கதை கேளு, கணிப்பு – சிறுகதைகள்- முத்துமணி
1 min read
Kathai keelu and kanippu Short stories By Muthumani
கதை கேளு
“இன்னைக்குக் கணக்கு வாத்தியார் ஸ்கூலுக்கு வரலையாடா சோமு?”. “ஆமாடா, நான் கூட ஹோம் ஒர்க் பண்ணல. வந்திருந்தா மண்டையை உடச்சிருப்பார். நல்ல வேளை வரல” என்றான் முகேஷ்.
“அதனால தான்டா நல்லசாமி சார் வந்தாங்க கணக்கு பீரிட்ல” என்று சொன்னவன் பாண்டி.
“அவர் எப்போ வந்தாலும் கிளாஸ் செம ஜாலிதானடா” என்று சொன்ன மதன்.
ஆமாடா நல்ல நல்ல கதையா சொல்லுவாரு ஜோக் அடிச்சிகிட்டே இருப்பாரு. யாரையும் திட்ட மாட்டாரு. அடிக்க மாட்டாரு. முக்கா மணி நேரம் போறதே தெரியாது. அவர் எல்லாக் கிளாஸ்க்கும் கதைதான் சொல்லுவார்டா.
கதை சொன்னாலும், அதுல நமக்கு ஒரு புத்திமதியும் இருக்கும்டா. இன்னைக்குக்கூட பாத்தியா? காக்கா கதை. காக்கா கூட்டம் எது கிடைச்சாலும் சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுப் பங்கு வச்சி சாப்பிடுறத எப்படி வேடிக்கையா சொன்னாரு? மறக்கவே முடியாதுடா.
-இந்த நாலு பேரும் ஒரே பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் நண்பர்கள். பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இப்படி பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.
அப்போது ரோட்டில் ஒரு, மணி பர்ஸ் கிடப்பது முகேஷ் கண்ணில் பட்டது. அதோ மணி பர்ஸ். உள்ளே பணம் இருந்தாலும் இருக்கும். என்று சொல்லிக் கொண்டு ஓடிப்போய் எடுத்தான். மற்றவர்கள் ஆவலோடு பார்த்தார்கள்.
பர்சை திறந்தான் முகேஷ். உள்ளே பணம்.நான்கு நூறு ரூபாய் நோட்டுகள்.
“ஆஹா! பணம்டா “என்றான் சோமு.
“ஆமாடா 400 ரூபாய்டா “வாயைப் பிளந்தான் பாண்டி.
“டேய் முகேஷ், நாம நாலு பேரும் இந்த பணத்தை ஆளுக்கு 100 ரூபாய்ன்னு பங்கு வச்சிக்கலாம்” என்றான் மதன்.
“அது எப்படிடா? ” என்று கேட்டான் முகேஷ்.
“அதான் நூறு ரூபா நோட்டு நாலு நோட்டு இருக்கே. எங்களுக்கு ஆளுக்கு ஒன்னா கொடு. நீ ஒன்னும் வச்சுக்கோ.” என்றான் சோமு.
” போங்கடா! என்னை என்ன இளிச்சவாயன்ன்னு நினைச்சிங்களா?. நான் தானடா மணி பர்சை பார்த்தேன். என்றான் முகேஷ்.
“நீதாண்டா முதலில் பார்த்த. இல்லன்னு சொல்லல. ஆனா நாம நாலு பேரும் சேர்ந்து தான வந்தோம் என்றான்” மதன்.
“நான் தான் பார்த்தேன். நான் தான் சொன்னேன் .நான்தான் போய் எடுத்தேன். உங்களுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்லடா.”
“டேய் முகேஷ் இது என்னடா நியாயம் நாமெல்லாம் பிரெண்ட்ஸ் தானடா”. “ஃப்ரெண்ட்ஷிப் வேற. பணம் வேற. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பாத்துட்டு போங்க. இது நான் கண்டெடுத்தது எனக்குத்தான் சொந்தம்” என்றான் முகேஷ் கடுமையாக.
