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன நம் நாட்டில்.

    மரங்களை தெய்வங்கள் என்று சொல்லிவிட்டால் தொட்டு வணங்கி விட்டுப் போவான் என்று நம் முன்னோர் நினைத்திருக்கலாம் அல்லவா?. அது ஒருபுறமிருக்க வேப்பமரம் மற்ற மரங்களை விட இரண்டு பங்கு ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். வீட்டிற்கு அருகில் வேப்ப மரம் இருந்தால் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிக்கொண்டு மற்ற மரங்கள் தரும் சுத்தமான பிராண வாயுவை விட இரு மடங்கு நமக்கு தருகிறது. நோய்நொடி இல்லாமல் வாழலாம் அல்லவா?

     வேப்பமரத்து நிழல் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்தால் உஷ்ண நோய் குறைகிறது. கடுமையான வைரஸ் நோயாகிய அம்மை நோய் கண்டால் அந்தக்காலத்தில் ஒரே மருந்து வேப்பிலை மட்டும்தான். நோய் கண்டவனைச் சுற்றி வேப்பிலையைப் பரப்பி வைத்திருப்பார்கள்.

      மஞ்சளை தண்ணீரில் கலந்து வேப்பிலையால் நனைத்து வீட்டில் ஆசையாக வளர்க்கும் செடிகளின் மேல் தெளித்து விட்டால் அங்கிருக்கும் சிறுசிறு பூச்சிகள் புழுக்கள் இறந்துவிடும். கிராமங்களில் அம்மைகட்டு என்ற நோய் வந்துவிட்டால் வேப்பிலையை அரைத்து கன்னத்தில் பூசிவிடுவார்கள். வேறு மருந்தே வேண்டாம்.

      நோய்வாய்ப்பட்டு இருப்பவனுக்கு எந்த நோயாக இருந்தாலும் கிராமத்தில் சில பெரியவர்கள் ,அவர்களை பார்வை பார்ப்பவர்கள் என்று கூறுவார்கள் அவர்களிடம் அழைத்துச் சென்றால் கையில் ஒரு கொத்து வேப்பிலையை வைத்துக்கொண்டு நோயாளியை நோக்கி அசைத்துக்கொண்டு மந்திரங்களை உச்சரிக்கும்போது நோய் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

      வேப்பிலையை அரைத்து உருட்டி சிறு குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுக்குள் உள்ள புழுக்கள் இறந்து வெளியேறும். இன்றும் மேல்நாடுகளில் பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு வேப்பிலையைப் பயன் படுத்துகிறார்கள்.

        கோவிலில் திருவிழா வருகிறது கொடியேற்றம் நிகழ்ந்துவிட்டது அடுத்து பத்துநாள் ஒரே கொண்டாட்டம்தான். கூட்டம்தான் . முதல் காரியமாக ஊரின் நான்கு திசைகளிலும் நுழைவாயிலாக அமைந்திருக்கக் கூடிய இடங்களில் வேப்பிலைகளைக் கயிற்றில் கட்டித் பூரணமாகத் தொங்க விட்டுவிடுவார்கள். திருவிழா தொடங்கி விட்டது என்பதற்கான அடையாளம் மட்டும் அன்று.வெளியூரில் இருந்து ஊருக்குள் வரும் புதியவர்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால் வேப்பிலை முகத்தில் விழித்தவுடன் நோய் நீங்கி சரியாகி வந்துவிடுவார்கள். இங்குவந்து பிறர்க்கு நோயை ப் பரப்பவும் முடியாது  என்பது உண்மை.

   மகன் காசிக்கு புறப்பட்டான் மகனைப் பிரிய மனமில்லாத தாய் காசியை நோக்கிப் பயணம் செய்யும் போதெல்லாம் இரவில் புளிய மரத்தடியில் படுத்துத் தூங்கு திரும்பி வரும்போது வேப்பமரத்தடியில் படுத்துத் தூங்கு இதை மறந்து விடாதே. என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள். ஆறு மாதம் கழித்து வரவேண்டிய மகன் ஆறு நாள்களில் வந்துவிட்டான். முதல் நாள் புளியமரத்தின் அடியில் தங்கும் போது உடல் நலம் பாதித்தது. அடுத்த நாள் அதிகரித்தது. மூன்றாம் நாள் முற்றிவிட்டது. இனிமேல் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று முடிவுக்கு வந்தவன், திரும்பி வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று தாய் சொன்னவாறு, வேப்பமரத்தடியில் ஓய்வெடுத்தான். உடல்நிலை தேறியது. அடுத்த நாள் இன்னும் முன்னேற்றம். அடுத்த நாள் முழு நலம் பெற்று வீட்டுக்கு வந்துவிட்டான். இப்படி ஒரு கதை சொல்வார்கள்.

     புளியமரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள். உடலுக்கு ஆகாது. சூடு தரும். அந்தச் சூட்டைத் தணிப்பது வேப்பமரம். காலிலோ கையிலோ அடிபட்டு வீக்கம் ஏற்பட்டால் வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து பத்து போட்டு விட்டால் போதும். வீக்கம் வற்றிவிடும். அம்மன் கோவிலில் சாமி ஆடுவோர் வேப்பந்தழை வைத்துக்கொண்டு ஆடுவார்கள். அக்கினிச்சட்டி எடுப் போர் கைகளில் முதலில் வேப்பந்தழைகளைப் பரப்பிக் கொண்டு அதன்மேல் அக்னிச்சட்டி வைத்துக்கொண்டுதான் ஆடுவார்கள்.

   வேப்பிலை மூட்டம் போட்டால் கொசு அண்டாது. குழந்தை உண்டாயிருக்கும் பெண்ணைக் காரிலோ வண்டியிலும் அழைத்து வந்தால் அவள் கையில் ஒரு இணுக்கு வேப்பிலையைக் கொடுப்பார்கள். வண்டியிலும் சிறிது வேப்பிலையைச் சொருகி வைப்பார்கள்.வெகு தொலைவிலிருந்து மாமிசத்தை கொண்டுவந்தால் ,அதன் மேலே ஒரு இனுக்கு வேப்பிலையைப் போட்டு விடுவோம்.

       வேப்பமரத்துக் குச்சியால் பல் விளக்கி வந்தால் பல் நோய் இல்லை. இயற்கைச் சோப்புகள் என்று சொல்லப்படும் கம்பெனி சோப்புகளில் எல்லாம் வேப்பிலை இருப்பதாக அறிவிக்கிறார்கள். Neem soap என்று சொல்கிறார்கள்.இப்படிப்பட்ட வேப்பிலையும் வேப்பமரமும் தெய்வத்துக்கு இணையானது தானே. ஆன்மீகம் வேறு அறிவியல் வேறு அல்ல.

====

சூடம்

      கற்பூரம் என்ற பெயரால் வழங்கப்படும் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் சூடம். சூடம் இல்லாமல் எந்தக் கோவிலிலும் பூசை இல்லை. கோவில் தீபங்களில் சூடம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

      ஆராதனை தட்டுகளில் திருநீற்றின் மேல் சூடம் ஏற்றி அர்ச்சகர் காட்டும்போது இருகைகளாலும் தொட்டு மூன்று முறை கண்களில் ஒற்றிக் கொள்வோம். கற்பூரம் தரும் இயற்கையான மனமும் அது தரும் இதமான சூடும் கண்களில் படும்போது கண்கள் இதமாய் நோய்க்கிருமிகள் பறந்து போகின்றன.

     இன்றைக்கு மூக்கின் வழியாக பரவுகிறது தோல் மூலம் பரவுகிறது தும்மலில் பரவுகிறது தொட்டால் பரவுகிறது தொடாமலும் பரவுகிறது பேப்பரில் இருக்கிறது பிளாஸ்டிக்கில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லப் பட்ட corona கண்கள் வழியாக பரவுகிறது என்று அண்மையில் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

      அதை இணைத்துப் பாருங்கள். மூன்று முறை தீபத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். வைரஸ் கிருமிகளுக்கு சூடு ஆகாது குளிர்ச்சி தான் அதற்கு தேவை. அதனால்தான் ஏர் கண்டிஷன் பயன்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்கள். கண்களை மெட்ராஸ் ஐ எனும் வைரஸ் பாதித்தால் கூட சூடான ஒத்தடம் கொடுப்பது நம் வழக்கம்.

       சாமிக்கு பூசையின் போது சரவிளக்குகள் ஏராளமான கற்பூரத்தை வைத்து ஏற்றி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுற்றிக் காட்டும்போது நமக்குள்ளே ஒரு பரவசம் தொற்றிக்கொள்ளும்.

      கற்பூரத்தை ஏற்றினால் மட்டுமல்ல. ஏற்றாமல் நமக்கு ஆயிரம் தன்மைகள் செய்கிறது. கற்பூரத் தையும் யூகலிப்டஸ் எண்ணெயும் தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் கொசு அண்டுவதில்லை. கற்பூரத்தை துணியில் கட்டி அடிக்கடி மோந்து பார்த்தால் மூக்கடைப்பு போய்விடும் ஜலதோஷமும் போய்விடும்.corona கூட மட்டுப்படும் என்கிறார்கள்.

      ஏதோ ஒரு திருவிழாவுக்கு போய்விட்டு வந்தாலும் அல்லது நம்பிட்டு விழாவில் பலர் கலந்து விட்டு சென்றாலும் நமக்கு கண் விழுந்துவிடும் என்று சொல்லி சூடத்தை எடுத்து நம் உடலெங்கும் தடவி கடைசியில் தலையை மூன்று சுற்று சுற்றிவிட்டு, மூன்று முறை தூ தூ என்று துப்பி விட்டு வாசலில் வைத்துக் கொளுத்தி விட்டால் கண் கோளாறு நீங்கிவிடும் என்பது நம்பிக்கை .திருஷ்டி சுத்திப் போடுதல் என்று சொல்வார்கள்.

