June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

நாடகம் – சிறுகதை – முத்துமணி

1 min read

Nadagam -Dhort story By murthumani

23-6-2020

“வண்டிய குறுக்க விட்டது அவன். என்னப் பார்த்து, முறைச்சிட்டுப் போறான். கண்ணில்லாத பய. கையில சிக்கினான் கழுத்தக் கடிச்சி…”. இது நடந்தது ரோட்டுல.

அங்க ஒண்ணும் பேசாம ,வீட்டுல வந்து ‘தையா தக்கா’ குதிச்சா, நாம என்ன பண்ண முடியும்? இவர் எப்போதுமே இப்படித்தான்.
கிச்சனுக்குள் எலி ஒண்ணு வந்துருச்சு. கம்பையும் தூக்கிக் கையில் கொடுத்து அடிக்கச் சொன்னாள் அமுதா.
“சின்ன எலிக்காடி இந்த கம்பு?. நான் ஓங்கி மிதிச்சா அது செத்துப் போகும். ஆனா எலியப் பார்த்தாலே எனக்கு வெறுப்பு, வாந்தி வரும். நாத்தம். வாசல் கதவத் திறந்து வை கொஞ்ச நேரத்துல அதுவா வெளியே ஓடிப் போயிரும்”. சொல்லிட்டு கட்டிலில் இன்னும் கொஞ்சம் ஓரமாக ஒதுங்கிப் படுத்துக் கொண்டான்.

" ஹால் லைட் எரியல. ஃப்யூஸ் ஆயிருச்சோ, என்னமோ? ஏறிப் பாருங்க." கோக்காலியை த் தூக்கிப் போட்டபடி சொன்னாள். 

“வீட்ல வேற பல்பு இல்லடி. என்னால கடைக்குப் போக முடியாது.”.
“வீட்டிலேயே பல்பு இருக்கு”.
“அப்போ கரண்டு கிறண்டு போயிருக்கும்”.
“கரண்டு இருக்குதுங்க. நான் வேணும்னா கோக்காலியைப் பிடிச்சிக்கிறேன்.”.
” நீ பெரிய இவளா பிடிக்கிறதுக்கு? நீ பிடிக்காட்டி ஏற முடியாதா? என் பேண்ட் அழுக்க்காயிடும்ன்னு பார்க்கிறேன். நான் பிடிச்சுக்கறேன் நீ ஏறி லைட்டைப் போடு”. தைரியம் இல்லாத ஆளு. வாய்ச் சவடால் மட்டும்தான். புருஷனை நன்றாக புரிந்துதான் வைத்திருந்தாள். கரண்ட் பயமா ? உயரம் பயமா! அதுதான் தெரியவில்லை.

“எதுத்த வீட்டுச் சின்ன பையன் வீட்டுக்குள்ள வந்த, பெரிய பாம்பை அடிச்சுக்க் கொன்னு, காம்பவுண்ட் சுவரில் தொங்க போட்டு இருக்கான். .வந்து பாருங்க. எல்லாரும் பாக்குறாங்க.”.
“போடி வெள்ளிக்கிழமை விடியக் காலம் பாம்பு முகத்துல முழிக்கணுமா?. எங்கேயாவது செத்துக் கிடந்திருக்கும் தூக்கிட்டு வந்திருப்பான்”.?
பாம்பைப் பார்க்க பயந்துதான் பேசுறாரோ?. அதுவும் செத்த பாம்பை!

“என்னங்க காலையில கோலம் போடும்போது அடுத்த வீட்டுக்காரி சண்டைக்கு வந்துட்டா. அவ கூட சேர்ந்துக்கிட்டு அவளோட புருஷனும் அசிங்கம், அசிங்கமாப் பேசுறாரு . உங்களுக்கு காது கேக்கலையா வெளியே வந்து,என்னன்னு கேக்க கூடாதா?”.
“இங்க பாருடி, நானெல்ல்லாம் வந்தா பேச்சு கிடையாது. அருவாளை எடுத்து மண்டையை வெட்டிடுவேன் .அப்புறம் ஜெயிலுக்குத் தான் போகணும். நீயே பேசி தீர்த்து விடு”.
இப்படி தினமும் ஏதாவது ஒரு கூத்து நடந்துக்கிட்டு தான் இருக்கு. இதுவரைக்கும் அரிவாளை எடுத்துப் பார்த்ததில்லை
கொரோனா. லாக் டவுன் என்பதால் வீட்டை விட்டு வெளிய போறதில்லை. கடைக்குப் போணுமானாலும் அவள் தான் போணும். எந்த நேரம் பார்த்தாலும் டிவி சேனலை மாத்தி மாத்தி பார்க்கிறது. அதுவும் சும்மா இருக்கிறது இல்லை. ஏதாவது சினிமாவைப் பார்த்துட்டு இவனையெல்லாம் எந்தக் கூமுட்டை
நடிக்கச் சொன்னான். மூஞ்சியும் மொகரையும் பாரு. கருவாப் பைய. எம்ஜிஆரைப் பாத்திருக்கியா? எலுமிச்சம்பழம் கலர்.
நியூஸ் சேனலைப் பார்த்துட்டு, “சும்மா அளந்து விடுறான், இஷ்டத்துக்கு.அமெரிக்காவில் பரவுது, ரஷ்யாவில் பரவுது. கையக்கழுவு காலக் கழுவு,சோப்பு போடு. எல்லாம் பிராடு. இங்கிலாந்துல பிரதமருக்கு வந்துருச்சு, இந்தியாவில் மந்திரிக்கு வந்துருச்சு, எம்எல்ஏ போயிட்டாரு, டாக்டருக்கு பரவுது. சும்மாஅள்ளி விடுறாங்க.இன்னிக்கு எந்த நாட்டில எத்தனை பேர் போனாங்க? எந்த ஊர்ல எத்தனை பேருக்கு பரவி இருக்கு? இதுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கல்லை. இப்படியே சொல்லி வேற வேலை இல்லை இவங்களுக்கு.”இப்படிப் புலம்புவான்.

