சர்ச்சை வீடியோ குறித்து ‘‘டிக்டாக்” பிரபலத்திடம் போலீஸ் விசாரணை
1 min read
சர்ச்சை வீடியோ குறித்து ‘‘டிக்டாக்” பிரபலத்திடம் போலீஸ் விசாரணை
Police investigate controversy video21.6.2020
உடன்குடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் பேச்சிமுத்து(39). மரக்கடை, பழைய மரங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சமூக வலைதளங்களை பயன்படுத்த தொடங்கிய பேச்சிமுத்து, இனிசியலுடன் சேர்த்து ஜி.பி.முத்து என பெயரை மாற்றிக்கொண்டார். ெதாடர்ந்து ‘‘டிக்டாக்” செயலியின் மோகத்தில், அதுகுறித்து தனது நண்பர்களிடம் கேட்டறிந்து வீடியோ பதிவிட்டார். தென்மாவட்ட பேச்சு வழக்கில் அவர் பேசியது அனைவரையும் கவர்ந்தது. இதனால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பாலோவர்ஸ் வந்ததால் தொடர்ந்து பேசுவதும், ஆடிப்பாடி துள்ளல் வீடியோக்களை வெளியிட்டும் வந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர், டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ குறிப்பிட சாதியை இழிவாக பேசுவதாக கூறி தென்னக வேங்கைகள் அமைப்பினர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பினர். இந்த மனு தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அவர்கள், ஜிபி முத்துவிடம் விசாரித்தனர். அப்போது அவர் எந்த சாதி, மதம் குறித்தும் உள்நோக்கத்துடனும் டிக்டாக்கில் வீடியோ வெளியிடவில்லை. பொழுதுபோக்கிற்காக செய்தது என கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து ஜி.பி.முத்து கூறுகையில், ‘எனக்கு டிக்டாக்கில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர். இது பிடிக்காமல் சிலர் எனக்கு தொல்லைகள் கொடுப்பதுடன், ரிப்போர்ட் செய்து எனது ஐடியை பிளாக் செய்து விடுகின்றனர். புதிய ஐடி உருவாக்கினாலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் வருகின்றனர். டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருவதால் நடிப்பு வாய்ப்புகளும் வருகின்றன. தற்போது கொரோனா பிரச்னை உள்ளதால் எங்கும் செல்லவில்லை. நான் எந்த மதத்தையோ, சாதியை குறித்தோ பதிவுகள் போடுவது கிடையாது. சினிமா பாடல் படித்து நடித்தால் கூட அது விபரீதமாகி விடுகிறது, என்றார்.