பொறி – சிறுகதை – முத்துமணி
1 min read
“Pori” – Short story By Muthumani
பொறி- சிறுகதை – முத்துமணி
21-6-2020
செல்போனைச் சரியாப் பயன்படுத்த தெரியாது ரங்கனுக்கு. அரசு ஊழியர். பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, சொல்லிக் கொடுத்த நண்பன் பாக்கியநாதன், ஒரு எச்சரிக்கையும் விடுத்தான்.
“இதில் நல்லதும் இருக்கு.கெட்டதும் இருக்கு..
நீயாக யாருக்கும் பிரண்ட்ஷிப் ரிக்வெஸ்ட் கொடுக்காதே. ரிக்வெஸ்ட் கொடுத்துருந்தாங்கன்னா அவங்க விவரங்களை நல்லா பாரு, தெரிஞ்ச ஆளுக்கு மட்டும் ஓகே கொடு.தெரியாதவங்க நட்பு வேண்டாம். பேஸ்புக்கைப் பயன்படுத்தி நிறைய ப்ராடு நடக்குது. ஏமாற்றிக் காசு பிடுங்க, சோசியல் மீடியாவைத் தப்பா பயன்படுத்தும் கூட்டம் அதிகமாயிடுச்சு. கொரோனா நிதி கலெக்ட் பண்ணுறோம்ன்னு ஒரு கூட்டம் இப்போ சேர்ந்திருக்கு. இவங்கட்ட எல்லாம் ரொம்ப கவனமாயிரு”அதைவிட முக்கியம்… போலியான புகைப்படம், முகவரி கொடுத்து, கொஞ்சம் வீக்கான ஆண்களை ஏமாற்றும் ஒரு கூட்டம் இருக்கு. சபலம் வந்துச்சுன்னா… அவ்வளவுதான். சமீபத்தில் கூட சினிமா நடிகை கூட நட்புன்னு நம்பி பல லட்சங்களை ஏமாந்த கதை பேப்பர்ல வந்துச்சு பார்த்து இருப்பே”.
முதல் இரண்டு மூன்று நாட்கள் கல்லூரி, பள்ளி நண்பர்கள் என்று தேடித்தேடிச் சிலரைக் கண்டுபிடித்து நட்பைப் புதுப்பித்துக் கொண்டான். ரிக்வெஸ்ட் வந்தால் யாருன்னு பார்க்காமலே டெலிட் பண்ணிடுவான். அழகான பெண்கள் படத்தோடு கூடிய ப்ரொஃபைல் தினமும் கண்ணில் படும். யாரென்று பார்ப்போமா? என்ற எண்ணம் தோன்றும், ஆனால் அழிச்சிடுவான்.
தங்கம் விலை எவ்வளவானாலும் கடையில் கூட்டம்தான்.
“ராசாத்தி கரெக்டா 3 கிராம் எடு. ஏன்னா, உன் தங்கச்சி நம்ம பயலுக்கு அவ்வளவுதான் போட்டா”
பதில் பேசாமல் பிறந்த பிள்ளைக்கு மோதிரம் காட்டும்மா” என்று சொன்னா. அவன் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தான்.
நகைக்கடைக்கு அழகான பிள்ளைகளை எங்கிருந்து, கிடைப்பாங்க ?. நிஜமாஎல்லோரும் நல்லா கலரா? இல்லாட்டி லைட் வெளிச்சம் அப்படிக் காட்டுதா?. பளிச்சுன்னு இருக்காளுக. எல்லாம், ஒரே சைஸ் 18 வயசு 19 வயசு.. சினிமாவில் பாக்குற மாதிரியே.. ராசாத்தி மோதிரங்களை அலசி ஆராய்ந்துகிட்டுடிருக்க இவன் இந்தப் பிள்ளைகளைக் கண்களால் அளந்து, அலசி ஆராய்ந்துகிட்டுடிருந்தான்.
ஒருத்தி லேசாகச் சிரித்தாள். அவள்தான் எல்லோரையும் விட அழகாத் தெரிந்தாள்.
ரெண்டே முக்கால் கிராமில் மோதிரத்தைத் தேர்ந்தெடுத்துட்டு, பில் கொடுக்க போன போது “நியூ டிசைன்ஸ் நெக்லஸ் வந்திருக்குக்கா”.
“இப்ப வாங்குராதா இல்லை”.
” சும்மா பாருங்க” அதில் ஒன்றை எடுத்துக் கழுத்தில் வைத்து அழகு பார்த்தா. நல்லாத்தான் இருந்தது.
“போட்டுப் பாருங்க என்றாள்”.
“உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்குக்கா” இப்படி தேன் குரலில் சொன்னது அந்தச் சிரிப்புத் தேவதை.