“டேய் முகேஷ் ஒழுங்கா எங்களுக்குப் பங்கு கொடுக்காட்டி நாளைக்கு பள்ளிகூடத்துல கணக்கு வாத்தியார்ட்ட உன்னை மாட்டி விட்டுடுவோம். நாங்க மூணு பேரும் சேர்ந்து நேத்துக்கூட கணக்கு காப்பி அடிச்சே. போன மாசம் மார்க் அட்டையில் உங்க அப்பா கையெழுத்து நீயே போட்ட ஞாபகம் வச்சுக்கோ”
“சொன்னா சொல்லுங்கடா. இதுக்கெல்லாம் பயந்த ஆளு நான் இல்லை. நிச்சயமா இது எனக்கு தான் சொந்தம். எவனுக்கும் பங்கு கொடுக்க முடியாது .இதுக்கு மேல பேசினா பாத்துக்கோ.”
” டேய் இன்னைக்குக் கூட நல்லசாமி சார், காக்கா கத சொன்னார். எது கிடைச்சாலும் பங்குவச்சுக்கணும்னு. அது உனக்கு புரியுது இல்லை? அப்படிப்பார்த்தா, எங்களுக்கும் கொடுக்கணும். காக்கா கதைய மறந்துட்டியா?”.
“அது கதை. காதுல வாங்கிட்டு விட்டுட்டேன். போங்கடா.” சொல்லுடா முகேஷ் நீதான் பார்த்த நீதான் எடுத்த நாங்க ஒத்துககிறோம். அப்ப ஒன்னு செய்யலாம் எங்களுக்கு ஆளுக்கு 100 ரூபாய் மட்டும் கொடு. நீ ஒரு நூறு ரூபாயையும் அந்த மணி பர்சையும் சேர்த்து வச்சுக்கோ” என்றான் சோமு.
“இது நல்ல கதையா இருக்கே? ரூபாய் எனக்குத்தான். பர்சும் எனக்குத்தான். “டேய் ஆளுக்கு நூறு ரூபா வேண்டாம்டா. பாதியாவது கொடுடா. ஆளுக்கு அம்பது ரூபா கொடு”.
“பத்து ரூபா கூட கிடையாது தர முடியாது.”
“டேய் ஒரு நூறு ரூபா குடு டா”.
“இதுக்கு மேல கேட்டா அடிப்பேன் டா”.
அப்போது அந்த வழியே கைலியைக் கட்டிக்கொண்டு பெரிய மீசையோடு மாரி வந்தான். மாரி அந்த ஏரியாவுல பெரிய ரவுடி. பிக்பாக்கெட். அவனைப் பார்த்ததும் பசங்க பயந்துட்டாங்க.
” டேய் சின்ன பசங்களா! இந்த இடத்துல ஏதாவது மணி பர்சைப் பார்த்தீர்களா?”
பயத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க முகேஷ் கையிலிருந்த மணி பர்சை பார்த்துட்டான மாரி.
“டேய் இதுதாண்டா”.
“ஆமாண்ணே நாங்க நாலு பேரும் தான் பார்த்தோம்.நாலு பேரும் சேர்ந்துதான் எடுத்தோம். இல்லடா? என்றான் முகேஷ்.
மூணு பேரும் சேர்ந்து “இல்லடா. நாங்க நாங்க எங்கடா பார்த்தோம்? நீ மட்டும் தான் பார்த்த. நீ தான் எடுத்த. நீ பர்சை எடுத்தது எங்களுக்குத் தெரியாது நாங்க பார்க்கவே இல்லையே.”
“பொய்யாடா சொல்ற, ஓங்கி இரண்டு அறை அறைந்தான் மாரி முகேஷுக்கு மயக்கமே வந்து விட்டது பர்சை பிடுங்கித் திறந்து பார்த்துட்டு எவ்வளவு இம்புட்டுதான் இருந்துச்சா இன்னும் இருந்துச்சா?.
“சத்தியமா அவ்வளவுதாண்ணா இருந்துச்சு” என்றான் மகேஷ்.
“நம்ப மாட்டேன்.” டவுசர் பாக்கெட்டில் கையை விட்டான் வெளியே எடுத்தான் 50 ரூபாய் வந்தது. “திருட்டு ராஸ்கல். ஐம்பது ரூபாயை ஒளிச்சு வச்சுகிட்டு பொய் சொல்றியா?”.
“ஐயோ சத்தியமா இல்லண்ணே. அது என் காசு. சேத்து வச்ச காசு .அதை மட்டும் கொடுத்துடுங்க”. காலால ஓங்கி ஒரு மிதி மிதிச்சிட்டு, அதையும் சேர்த்துக் கொண்டு போய்ட்டான் மாரி.