    இதன் உட்பொருள் என்ன?. இதன் உள்ளே பொதிந்திருக்கும் உண்மை என்ன? அன்றைக்கு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்ததால் யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். அதை நீக்குவதற்காக, நம் உடல் முழுவதும் கற்பூரத்தை தடவி தலையை மூன்று முறை சுற்றும் போது மூக்கின் வழியாக அந்த வாசம் உள்ளே இறங்கி மூன்று முறை துப்பும் போது வாய் வழியாக கற்பூரவாசம் நுழைந்து நோய்த்தொற்று இருந்தால் தொண்டைக்குள் இருந்தாலும் அவற்றைத் தொலைத்துக் கட்டிவிடும் என்பதுதானே.

       கையில் சூடம் ஏற்றுவது, நாக்கில் ஏற்றுவது. அதை அப்படியே சாமி மலையேறும்போது விழுங்கி விடுவது எல்லாவற்றிலும் ஒரு அறிவியல் அடிப்படை இல்லாமல் இல்லை. நாகரிகம், ஆன்மிக நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியலுக்கு எதிரானது என்று கற்றுக் கொடுத்ததுதான் அறிவீனம்.

========

சாம்பிராணி

     சாம்பிராணி என்றால் என்னவென்றே பலர் மறந்து போனார்கள். சாம்பிராணிக்கு எத்தனை கால்கள் என்று கேட்டான். நான் எண்ணிப் பார்த்துவிட்டு இரண்டு என்றேன். நான் துணை எழுத்தை எண்ணிச் சொன்னேன். அவன் ஏதோ விலங்கு என்று நினைத்து கேட்டிருக்கிறான்.

      சாம்பிராணிப் புகை இல்லாத கோவில் நிகழ்வுகள் எங்குமில்லை. சாம்பிராணி கூட ஒருவகை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் வகைதான். இயற்கை நறுமண பொருள். சில பேரை திட்டும்போது மட சாம்பிராணி என்று திட்டுகிறார்கள் அது ஏன் என்று தெரியவில்லை. சாம்பிராணி பொடி கடையில் கிடைக்கும். தணல் நெருப்பில் அதை தூவினால் மணக்கிற ஏராளமான புகையைக் கக்கும். கோவில் முழுவதும் நறுமணம் கலந்த புகை நிரம்பி இருக்கும்.

      எல்லாவிதமான பூஜைகளுக்கும் சாம்பிராணி புகை தேவை. வீட்டில் ஏதாவது சடங்கு சாஸ்திரங்கள் செய்ய வேண்டும் ஆனாலும் கூட சாம்பிராணி புகை முதலில் தேவை. அந்தக் காலத்து வீடுகளில் நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் எங்கள் வீட்டில் கூட சாம்பிராணிக்கரண்டி என்று ஒன்று உண்டு.

      குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பக்குவமாகக் குளிப்பாட்டி விட்டு ஈரம் உள்ளே சென்று நோய்வாய் படக்கூடாது என்பதற்காக சாம்பிராணி கரண்டியில் நெருப்பு தயாராக இருக்கும் உடனடியாக சாம்பிராணிப் புகை போட்டு குழந்தையின் உடல் முழுவதும் சுற்றி விடாமல் அந்தப் புகை பரவுமாறு செய்வார்கள்.தலைமுடியை கிளறிவிட்டு தலை முழுவதும் பரப்புவார்கள்.

        பெண்கள் குளித்து முடித்துவிட்டு நீண்ட கூந்தலை காய வைக்க போது சாம்பிராணி புகையை போட்டு கூந்தலுக்குள் செலுத்துவதுண்டு. இதனால் கூந்தல் நறுமணம் பெறுவதோடு பேன் போன்ற தொல்லைகளுக்கும் தீர்வாக அமைந்திருக்கிறது.

     அந்தக் காலத்தில் அகில் என்ற பெயரால் சாம்பிராணி குறிப்பிடப்பட்டது. அகில் புகையை அன்றாடம் கூந்தலுக்கு பாவிப்பதால் தான் பெண்களின் கூந்தல் மனம் வருகிறது என்று நக்கீரர் சிவனை எதிர்த்து வாதிட்டது உண்மை.

     ஜலதோஷம் பிடித்துக்கொண்டு தலை வலித்தால் கூட சாம்பிராணி புகை போட்டு ஆவி பிடிக்கும் பழக்கமும் உண்டு. இன்று எல்லாம் காணாமல் போய்விட்டன.

    நூற்றுக்கணக்கான மனிதர்கள் கூடி நிற்கும் கோவில் யாருக்காவது நோய் இருந்தால் பிறருக்கு தோற்று விடக் கூடாது என்பதற்காக அகில் புகையை கோவில் முழுவதும் பரவ விட்ட நம் முன்னோரின் அறிவியல் அறிவுக்கு இணை ஏது.