“உன் பெயர் என்னம்மா?” இவள் கேட்டாள். “அரசி”என்று பதில் வந்தது.
“நிஜமாவே அழகில் அரசி தான் இன்னொரு நாள் வர்றோம்.” அந்தச் சிரிப்புத் தேவதை பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம்…
வீட்டுக்கு வந்ததும் “என்னங்க அந்த நெக்லஸ் ரொம்ப அழகா, எனக்கு ரொம்ப பொருத்தமா இருந்திச்சி?”
“ஆமா. என்னமோ நியூ டிசைன்ன்னு சொன்னா”.
“பார்க்கத் தாங்க பெருசா தெரியுது. ரெண்டு பவுன் தான் இருக்கும்”.
“ஓகோ முக்கா லட்சம் வரும். உங்க அப்பாகிட்ட கேளு.”
இவன் சொன்னதும்.” சும்மா சொன்னேன். வேணும்னு கேட்டேனா? வாய மூடுங்க”என்றாள்.
” உங்க அப்பா பேச்சை எடுத்தா உடனே வாய மூடு. கல்யாணம் முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு அன்னிக்கிப் போட்ட 10 பவுன் நகை மட்டும் தான் .அதுக்குப்பிறகு ஏதாவது செஞ்சிருக்காரா?”.
“அவங்க எடுக்குச் செய்யணும்? நீங்க தான் வாங்கித் தரணும். எனக்கு போட்ட மாதிரி தான் என் தங்கச்சிக்கும் போட்டாங்க. அவங்களால அவ்வளவுதான் முடியும்.”
“உன் அண்ணன் பெரிய இன்ஜினியர் இருக்கானே. அவனிடம் கேட்கக் கூடாது?”. “பேச்ச நிப்பாட்டிட்டு சாப்பிட வாங்க. இனிமே நகை பத்தி நான் பேசல சாமி. சாப்பிடுங்க.”
“லைட்ட ஆப் பண்ணியாச்சு. கையில் என்ன போன்? படுத்து தூங்குங்க”.
“ஃபேஸ்புக்குடி. என்கூட படித்த முத்துசாமி, தங்கராசு, இன்னும் சொந்தக்காரன், ஊர்க்காரன்நாலு இப்படி எல்லாரும் பேஸ்புக்ல ஒண்ணா இருக்கிறது நல்லாதான் இருக்கு.”
“அது என்ன புக்கோ! தெரியாது எனக்குத் .தூக்கம் வருது.” புரண்டு படுத்துக் கொண்டாள். இவனுக்கு நகைக்கடை அரசி நினைவு திடீரென வந்தது. ஃபேஸ்புக் நோண்டி கிட்டுருந்தான். அழகான பெண் ஒருத்தியின் ரிக்கோஸ்ட். பெயர் ராணி. ஆர்வத்தோடு விவரங்களைப் பார்த்தால், ஊர் மதுரை.வயது 19. இன்ஜினியரிங் காலேஜ் மாணவி. ஆயிரக்கணக்கில் அவளுக்கு நட்புகள். அவளே ரிக்வெஸ்ட்கொடுத்திருக்கா. நடுக்கத்தோடு கன்ஃபார்ம் கொடுத்துட்டான்.
மறுநாள் ஆபிசில் இருக்கும் போது, ஹாய் என்று மெசேஜ் அதில் அனுப்பி, பத்து நிமிடத்தில் ‘ஹாய் அங்கிள்’என்று பதில் வந்தது அங்கிள் என்று சொல்லி ட்டாளே!.
” என்னை உனக்குத் தெரியுமா”.
“நல்லா தெரியும். நேத்துக்கூட ப்ளூ கலர் ஷர்ட் சூப்பரா இருந்தீங்க. உனக்கு மதுரை என்னை எப்படி ?”.
“மதுரை இல்லை எனக்கும் இதே ஊர்தான்”. “அப்படியா? அந்த ப்ரொபைல் படத்தில நீ தானா?”.
“இல்லை.அது ஒரு நடிகையின் படம். நான் அவளை விட அழகாய் இருப்பேன்”.
“உன் படத்தை அனுப்பி வை”.
“இன்று முடியாது இப்போதுதானே பேசுறோம்”
ஒரு வேளை நம்ம ஆபிஸ் ஸ்டாஃப் எவளாவது இருக்குமோ?
“உன் நம்பர் கொடு”.
“வேண்டாம். கொஞ்ச நாளைக்கு மெசஞ்சர் வழியே பேசிக்கலாம்”.
“என்னை பிடிச்சிருக்கா?”.
“புடிக்காமலா பேசுறேன். நீங்க என்னிடம் ஃப்ரீயாக பேசுங்க.”