வலியோடு அழுதுகொண்டு “எல்லாரும் சேர்ந்து என்னை மாட்டி விட்டீர்களே. இதுதான் நட்பா ? எனக்கு மட்டும் அடி வாங்கி கொடுதுட்டீங்க “என்று அழுதான் முகேஷ். “நாங்க உண்மை தானடாசொன்னோம்.எங்களுக்கு அந்த பணத்துக்கும் என்ன சம்பந்தம் ?அது உனக்கு சொந்தம்.
நல்லசாமி சார் கூட சொன்னார்களா கதை இல்லை நண்பரகலக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு “அதையும் மறந்துட்டீங்களா?” கேட்டான் முகேஷ். அடுத்தவங்க விசயத்துல தலையிடக்கூடாதுன்னு பேசாம வாய மூடிட்டு இருக்கணும். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்துல தலையிடக்கூடாதுடன்னு நல்லசாமி சார் சொன்னாருல்ல ? அதைத்தான் நா” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“டேய் தயவுசெய்து என்ன மன்னிச்சிடுங்கடா”.
“சரி வா மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னிக்கலாம். அதையும் சார் தான் சொல்லி இருக்காரு. இப்போ உன்னால நடக்க முடியாது சைக்கிள்ள ஏறு உட்காரு. நாங்க தள்ளிட்டு வாரோம்.போற வழியில டாக்டர் இருக்காரு .பார்த்து ஊசி போட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்”.
“அதைவிட முக்கியம் ரெண்டு நாளைக்கு முன்னால, நான் சொன்ன நரிக் கதையை மறந்துட்டீங்க. அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது”. சொன்னது யாருன்னு திரும்பிப்பார்த்தாங்க நல்லசாமி சார் நின்னுகிட்டு இருந்தார். நாலு பேரும் காலில் விழுந்தார்கள்.
=========
கணிப்பு

காலையில் சீக்கிரமாப் போயிட்டா நல்லது. முதல் ஆளா பாத்துடலாம். கூட்டம் வந்தா கஷ்டம். ஸ்டாப்புக்கு வந்தாச்சு. அடிக்கடி டிவில நோய்நொடி பத்தி எவனாவது பேசுறான். பேட்டி கொடுக்கிறான். கண்டமேனிக்கு விளம்பரம் பண்ணுறான். இதல்லாம் பார்க்கப்பிடாது. பார்த்துட்டா அப்புறம் நமக்கே எல்லாம் நோயும் இருக்கிற மாதிரி தோணுது.
கொஞ்ச நாளா மாடிக்கு படியேறும் போது கொஞ்சம் மூச்சு வாங்குது. லெப்ட்சைட் லேசாவலிக்கிற மாதிரி தோணுது. 55 வயசு ஆகுது .இதுவரைக்கும் காய்ச்சல் தலைவலிக்குக்கூட ஆஸ்பத்திரி பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன் . என்னத்தையாவது கசாயம் குடிச்சுகிட்டு ,கைப்பக்குவம் பார்த்துகிட்டே சமாளிச்சுக்குவேன்.
இவ சும்மா இருக்க மாட்டா, “நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றீங்க. சும்மா விடக்கூடாது. வயசு ஆகுது இல்ல. மதுரைக்கே போக வேண்டாம்.இப்பதான் நம்ம ஊர்ல எல்லா வசதியும் உள்ள ஆஸ்பத்திரி புதுசா திறந்துருக்காங்களே. புதுப்புது மிஷின்ல செக் பண்றாங்க. இங்கேயே பார்த்துக்கலாம்.” மூணு நாளா புராண்டி எடுக்கிறா.
ஒன்பது மணிக்கு மினி பஸ்ஸிலிருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்கு வந்தாச்சு. அதுக்கு முந்தி ஏகப்பட்ட கூட்டம். அவ சொன்ன மாதிரி பெரிய ஆஸ்பத்திரி ரெண்டு மூணு மாடி இருக்கும் போல. “என்னடி இவ்வளவு கூட்டமா இருக்கு?..
“நீங்க பேசாம இதில் உட்காருங்க” சொல்லிட்டு பெயர் கொடுக்கப் போனா. பேர் பதிவு செய்ய 200 ரூபாய்.
