இஸ்ரோ என்ஜினீயருக்கு கொரோனா; மகேந்திரகிரி ஆராய்ச்சி மையம் மூடப்பட்டது
1 min read
Corona to ISRO Engineer; Mahendragiri Research Center closed

22-6-2020
இஸ்ரோ என்ஜினீயருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மகேந்திர கிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று ஒரு நாள் மூடப்பட்டது.
நெல்லை மாவட்டம்
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் அதிகமாக கொரோனா பரவியது.
ஆனால் தற்போது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருவோரால் மற்ற சில மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்துவருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் கொரோனா பலரை தாக்கி உள்ளது.
என்ஜினீயர்
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பணகுடி அருகே உள்ள மகேந்திர கிரியில் அமைந்துள்ள மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணிபுரியும் என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகேந்திரகிரியில் மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இயங்கி வருகிறது. இங்கு செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் பொருத்தப்படும் கிரயோஜனிக் என்ஜின் சோதனை நடைபெறும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இங்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில்தான் என்ஜினீயர் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இன்று (திங்கட்கிழமை ) மட்டும் இஸ்ரோ மையம் மூடப்படும் நிலை ஏற்பட்டது. அங்கு பணிபுரியும் மற்ற அதிகாரிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய நிர்வாக அலுவலர் சுப்பிரமணியபிள்ளை தெரிவித்துள்ளார்.