“இன்னைக்கு நான் என்ன கலர் டிரஸ் போட்டுருக்க்கேன் சொல்லு பாப்போம்”. “இன்னிக்கா? நைட் சொல்லுகிறேன்”. அப்படின்னா ஆபீஸ் பக்கத்துலதான் இருக்கா.நைட் மெசஞ்சரில் செய்தி “இன்னைக்கு பியூர் வைட் கலர் சர்ட் பிளாக் பேண்ட். ஹீரோ மாதிரி.லவ் யூ அங்கிள்”.
தேன் வந்து பாய்ந்தது
“எங்கிருந்து என்னைப் பார்க்கிறாய்?” அவள் ஸ்மைலி ஒன்றை அனுப்பி வச்சா. அவனுக்குத் திடிர்ன்னு ஒரு யோசனை. ஆஹா நகைக்கடை சிரிப்புத் தேவதை, அரசி. ஆகா அவளே தான்., ராணின்னு மாத்திவச்சிருக்கா சூப்பர்.
மறுநாள் ஒரு ஐடியா . நகைக்கடைக்குப் போன் போட்டு,”வணக்கம் சார், அரசியோட மாமா பேசுறேன் .அவகிட்ட பேசணும்.”
“இப்ப பேச முடியாது சார். பிஸியான நேரம் அப்புறமா கூப்பிடுங்கள்.”
பக்கத்தில்தான் கடை. ஒரு நடை, வெளியிலிருந்து பார்த்தான். வழக்கம்போல் வேலை செய்து கிட்டு இருக்கிறா. உள்ளே போனா ஏதாவது சந்தேகப்படுவான். அவள் கண் பார்வை கிட்டுமா? என்று ஏங்கி, ஏமாற்றத்தோடு செல்போனை எடுத்து “ராணி இப்போ எங்கே இருக்கிற?” என்று அடித்தான்.
உடனே பதில் வந்தது.” லாக் டவுன் தானே வீட்டில்தான் டிவி பார்க்கிறேன் மை டியர் மாமா.”
“ஓ! காலேஜ் லீவ்”. அரசி யாருக்கோ நகையை அதே சிரிப்போடு காட்டிக் கொண்டிருந்தாள். அட. ச்ச… அப்படியானால், அந்த ராணி இவள் இல்லை. ஆபீஸ் வந்ததும் ” உன் போட்டோவை அனுப்பு டார்லிங்.ரொம்ப ஆசையா இருக்குடா.”.
“போட்டோ வேண்டாம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். நாம் நேரிலே சந்திக்கலாம்.. “.”really”?..”yes dear.”.” எப்போ?”. “நாளைக்கு சண்டே தானே. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க.”.
“அய்யோ சந்தோசம்…எங்க ?அட்ரஸ் சொல்லு”. “பொருங்க.. இப்போ என் வாய்ஸ் அனுப்புறேன் கேளுங்க….வாய்ஸ் வந்தது. “என்னடா மாமா எப்படி இருக்க டார்லிங் ?..” ஐ லவ் யூ டா. மொட்டக் கழுத்தா இருக்கு. ஒரு பவுனாவது தங்கம் போடணும்னு ஆசை. யார் கிட்ட கேட்கிறது?. நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன்”.
“நானும் தான். உனக்கு இப்ப என்ன வேணும்? ஒரு செயின் தானே. நான் வாங்கிட்டு வாரேன்”.
” எதுக்கு மாமா செலவு?. உன் கையால பூ வாங்கிக் கொடுத்தாலும் போதும். நாளைக்கு வீட்டில் எல்லோரும் திருச்செந்தூர் போறாங்க. உனக்காக, உன்னைப் பாக்கணும்னு நான் போகல. monthly sick ன்னு பொய் சொல்லிட்டேன்.”
“அப்படியா? குட் கேர்ள்..”
“மாமா தப்பா நினைக்காதடா. எனக்கு நீ நெசமாவே தங்கச் செயின் வாங்கி தருவியா?” கொஞ்சும் குரலில் கேட்டாள். “கண்டிப்பா. அதிலென்ன சந்தேகம்?”
“அப்போ. இன்னைக்கு சாயங்காலம் கருப்பசாமி கோயிலுக்கு வா. வாங்கிட்டு வந்ததைக் கோவில் வாசலில் வச்சுட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்டு.”
” என் மேல் நம்பிக்கை இல்லையா? நாளைக்குக் கொண்டு வருவேனே”.இல்ல.
நாளைக்குக் கொண்டு வந்தா என் கவனம் அது மேலத் தான் போகும்.அப்புறம் உன்கிட்ட பேச முடியாது. அதனால இன்னைக்குக் கிடைச்சா, நாளைக்கு நான் பிரீ. நீ வரும்போது கழுத்துல நீ கொடுத்த பரிசோடு ரெடியா இருப்பேன்”.