ஒரு 15 நிமிஷம் கழிச்சு ஒரு பாப்பா வந்தா” யாரு சங்கரலிங்கம்?” “நான்தான்”.
“வாங்க “
உயரம் எடை எல்லாத்தையும் பார்த்து குறித்து கிட்டா. ஒரு போட்டோவை எடுத்தாங்க.
“உட்காருங்க” .
பத்து நிமிஷம் கழிச்சு இன்னொரு பாப்பா வந்தா. கையில் அட்டை பேப்பர்.
” உங்களுக்கு என்ன செய்யுது?’.
“இவதான் டாக்டரா?” நான் கேட்டேன். என் வாயை பொத்திய என் மனைவி விவரத்தைச் சொன்னா. அவள் பேப்பரில் எழுதி கையில் கொடுத்து விட்டு “இதை வைத்துக் கொள்ளுங்கள்.காலையில் சாப்பிட்டீங்களா.?.”
இல்லை”.” சரி கூப்பிடுவாங்க போங்க.”
ஒவ்வொருவராகப் பெயரைச்சொல்லி அழைத்து, போய் போய் வந்தார்கள். அங்கும் இங்கும் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர், நர்ஸ் ஏறத்தாழ முப்பது பேர் இருக்கும். பெரிய ஆஸ்பத்திரி. இடையிடையே சக்கர நாற்காலி உருட்டிக்கொண்டு .படுக்க வச்சி தூக்கிட்டு போவாங்களே அது என்னது? அங்குமிங்கும் போய் போய் வந்தது பார்த்தாலே பயம்.
” எங்கேயும் பாக்காம டிவி ஓடுதுல்ல அதைப்பாருங்க”என்றாள் என் மனைவி.
“ஆஸ்பத்திரி வாடையே பிடிக்கலப்பா”.
“சரி சரி பசிக்குதா?”.
“ஆமா “என்றேன்.
அவள் போய், பெயர் கொடுத்த இடத்தில் ஏதோ பேசிவிட்டு வந்தா. “கொஞ்சம் பசிய அடக்கிகிடுங்க டாக்டர் பார்த்த பிறகுதான் சாப்பிடனுமாம் .ஏதாவது டெஸ்ட் எடுக்கணும்னு வெறும் வயிறா இருந்தா நல்லதுன்னு சொல்றாங்க”.
“சங்கரலிங்கம்” ஒரு சின்ன பொண்ணு. ரெண்டு பேரும் ஏந்திச்சி பக்கத்துல போனோம்.
“நீங்க தானா? போங்க உள்ளே. கதவு திறந்தது ஒருவர் வந்தார். நாங்கள் உள்ளே போனோம். இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டு “வணக்கம் ஐயா”. டாக்டர் ஒன்றும் பேசவில்லை. பக்கத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள் அவர்களில் ஒருவன் “உட்காருங்க” என்றான்.
கையில் இருந்த பேப்பரை வாங்கி டாக்டர் ஒரு நிமிடத்தில் பார்த்துவிட்டார் என்னிடம் எதுவும் கேட்கவில்லை ஏதோ எழுதினார். அவனிடமே கொடுத்தார். “சரி எந்திங்க” என்றான். புரியாமல் எழுந்தோம். “டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு ஸ்கேன் பண்ண வேண்டி இருக்கு., பார்க்கலாமா.?”
வீட்டுக்காரி உடனே சொன்னா “எல்லாம் பாத்து இருங்க. தம்பி”
அப்புறம் பக்கத்து ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க .படுக்க வச்சி யாரோ ஒருத்தன் நெஞ்சிலே, முதுகிலே எதையோ ஒரு மிஷின் வைத்து பார்த்தான். அப்புறம் அடுத்த ரூமுக்கு அனுப்பிட்டான். அங்கு ஒரு பெரிய மெஷின் இருந்தது. அங்கு உட்கார வச்சு என்னமோ பண்ணுங்க. அப்புறம் ரத்தம் சிறுநீர் அது என்னமோ டெஸ்ட் நடந்தது. பிறகு இந்த சினிமாவுல காட்டுற மாதிரி பொண்ணு அது மேல நிண்ணு ஓடச் சொன்னாங்க. மூச்சு வாங்கியது நெஞ்சு வலி லேசா.
