April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

சித்திரகுப்தர் வழிப்பாட்டின் சிறப்புகள்

1 min read

Special features of Chitragupta worship

சித்திரை மாதப் பவுர்ணமி சித்திர குப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்று தான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்திர குப்தர்.

ஒரு முறை அனைத்து திக்குப்பாலர்களும் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் யமனின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் சிவபெருமான்.

“இறைவா பூமியில் மக்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் நானோ ஒருவன் அனைவரது பிறப்பு இறப்பு கணக்குகளையும் அவர்களது பாவ புண்ணிய கணக்குகளையும் என் ஒருவனால் சமாளிக்க முடியவில்லை. எனக்குத் துணையாக கணக்கு வழக்குகளை மிகக் கவனமாகப் பாதுகாத்து எழுதி வைக்கும் நம்பிக்கையான உதவியாளன் ஒருவன் கிடைத்தால் என் பாரம் குறையும் என்று வேவண்டுகோள் வைத்தான் எமன்.

சிவனும், உன் கோரிக்கை நியாயமானது தான். உரிய நேரம் வரும் போது உனக்கு அந்த உதவியாளன் கிடைப்பான்! என்று அருளினார் அகமகிழ்ந்த யமன் தன் உலகம் சென்றான். எமனுக்கு உதவியாளனைப் படைக்கும் பொறுப்பை சிவபெருமான், பிரம்மனிடம் ஒப்படைத்தார்.
பிரம்மா, சூரியன் ஒருவனால்தான் இத்தகைய ஒருவனைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். பிரம்ம தேவர் சூரியன் மனதில் ஆசையைத் தோற்றுவித்தார். அதனால் அவன் மனதில் காதல் உண்டானது. வானவில்லை அழகான பெண்ணாக மாற்றி, நீளாதேவி என்று பெயரிட்டு, அவளைத் சூரியன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சித்திரா பவுர்ணமியன்று பிறந்தவர் தான் சித்திரகுப்தர்.
(சித்திர குப்தரின் பிறப்பு பற்றி இன்னொரு புராண வரலாறும் உண்டு.
கைலாயத்தில் அழகான தங்கத் தகட்டில் சித்திரம் ஒன்றை வரைந்தாள், பார்வதி, சிவபெருமான், அதற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்திர குப்தர் எனப்பட்டார். சித்திர புத்திரன் எனவும் சொல்வார்கள்.)

சித்திர குப்தருக்கு உரிய வயது வந்தவுடன் கல்வி கற்பித்தார் சூரிய பகவான். கல்வி, கணிதம், இலக்கணம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவர். தந்தையின் யோசனைப்படி ஈசனை நோக்கி தவமிருந்தார். சிவபெருமான் அவரது தவத்திற்கு மெச்சி நரில் தோன்றி, இனி நீ நினைத்தது அனைத்தும் நடக்கும் என்று வரமளித்தார்.
அதை சோதித்துப் பார்க்க படைப்பு தொழிலில் இறங்கினார் சித்திரகுப்தர். கவலைக்கு உள்ளன பிரம்மா, சூரியனை அழைத்து விஷயத்தைக் கூறினார். உடனே சூரியன், மகனை அழைத்தார். மகனே! படைப்புத் தொழில் பிரம்மனுக்கு உரியது என்று மகேஸ்வரனால் முன்பே ஏற்படுத்தப் பட்டுவிட்டது. அதனால் அதில் நீ தலையிடக் கூடாது.
நீ பிறந்ததே யமனின் உதவி யாளனாக இருந்து, மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கவனித்துக் கொள்ளத்தான். எனவே நீ அங்கு சென்று உயிர்களின் கணக்குகளை யமனுக்கு எடுத்துக் கூறு! அவர் அதற்குத் தகுந்தபடி தண்டனை அளிப்பார். என்று சொல்லி ஆசிர்வதித்தார். அதோடு என்றும் மாறாத மனிதனின் கணக்கு எழுதும் புத்தகத்தையும் அளித்தார்.

அதைச் சிரமேற்கொண்ட சித்திர குப்தர். யமலோகம் சென்று விவரங்களைக் கூறினார். தன் நம்பிக்கைக்குரிய உதவியாளன் கிடைத்து விட்டான் என்று உடனே சம்மதித்தார் யமதர்ம ராஜன். இறையனார்க்கு நன்றியும் தெரிவித்தார்.

அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால் ரகசியம் காப்பவர் என்று பொருள்.

இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும் மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர்.

சித்திர புத்திர நயினார் நோன்புக் கதை

பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.

இந்த நோன்புக்கு ஒரு புராணக் கதை உண்டு
பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள்.
பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.
தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள்.
அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க்கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.
உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்களுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள்.
அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.