“அது சரி கோவில் பக்கத்தில் என்னை பார்த்து வாங்கினால் என்ன?.”
“அது சர்ப்ரைஸ் முகத்தை இப்போ காட்டமாட்டேன் நாளைக்கு நேரில் பார்த்து நீ அசந்து போனும். இதற்குச் சம்மதித்தால் வா மாமா. இல்லாட்டியும் பரவாயில்லை நாளைக்கு பார்க்கலாம்.”.
” சீச்சீ கண்டிப்பா கோயிலுக்கு வந்துருவேன். சரி நேரமாகுது. நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன். பை டா “.
இருட்டு.கோயில் வாசலில் நெக்லஸ்.வச்சுட்டு.. அன்னிக்கு நகைக்கடையில் பார்த்த அதே நெக்லஸ். ரெண்டு ஏடிஎம் கார்டு தேச்சாச்சி .அரசி அதே மாதிரி சிரிச்சிக்கிட்டே”என்ன சார் அம்மா வரலையா?” கேட்டாள்.
இவள் வழக்கமா இப்படித்தான் சிரிப்பா போல. “வரல பாப்பா.”. நைஸா கோயிலுக்கு வந்து வச்சாச்சு . அட்லிஸ்ட் பார்த்தா கூட நல்லா இருக்கும். இல்லாட்டி ஒரு வார்த்தை பேசினால் கூட போதும். இருட்டுக்குள் சரியா தெரியல. ரெண்டு பேர் வந்து நகையை எடுத்துட்டு அந்தப் பக்கமா போயிட்டாங்க. அப்புறம் பைக் சவுண்ட் கேட்டது. சரி நாளைக்குத்தான் பார்க்க போறோமே.
“என்ன இந்த பக்கம்? என்று கீழத்தெரு கணேசன் பிடித்துக் கொண்டான். அவன் ஒரு அறுவை கேஸ்.
அவனிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வர லேட்டாயிடுச்சு.
“எங்க போனீங்க?”ராசாத்தி கேட்டவுடன் கோபம் தான் வந்தது. அவசர அவசரமாய் போனை எடுத்து ஏதாவது செய்தி இருக்கான்னு பார்த்தான். ராணி என்ற பக்கத்தையே கண்டுபிடிக்க முடியல. எங்கு தேடியும் கிடைக்கல. ஏதோ பிராடு நடந்துட்டுது. ராணி ஒரு cheat,புரிந்து விட்டது யாரிடம் என்ன சொல்ல?. தூக்கம் வரல. பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் தொட்டான்.
இவன் பக்கம் திரும்பிப் படுத்து “நல்லா இருக்கா?” என்று கேட்டாள். கழுத்தைக் காட்டினாள்.
அதே நெக்லஸ் மின்னிக் கொண்டிருந்தது. “ராசாத்தி ஏது இது?”.
“ராணி கொடுத்தாள்”
திடுக்கிட்டு “ராணியா?”.
“ஐ லவ் யூ மாமா. டார்லிங். எம்பேரு ராணி இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டூடண்ட் “. என்று சொல்லிக்கொண்டு வந்தான் அவள் அண்ணன் பாலு.
எல்லாம் புரிந்தது.
“நானும் தங்கையும் சேர்ந்துதான் இந்தப் பொறியை வைத்தோம்”.
நல்லா அழணும் போல தோணிச்சி.
” என்னை மன்னிச்சுக்கோம்மா” என்று மனைவியின் காலில் விழுந்தான். ராணி, அரசி என்றெல்லாம் சபலப் பட்ட மனதுக்கு மனைவிதான் ராசாத்தி என்பது இப்போது புரிந்தது. என்கிட்ட இல்லாதது எவளிடமோ இருக்குன்னு நினைச்சீங்க. தேடி அலஞ்சிங்க, நகையை நீட்டினாள்.
” உங்க ராணிகிட்டயே கொடுத்து, சந்தோசமா இருங்க. நீங்க விரும்புற ஏதோ ஒன்னு என்கிட்ட இல்லங்குற தப்பான நினைப்புத்தானே, இப்படி பண்ண சொல்லுச்சு. ஆம்பள கேட்டா சொல்லுவீங்க. இன்னைக்கு ராணி நாளைக்கு இன்னொருத்தி. இனிமேல், நான் சாகர வரைக்கும் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது. நீங்க எதிர்பார்க்கிறது என்னிடம் இல்லை .திருநீலகண்டர் காலத்திலிருந்து நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்க”
அவன் ஏதோ பேச முயல “பேசாதீங்க” என்பதுபோல் கையைக் காட்டி “இதையே நான் செய்திருந்தால் என்ன பண்ணுவீங்க?”
-முத்துமணி.