அதற்குள் மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. “சாப்பிடலாமா?”ன்னு கேட்டேன் “கொஞ்சம் பொருங்க ஸ்கேன் முடிச்சுட்டு சாப்பிடலாம். இங்கேயே கடை இருக்கு”.
அப்புறம் அங்க இருந்து மாடிக்கு கூட்டிட்டு போனாங்க .அங்க ஒரு பெரிய மெஷின். அதுதான் ஸ்கேன் .அங்கு ஒரு நாலஞ்சு பேரு இருந்தாங்க.படுக்கவைத்து என்ன உள்ளே தள்ளி விட்டான். “கண்ண மூடி கிடுங்க. கையை ஆ”. இப்படி எல்லாம் சொல்லிட்டாங்க .அவளை வெளியே அனுப்பிட்டாங்க. காதுக்குள்ள கிர் ன்னு ஒரு சத்தம் மட்டும் கேட்டு கிட்டு இருந்தது.
கொஞ்ச நேரத்துல வெளியே புடுங்கிட்டு எடுத்தாங்க. “மெதுவா எந்திரிங்க. பாத்ரூம் அதோ இருக்கு. போயிட்டு வந்து, பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு ,வெளிய கேண்டீனுக்கு சைடுல இருக்கு.போய் சாப்பிட்டுட்டு வந்துருங்க ரிசல்ட் வரும் .டாக்டர் பார்த்திடலாம்.”
ஆஸ்பத்திரி நிர்வாகமே நடத்துற சாப்பாட்டுக்கடை ஒரு சாப்பாடு 90 ரூபாய் வாயில் வைக்க முடியாது. பசிக்குது சாப்பிட்டாச்சு. வந்து நாற்காலியில் உட்கார்ந்தோம்.
இவள் இரண்டு மூன்று முறை போய் கேட்டா.” டாக்டர் வர அஞ்சு மணி ஆகுமா. ரிசல்ட் நாலு மணிக்கு பிறகு தான் வரும். அதுவரைக்கும் பொறுமையா இருங்க”. கடவுளே ஒன்னும் இருக்க கூடாது என்று மனசுக்குள்ள வேண்டிகிட்டேன். அவா என்ன வேண்டினாலோ தெரியல. கொஞ்சம் கண் கலங்கி போய் இருந்தாள். வழக்கமாக பேசுறவ ஒன்னும் பேசல. நாலு முப்பது மணிக்கு ஏதோ ஒரு பெரிய நோட்டு புக்க்கு மாதிரி ஒண்ணு கொடுத்தாங்க. அதுதான் ரிசல்ட். அதைக் கையில் வாங்கும் போது அவளுக்கு ஒரு நடுக்கம். அந்தப் பாபாவிடம் “உடம்புல ஏதாவது பிரச்சனை இருக்கா”ன்னு கேட்டா ..”அதெல்லாம் டாக்டர் சொல்லுவாரு உட்காருங்க”.
அந்த ரிசல்ட் நோட்டுப் புஸ்தகத்த வாங்கிப் பார்த்தேன் .எல்லாம் இங்கிலீஷில் இருந்தது. நமக்கு என்ன புரிய போகுது?. அஞ்சு மணிக்குத்தான் டாக்டர் வந்தார். ‘படக் படக்’ என்று ஒவ்வொரு பெயரா சொல்ல, எல்லாரும் நோட்டு புத்தகத்தைத் தூக்கிகிட்டு உள்ள போயிட்டு போயிட்டு வந்தாங்க. ஆளுக்கு ரெண்டு நிமிஷம். வெளியே வந்து அங்கு ஒரு பாப்பாவிடம், சினிமா டிக்கெட் கொடுக்கிற இடம் மாதிரி ஒண்ணு இருக்கு . அங்க ஒரு பாப்பா இருக்கா.அவள பாத்துட்டு பாத்துட்டு மருந்து வாங்கப் போனாங்க.மருந்து கடையும் அங்கேயேஇருக்கு.
ஆறு மணிக்கு மூணாவது முறையா என் பெயரை ஏலம் போட்டாங்க. அந்தப் புத்தகத்தையும் தூக்கிகிட்டு உள்ளே போனோம். உட்கார்ந்தேன். டாக்டர் ரிசல்ட் புத்தகத்தை.வாங்கினார் படக் படக்குன்னு புரட்டினார். எதையோ எழுதினார். மருந்துச் சீட்டை எடுத்து அதில் எதையோ புரியாமல் கிறுக்கினார்.