    இந்துக் கோவில்களில் மட்டுமன்றி கிறித்தவ தேவாலயங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களிலும் சாம்பிராணி இன்றியமையாததாக விளங்குகிறது. சாம்பிராணியின் இனிய வாசமும் தகுந்த இதமான சூடும் நோய் கிருமிகளை அழிக்கின்றன.

     இன்றைக்கு அழகு நிலையங்களில் போய் பெண்கள் காத்து கடந்து அதிக பணத்தை கொடுத்து steaming செய்துகொள்கிறார்கள். முன்னோர் ஒன்றும் மூடர்கள் அல்ல பக்தியோடு உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொண்டார்கள். இஸ்லாமிய அன்பர்கள் சிலர் பஜாரில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சாம்பிராணி புகையை கொண்டு போய் கடை முழுக்க பரப்பிவிட்டு பணம் வாங்கிக் கொண்டு செல்வதைப் பார்த்துஇருப்போம்.கடைக்கு நிறைய பேர் வந்து போவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் உள்நோக்கம். அந்தக் காலத்தில் மன்னர்கள் முதல் ஜமீன்தார்கள் காலம் வரை அவர்களுக்கு சாம்பிராணி போடுவதற்கென்றே ஒருவன் இருப்பான். இன்றைக்கு வீட்டின் அறைகளை மணக்க வைக்க பல்வேறு மனங்களில் நிறங்களில் spray கிடைக்கின்றன. அவற்றிலுள்ள பெயர் தெரியாத வேதிப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. சாம்பிராணி கூட நவீன மயமாக்கப்பட்ட கட்டி சாம்பிராணி அப்படியே தீயை வைத்தாய் பற்றிக்கொள்ளும் இப்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ சாம்பிராணி புராணம் போதும் என்று நினைக்கிறேன்.

======

கோலம்.

        வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன்.வெள்ளிக்கிழமை மட்டுமல்ல எல்லா நாட்களிலும் காலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி தெளித்துவிட்டு மங்கலகரமாக வாசலில் ஒரு கோலமிட வேண்டும். தமிழர் பண்பாடு இது.

      கோலம் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். கோலமயில் என்று சொல்லுகிறோம் அல்லவா?. கோலத்திற்கு எதிர்ச்சொல் அலங்கோலம். இன்று கோலங்களில் எத்தனையோ வகை. ரங்கோலி என்று ஒன்று வந்திருக்கிறது வண்ண வண்ண ஓவியம் வரைவது போன்றது.அதற்குப் போட்டிகள் எல்லாம் நடைபெறுகிறது. பூக்களால் கோலமிடுவது பூக்கோலம். உப்பை வண்ணப் பொடிகளைக் கலந்து கோலமிடுவது உப்புக் கோலம்.

      எத்தனைக் கோலங்கள் இருந்தாலும் மாக்கோலம் சிறந்தது. இன்று கோலப் பொடிகள் விற்கப்படுகின்றன. கல்லை நுணு க்கிக் கோலப்பொடி ஆக்கி இருக்கிறார்கள். அதிலும் வண்ணங்கள் சேர்த்து கலர் கோலப்பொடி என்று வருகிறது. திருவிழா நாட்களில் கலர் கோலம் போடும் பழக்கமும் நம்மிடையே வந்து விட்டது.

       பண்டைத் தமிழகத்தில் சுண்ணப் பொடியில் வண்ணம் கலந்து கடைத்தெருவில் விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் அவை கோலம் போடும் பயன்பாட்டிற்காக அல்ல. இன்று கூட வடநாட்டில் கொண்டாடும் festival of colours என்று சொல்லப்படும் ஹோலி பண்டிகையின் போது பல வண்ணங்களில் இப் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை அள்ளி ஒருவர் மீது ஒருவர் தூவி விளையாடுவார்கள்.

      கோலம் போடுவது வெறும் அழகிற்காக மட்டுமன்று. உண்மையான கோலம் என்பது பண்டைத் தமிழர் மரபில் மாக்கோலம். என்ன மா? தூய பச்சரிசி மா. பச்சரிசியை இடித்து மாவாக்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள் அதை வைத்துதான் வாசலில் கோலம் இடுவார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

      ஒன்று மாக்கோலம் நம்முடைய வளத்தைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் வாசல் கதவுகள் கூட அரைத்த மாவில் கைகளை வைத்து திருவிழாக்காலங்களில் அடையாளமாக வைப்பர்.

      இரண்டாவது பெண்களுக்கு இயற்கையான உடற்பயிற்சியாக அமைகிறது கோலமிடுதல். தரையில் உட்கார மாட்டார்கள் நின்று கொண்டும் கோலமிடும் பழக்கம் இல்லை. குத்தவைத்து அமர்ந்து கொண்டு கைகளை நீட்டி முதலில் புள்ளிகளை வரிசையாக வைத்து பின்னர் வளை கோடுகளால் அவற்றை இணைத்து ஆகா !என்ன ஒரு அற்புதமான கலை.

