June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கீழடி அகழாய்வில் தங்கக்காசு கிடைத்தது

1 min read

Gold coin found at Kiladi

இன்றைய தமிழ்நாட்டின் பூமிக்கடியில் பண்டைய தமிழர் நாகரிகம் ஆங்காங்கே புதைந்து கிடக்கிறது. அதை வெளிக்கொண்டு வந்து ஆதாரத்துடன் நிரூபிக்கும் அகழாய்வுகள், கீழடி (சிவகங்கை மாவட்டம்), ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்) உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கீழடியிலும், அதைச்சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் போன்ற கிராமங்களிலும்  மத்திய தொல்லியல் துறையினர் நடத்தும் 6-வது கட்ட அகழாய்வு, கடந்த பிப்ரவரியில் தொடங்கி, “கொரோனா பொது முடக்கம்” காரணமாக இடையில் கொஞ்சம் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் கீழடி அகழாய்வில், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள், விலங்கின் முதுகெலும்பு போன்றவை கிடைத்தன. இவை 2,500 ஆண்டு தொன்மை வாய்ந்தவை என ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்தன. 

இந்த நிலையில் இப்போது தங்கக்காசு ஒன்றும் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளது. 300 மில்லி கிராம் எடையுள்ள இந்த தங்கக்காசின்  ஒரு புறம் 12 புள்ளிகளும், 3 கோடுகளும் உள்ளன. மறுபுறம் சிங்கமுகத்துடன் நாமமும், சூரியன் போன்ற அமைப்பும் உள்ளன.

இதைப் பார்வையிட்டு ஆய்வு நடத்திய தொல்லியல் துறையினர் கூறுகையில், “வீரராயன் பணம் என அழைக்கப்படும் இந்த தங்கக்காசு 17-ம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்துள்ளது” என்றனர்.

தங்கக்காசுடன் 5 செப்புக்காசுகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 16-ம் நூற்றாண்டில் பழக்கத்தில் இருந்தவை போல் தெரிகின்றன என்று தொல்லியல் துறையினர் குறிப்பிட்டனர்.

கீழடி அகழாய்வில் கி.மு. 350-ல் (அதாவது 2,370ஆண்டுகளுக்கு முன்) பயன்பாட்டில் இருந்த பொருட்களுடன் தற்போது கி.பி. 1600, 1700-ம் ஆண்டுகளின் தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.