என் மனசுக்குள் இதுவரைக்கும் இல்லாத படபடப்பு இந்த கார்ட் அட்டாக்கின்னு சொல்கிறார்களே !அதுவா இருக்குமோ?. இன்னும் டாக்டர் வாயைத் திறந்து பேசல. ஒருவேளை வாய் பேச முடியாதவனாய் இருப்பானோ? பக்கத்தில் நின்னுகிட்டு இருந்தவன் சொன்னான். “எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தாச்சு. உங்களுக்கு உடம்பில் ஒரு பிரச்சனையும் இல்லை. சும்மா வாயுதான் .மாத்திரை எழுதி இருக்காங்க.வாங்கிட்டு போங்க . உருளைக்கிழங்கு , வாழைக்காய் , எண்ணெய் பலகாரம் பஜ்ஜி வடை சாப்பிடாதீங்க. அடுத்த மாசம் அஞ்சாம் தேதி வந்து பாருங்க”.
“டாக்டர் ஐயா, பயப்படற மாதிரி வேற ஒன்னும் இல்லையே ?” என்று பயந்து பயந்து கேட்டா என் மனைவி.
“ஒன்னும் இல்லம்மா எல்லாமே நார்மல் “அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நல்ல ஆரோக்கியமா இருக்காரு. போயிட்டு வாங்க.”
இதையும் அவர் சொல்லல. பக்கத்துல இருந்த இன்னொரு பொம்பள தான் சொன்னா.வெளியே தள்ளிவிட்டார்கள். ஒருவன் பின்னாலே வந்து ,”அந்த மூணாவதுகவுண்டருக்கு போங்க” நல்லவேளடி ஒன்னுமில்ன்னு சொல்லிட்டாங்க.நான் கூட பயந்து போயிட்டேன்”.
அங்க போய் வரிசையில் நின்று,சீட்டை நீட்டினா. அங்கிருந்த பாப்பா ஒரு கம்ப்யூட்டர் மிஷினில் படக் படக்கென்று அடிச்சா. ஒரு சீட்டு வந்தது. நீட்டி கைல கொடுத்துட்டு “இந்தாங்க. எட்டாயிரம் ரூபாய் கொடுங்க”. தூக்கி வாரி அடிச்சது. “எவ்வளவு பாப்பா?” திரும்பவும் சொன்னாள். எட்டாயிரம்.உள் பாக்கெட்டில் கையைவிட்டு எடுத்து வாய மூடிக்கிட்டுக் கொடுத்தேன். இந்தாங்க என்று நீட்டினாள் என்னவென்று பார்த்தேன் என் போட்டோ போட்ட அடையாள அட்டை. இத வச்சு ரேஷன் கடையில அரிசியா வாங்க முடியும்?
ஆஸ்பத்திரியை விட்டு தப்பிச்சு வெளியே வந்தவுடன், ” நல்லவேளை உங்களுக்கு ஒண்ணுமில்லை. நான் வேண்டின கடவுள் கைவிடலை.அது சரிங்க உடம்புக்கு தான் ஒரு பிரச்சனையும் இல்லையே! ஒன்னும் இல்லன்னு கண்டுபிடிக்கிறதுக்கா, இத்தனை மிஷின்ல ஏத்தி இறக்கினாங்க ?நம்ம முத்துச்சாமி டாக்டர் கழுத்துல தொங்க போட்டு நெஞ்சில் வச்சி பார்ப்பாரு . நல்லா பேசுவாரு விவரமா. இவரு பேசவே இல்ல”என்றாள் வருத்தத்தோடு.
“அடியே இந்தடாக்டர் பெரிய கில்லாடி. ஒரு வார்த்தை கூட பேசாம, என்னைத் தொட்டுக்கூட பார்க்காம, எந்தக் கேள்வியும்கேட்காம என் பாக்கெட்டுல சரியா 8000 ருபாதான் தான் இருக்குன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டான் பாத்தியா? கில்லாடிதான். இது பெரிய படிப்பு. வெளிநாட்டில் படிச்சிருப்பான் போல இருக்கு. என்ன ஆச்சரியம்? அதிசயம்?வாடி கூறு கெட்டவளே,நடந்துதான் போகனும் வீட்டுக்கு.”