    இன்று விரல்களுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லி இரண்டு விரல்களை சேர்த்துக்கொண்டு தேயுங்கள் என்று சொல்கிறார்கள். அதைத்தான் கோலமிடும் போது பெண்கள் செய்கிறார்கள். அப்போது நரம்புகள் தூண்டப்பட்டு உடல் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.வரிசையாக நேராக புள்ளிகளை வைப்பதும் கூட மூளைக்கு நல்ல பயிற்சி. பின்னர் அவற்றை வளை கோடுகளால் இணைக்கும்போது மூளை இன்னும் பயிற்சி பெறுகிறது. கோலம் அழகாக வந்து விட்டால் மனம் நிறைய மகிழ்ச்சி பெருகி விடும். பார்ப்போர் பாராட்டி விட்டால் இன்னும் உற்சாகம் பிறக்கும்.

     வாசலில் கோலம் இடம் பெற்றிருந்தால் அவ்வீட்டில் ஆட்கள் குடியிருக்கிறார்கள் என்பது பொருள். குடும்ப விளக்காகிய பெண் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கிறாள் என்பதைக் குறிக்கிறது.

     இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழனின் அன்னதானம் செய்யும் பண்பு அங்கே நிற்கிறது.வாசலில் அரிசி மாவால் , காலையில் இட்ட கோலம் மாலையில் இருக்காது. காரணம் ஆயிரக்கணக்கான எறும்புகள் அவற்றை உண்டு பசியாறி சென்றுவிடும். ஒரு கோலம் பல்லாயிரம் உயிர்களுக்கு உணவு.

      இன்று அரிசிமாவைப் பயன்படுத்தாமல் கல்லை இடித்த மாவைப் பயன்படுத்துவதாலும். செயற்கை மாவுகளைப் பயன்படுத்துவதாலும் எறும்புகள் ஏமாந்து வீட்டிற்குள்ளே படையெடுத்து சமையலறைக்குச் சென்று முந்திரிப்பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் புகுந்து வேட்டையாடி விடுகின்றன.வாசலில் கோலம் இருந்தால் மாக்கோலம் இருந்தால் அதைத் தாண்டி எறும்புகளுக்கு என்ன வேலை வீட்டுக்குள்?

       இப்போது ஸ்டிக்கர் கோலங்கள் வந்துவிட்டன ஒட்டி வைத்து விடுகிறார்கள். மேலும் கோலமிட கருவிகள் வந்து விட்டன அதற்குள் கோலப் பொடியை வைத்து உருட்டி அமுக்கி எடுத்தால் அழகான கோலம் வந்துவிடுகிறது இவையெல்லாம் பண்பாட்டுக்கு வந்த சோதனைகள்.

     வாசலில் மாக்கோலமிட்டு வளமாய் வாழ்வோம் என்று சொல்லும் நம் ஆன்மீகம் ஆழமான அறிவியல் தத்துவம்.

=====

மஞ்சள்

     மஞ்சள் முகமே வருக. மங்கல விளக்கே வருக. மஞ்சள் முகம் என்பது முகத்தின் இயற்கை நிறத்தைக் குறிப்பிடுகிறதா? அல்லது மஞ்சள் தேய்த்துக் குளிக்கிற பழக்கத்தை, அக்காலப் பெண்கள் வைத்திருந்ததால் மஞ்சளால் விளைந்த நன்மையால் அமைந்த  முகம் என்பதைக் குறிக்கிறதா?

      மஞ்சள் மங்கலக் காரியங்கள் அனைத்திலும் பயன்படும் ஒரு பொருள். மஞ்சள் இல்லாத சமையல் இல்லை. மஞ்சள் கிழங்கை உரசி முகத்தில் தேய்த்து குளித்து வந்தார்கள் பெண்கள்.

      மஞ்சள் இயற்கையாக தோலுக்கு ஒரு நல்ல நிறத்தை தரும் என்பது மட்டுமல்ல. முகத்தில் உடலில் தொற்று இருக்கும் நச்சுக் கிருமிகளை கொன்று அகற்றும் பொருளாகவும் இருக்கிறது. முகத்தில் பருக்கள் தோன்றாமல் பாதுகாத்துக் கொள்கிறது. முகத்தில் சுருக்கம் தோன்றாமல் வயதான தோற்றத்தை விரைவில் கொண்டு வராமல் பாதுகாத்துக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் மஞ்சளை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வரும் பெண்களுக்கு ஒருவேளை முகத்தில் தேவையற்ற முடிகள் இருந்தாலும் அகன்று விடும் என்று கூறுகிறார்கள்.

      சமைக்கின்ற பொருள்களில் இருக்கின்ற நச்சுக்களை அகற்றுவதாக இருக்கிறது மஞ்சள். குறிப்பாக மாமிசம் சமைப்பதற்கு முன்பு மஞ்சள் பொடியை போட்டு வைப்பதன் காரணம் அதில் இருக்கும் தேவையற்ற கிருமிகளை அழிப்பது தான். உடலில் அதிகமான கொழுப்பை த்தங்க விடாமல் வெளியில் அனுப்பிவிடும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

        தண்ணீரில் மஞ்சளைப் போட்டு வெளியில் இருந்து வீட்டுக்குள் வருகிற போது அதைப் பயன்படுத்திக் கால்களை நன்றாக கழுவி விட்டால் வெளியிலிருந்து, எந்த கிருமிகளும் வீட்டுக்குள் வராது. அத்துடன் சிறிது வேப்பிலையையும் போட்டுவிட்டால் இன்னும் அதிகப் பயன் கிடைக்கும்.

      கோவில்களில் மஞ்சள் பயன்பாடு அதிகம். அதை விளக்கமாக சொல்ல கட்டுரை நீண்டுகொண்டே போகும். அந்தக் காலத்தில் தங்கத்தில் தாலி கட்டிக் கொள்ளவில்லை ஒரு மஞ்சள் நிற கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி அதை த் தாலியாகப் பெண்ணின் கழுத்தில் கட்டினர்.

        குழந்தைகளின் இடுப்பில் அரைஞான் கயிறு. அதில் ஒரு மஞ்சள் கிழங்கு கட்டப்படும்.காரின் முன்புறம் கட்டப்படும் பொருட்களில் மஞ்சள் கிழங்கு ஒன்று. நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காயின் மேல் மஞ்சளைப் பூசி தான் பயன்படுத்துவார்கள்.

      கிராமங்களில் மக்கள் திரளாக கூடி கொண்டாடும் திருவிழா நேரங்களில் தண்ணீரில் மஞ்சளைக் கலந்து மஞ்சள் தண்ணீர் ஒருவர்மேல் ஒருவர் ஊற்றி விளையாடுவார்கள். அத்தை மகன் மாமன் மகள் மஞ்சள் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளி க்க அங்குமிங்கும் ஓடுவது ஒரு தனி இன்பம் அவன் தெளிக்கும் மஞ்சள் நீர் அவள் மீது பட்டுவிட்டால் திருமணம் உறுதியாகி விடும் என்பது ஒரு நம்பிக்கை. புதிதாக தைக்கப்பட்ட உடையில் ஒரு ஓரத்தில் மஞ்சளை நனைத்து ஒரு பொட்டு வைப்பார்கள். திருமண அழைப்பிதழ்களில் நான்கு ஓரங்களிலும் மஞ்சள் பொட்டு வைக்கப்படும்.

      வயதுக்கு வந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு நடத்துவார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான் நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு செல்லக்கூடாது. இதையும் corona வந்த பிறகுதான் நாம் உணர்கிறோம். அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான்

=====

குங்குமம்.

     குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம். குங்குமச் சிலையே வருக.

குங்குமம் கோவிலில் வழங்கப்படும் பொருள். சிவப்புக் கலரில் இருப்பதுதான் குங்குமம். அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதெல்லாம் வேறு.

     ஒரு பெண் நெற்றியில் பெரிதாகக் குங்குமம் இருந்தால் அவள் மங்கல மங்கை. கணவனை உடையவள் என்பதெல்லாம் பொருள். சிலப்பதிகாரம் மங்கலப் பெண்கள் தங்கள் உடலில் ஐந்து இடங்களில் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

         தெய்வங்கள் சிலைகளின் நெற்றியில் பெரிய குங்குமத்தைப் பார்க்கலாம். பின்னாளில் குங்குமம் மறைந்து அதே அளவிற்கு சாந்துப் பொட்டு உருவாகிவிட்டது. குங்குமம் காற்றில் உதிர்ந்து விடலாம். கை பட்டுக்  கலைந்துவிடலாம் எனக்கருதி சாந்துப்பொட்டு வந்திருக்கலாம். ஆனால் அதுவும் அந்தக் குறிப்பிட்ட வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

      குங்குமம் வட்டமாகத் தான் இடப்பட வேண்டும். பெண்களின் இரண்டு புருவங்களும் சந்திக்கும் இடத்தில் வட்டமாக இடப்பட வேண்டும்.இதற்கு அறிவியல் ரீதியாக இன்றைக்கு கூறும் காரணம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

       இரண்டு புருவங்கள் சந்திக்கும் இடத்தில்தான் வசியம் செய்யும் புள்ளி இருக்கிறதாம். இன்றைக்கு மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் என்றெல்லாம் சொல்லப்படும் கலைகளை ப் பயன்படுத்திப் பெண்களை வசியப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அந்த புள்ளியை குங்குமத்தால் மறைத்து விடும் பழக்கம்.

     இதற்கு எதிரானது தான் கருப்பு மை. மை வைத்துக் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டார்கள். என்று கூறுவதை கேட்டு இருக்கலாம். புருவத்தின் மத்தியில் இப்போதும் நம் மனதை ஒருமைப்படுத்த சொல்லுவார்கள். அங்குதான் மனிதனுக்கு நெற்றிக்கண் திறக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. யோகப் பயிற்சி செய்யும் இடங்களில் கூட உங்கள் கவனத்தை முழுவதும் புருவங்களுக்கு மத்தியில் கொண்டு வாருங்கள். ஓம் என்று உச்சரியுங்கள் என்று கூறுகிறார்கள்.

      இன்றைக்கு நாகரீகம் என்று கருதி குங்குமத்தை ப் புறம் தள்ளிவிட்டு ஸ்டிக்கர் பொட்டு வந்துவிட்டது. நெற்றியில் ஒட்டிக்கொள்ள மீண்டும் எடுத்து சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். பல்வேறு வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில். பாம்பு பல்லி பருவத்தில் கூட கிடைக்கிறது. Reflector sticker பொட்டு கூட இருக்கிறது.இரவில் வண்டி ஓட்டிக்கொண்டு போனால் அவள் வைத்திருக்கும் பொட்டு மீது லைட் பட்டு நம்மீது திரும்ப சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தது போல பாய்ந்து கண் தெரியாமல் போய்விடுகிறது.

    குங்குமம் வைக்கும் பழக்கம் கூட ஆன்மிகம் சார்ந்த அறிவியல் அல்லது அறிவியல் சார்ந்த ஆன்மிகம் என்று சொல்லலாம்.

=====

சந்தனம்.

       சந்தனம், மரம் கொடுத்த ஒரு வரம். சந்தனமரம் நிறைந்த சந்தன காடுகள் நம் நாட்டில் அதிகம் உள்ளன. சந்தனமரம் இயற்கையாகவே நறுமணத்தை பரப்புகிறது. சந்தனக்கட்டையை உரசி உடலில் தேய்த்துக் குளிப்பது வழக்கம். சந்தனம் நறுமண பொருள் மட்டுமல்லாமல் புனிதமானதாகவும் கருதப்படுகிறது.

     அக்காலத்தில் ஆண்கள் மேலாடை அணிவதில்லை. அதற்குப் பதிலாக சந்தனத்தைத் குழைத்து மார்பில் பூசிக் கொள்வார்கள். சந்தனம் பூசாமல் வெளியில் வர மாட்டார்கள். கோவிலில் சாமி சிலைகளுக்கு சந்தன அபிஷேகம் செய்யப்படும். சந்தனக்காப்பு என்றுசொல்லி முழுவதுமாக சந்தனத்தால் மூடி வைப்பார்கள். கோவிலில் விபூதி குங்குமம் சந்தனம் மூன்றும் முக்கியமானவை. எல்லா நல்ல காரியங்களுக்கும் சந்தனம் உண்டு.

     இன்று நாம் பயன்படுத்தும் நவீன சோப்புகளில் கூட சாண்டல் சோப்பு என்று சந்தனத் தைலத்தைச் சேர்த்து விற்கிறார்கள். முகத்தில் போடும் பவுடர் கூட சந்தன வாசத்தில் வருகிறது. இதில் இயற்கையான சந்தனமும் மஞ்சளும் கலந்து இருக்கிறது என்று முகத்தில் பூசும் கிரீம் விளம்பரம் செய்கிறார்கள்.

      சந்தனமும் கிருமிநாசினியாக வேலை செய்கிறது. மேலும் சந்தனம் இயற்கையாகக் கிடைத்த antiseptic.

கோவிலில் வேண்டிக்கொண்டு முடி எடுத்தவுடன் அந்த மொட்டை தலையில் சந்தனத்தைக் கரைத்துப் பூசிவிட்டால் போதும். டெட்டால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே நாம் பின்பற்றி வரும் பழக்கம்.

      திருநீறு பூசி சந்தனம் வைத்து அதன் மேல் குங்குமம் இடுவது எத்தனைச் சிறப்பான காரியமாகக் கருதப்பட்டது. திருமண வீடுகளில் வாசலில் சந்தன கும்பா இருக்கும். கரைக்கப்பட்ட சந்தனம் வந்தவுடன் அதில் கையை விட்டு எடுத்து இரண்டு கைகளிலும் முழங்கை வரையிலும் மேலே ஏற்றி பூசி விட்டு உள்ளே போவதுதான் வழக்கம். இதற்கு என்ன காரணம் வெளியிலிருந்து வந்த கிருமிகள் எல்லாம் வாசலோடு சரி.

     அமைக்கப்பட்ட மேடையில் சம்பந்தம் செய்பவர் இருவரையும் உட்கார வைத்து ஒருவர் கையில் அடுத்தவர் சந்தனத்தை பூசச் செய்வார்கள். மணமகள் கன்னத்தில் சந்தனத்தால் மூன்று கோடு போட்டு இருப்பார்கள். யாராவது கொஞ்சினால் கூட நோய் கிருமி பரவாது.

  இப்போது சொல்லுங்கள் நம்முடைய ஆன்மீக காரியங்கள் அனைத்தும் அறிவியலோடு தொடர்புடைய தான் இல்லையா?

======

தேங்காய்.

       எத்தனையோ விதவிதமான காய்கள் இருக்கின்றன. அவற்றின் பயன்களும் வேறு வேறு வகையில் இருக்கின்றன. ஆனால் திருக்கோவில்களில் வழிபாட்டுக்கு நாம் பயன்படுத்தும் காய் தேங்காய் மட்டுமே.

     தேம்+காய். தேம்… என்னும் சொல் தெய்வத்தைக் குறிக்கும். தெய்வத்துக்கு உகந்த காய் தேங்காய். அல்லது தெய்வத்தன்மை உடைய காய் தேங்காய் என்று கொள்ளலாம். கோவில்களில் தேங்காயின் பயன்பாட்டை அனைவரும் அறிவோம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. தேங்காய் உடைத்தல். சிதறு தேங்காய் போடுதல். ஐயப்பன் கோவிலுக்கு இங்கிருந்து நெய் தேங்காயைச் இருமுடியாக கட்டி சுமந்து போவார்கள்.

      தேங்காயும் வாழைப்பழமும் தான் எப்போதும் பூஜைக்கு உகந்த பொருட்கள். நாம் பக்தியோடுகொண்டு செல்லும் தேங்காயை உடைத்து அர்ச்சகர் இரண்டு முறிகளையும் சாமியைப் பார்க்க திருப்பி வைத்து விடுவார். அதற்கு என்ன பொருள் என்றால் கடவுளைப் பார்த்து, என் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறேன். இதோ பார் இந்த த்தேங்காய் போல என் உள்ளமும் வெண்மையாகத்தான் இருக்கிறது என்னை ஏற்றுக்கொள் என்பது பொருள்.

      வெண்மை என்பது மாசுமருவற்ற தூய நிறம். தேங்காய் வெளியிலே கடுமையான ஓட்டைக் கொண்டிருந்தாலும் உள்ளே சுவையான இனிக்கிற நீரையும் வெண்மையான பருப்பையும் கொண்டிருக்கிறது அல்லவா?. அதைப்போல என் வெளி உடம்பு எப்படி இருந்தாலும் என் மனம் தேங்காயை போல இருக்கிறது என்று காட்டுவதற்காக இந்த ஐதீகம்.

       அத்துடன் சேர்த்து வாழைப்பழம் என் மனம் கல் போல் இல்லை இந்த கனிபோல் கனிந்து இளக்கமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக. இது ஒருபுறமிருக்க தேங்காயின் நன்மைகளைச் சொல்வதற்கு ஒரு பக்கம் போதுமா?.

    தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் சைவமும் அசைவமும் தேங்காய் சேர்க்காத ஒரு பதார்த்தம் கிடையாது. வீட்டு நல்ல நிகழ்வுகளிலும் தேங்காய் பயன்படுகிறது. தேங்காயில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. தேங்காயையும் வாழைப்பழத்தையும் மட்டுமே உணவாக உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்கிற சாமியார்கள் பலரும் இன்றும் உள்ளனர்.

      தேங்காய்ப்பால் தேவாமிர்தம். நம்முடைய இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒன்பது சுவைக்கு மட்டுமன்று வயிற்றுக்குள் இருக்கும் அல்சர் புண்கள் குணமாக்கும் மருந்து என்பதையும் உணரவேண்டும்.

     எல்லாக் காய்களும் பழுத்துப் பழம் ஆகும். ஆனால் தேங்காய் பழுப்பதில்லை. தேங்காய்க்கு இன்னொரு பெயர் தெங்கம்பழம். காயையே பழம் என்று சொல்வார்கள்.

தேங்காயில் கொழுப்பு இருக்கிறது என்பதைக்கூட இயற்கை ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. சமைக்காமல் சாப்பிடுங்கள் சமைக்கும் போது தான் கொழுப்பு உருவாகிறது என்பது அவர்கள் கருத்து. தேங்காயைத் துருவினால் அதை தேங்காய்ப்பூ என்று சொல்வோம். தேங்காய் பூவை தூவினால் மட்டுமேபொரியல் சுவைக்கும்.

      தேங்காய் உண்டு நோய் நீங்கி ஆரோக்கிய வாழ்வு பெறுவது குறித்தும் தேங்காய் நம் உள்ளத்தைக் காட்டும் ஒரு உருவக பொருள் என்பதை உணர்ந்தும் கோவிலில் பூசைக்குப் பயன்படுத்தப்படுகிறது. எல்லோரும் பூசைக்கு எடுத்துக்கொள்வதால், என்று இரட்டுற மொழிதல் பாட்டு இருக்கிறது தேங்காயும் சிவபெருமானும் ஒன்று என்று சொல்கிறது அப் பாட்டு.

    தென்னை மரம் தான் கற்பகவிருட்சம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. நம் உள்ளம் தேங்காயைப் போல் தூய வெண்மையாக இருக்கவேண்டுமானால். உள்ளத்தில் இருக்கும் காமம், கோபம், லோபம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.