“ஏங்க, சோப்பு காலியாப் போச்சு ஹேண்ட் வாஷ் ஒண்ணும் வாங்கணும் கடைக்குப் போய்ட்டு வாங்களேன். ஆனா மாஸ்க் போட்டுட்டுக் கவனமாப் போங்க. போலீஸ்காரங்க அடிக்கிறார்களாம்.”.
” என்ன எவண்டி தொடுவான்? கேனப்பயனு நெனச்சியா? எனக்கு எதுக்குடி சோப்பும் ஹேண்ட் வாஷ்? .அதெல்லாம் வேஸ்ட். நம்பிக்கை இல்லை எனக்கு. எனக்கெல்லாம் ஒன்னும் வராது. உனக்குப் பயமா இருந்தா நீ போய் வாங்கிட்டு வா”. கடைக்குப் போறதுக்கு வலிக்குது ஆனா அந்தச் சிகரெட்டையும் தண்ணியையும் விட முடியல. அதை வாங்கவாவது இவர் போறாரா? அதுக்குத் தனியா ஆள் வச்சுருக்காரு.உங்களுக்கு நம்பிக்கை இல்லையே. பிறகு எதற்கு டீவியை வெச்சு அந்த நியூஸைப் பாக்கணும்?. பார்த்துவிட்டு டென்ஷன் ஆகணும்?.
கடைக்குப் போயிட்டு வந்தவா,” “நம்ம ஊருக்கும் வந்துருச்சு. மார்க்கெட் முழுசும் அதே பேச்சுதான். போன வாரம் கூட அடுத்த த்தெருவுல ஒருத்தருக்கு வந்து மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்துருக்காங்களாம். நமக்குத் தான் தெரியல.” லீவுல எல்லாரும் நல்லா சாப்பிட்டு வெயிட் கூடிருச்சின்னு பேப்பர்ல போடுறாங்க இவரோ மெலிஞ்சி கிட்டே போறாரு.காய்கறி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னால் சாப்பிடவே புடிக்கல காய்கறி இல்லாத தயிர் சாதத்தைப் போடு”.
இவர் நெசமாவே தைரியமா இருக்காரா? இல்லன்னா பயந்துபோய் பயத்தை மறைக்கப் பெருசா பேசுகிறாரா? புரியல. வாங்கிட்டு வந்த ஹேண்ட் வாஷ், சோப் இவள் மட்டும் தான் யூஸ் பண்ணுறா. ஆனா ரெண்டு நாளில பாதியா குறைச்சு போச்சு. நோட்டம் பார்த்தாள். அவள் கிச்சனுக்குப் போனபிறகு ,பாத்ரூமுக்கு போகும் போதும் , இவன் போய் எல்லாத்தையும் எடுத்துப் பயன்படுத்தி விட்டுச் சத்தம் போடாம ரூம்ல போய் படுத்துக் கொண்டான். ஓ இப்படி ஒண்ணு நடக்குதா?.
“என்னடி சங்கு சத்தம்?.”
“அடுத்த தெருவுல மதுரையில் சேர்த்து இருந்தாங்களே அவரு இறந்து போய்ட்டார். பாவம்.32 வயசு”.

 "சாப்பிட வாங்க.".

” வேண்டாம்டி லேசா காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு.” லேசாய் இருமினான். தொட்டுப் பார்த்துட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்லை .சாப்பிட வாங்க. “
கிச்சனுக்குப் போய்ட்டாள்.
“ஹலோ நம்ம ஆபீஸ்ல மணின்னு ஒருத்தன் இருக்கானே, அவனுக்குப் பாசிட்டிவாம். அவன் நல்ல தண்ணிய போடுவான். மேனேஜருக்குக் கூட இருக்கிற மாதிரி பேசுறாங்க. ஏற்கனவே ஒரு ஆபரேஷன் பண்ணி இருக்காரே. அப்படியானால் வருவதற்கு வாய்ப்பு அதிகம். சுகர் பேசன்ட்க்கு வருமாம். அதுல ஒரு முக்கியமான விஷயம் ரத்தம் A குரூப்பா இருந்தாலும் உடனே வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. யாரோ போனில் இவரிடம் பேசிக்கொண்டுருந்தார்கள். “வாங்களேன் ஒரு நட ஹாஸ்பிடல்ல போய் பார்த்துட்டு…”
“என்ன போய் அங்க படுக்கச் சொல்றியா?. சோறு கொஞ்சமா வையி.” அன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு அந்தப் பையன் வந்தான் கையில் சரக்கோடு. வாங்கி வச்சிட்டு சொல்லாம கொள்ளாம வண்டிய எடுத்துக்கிட்டு எங்கேயோ போனார் . போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார். உடனே ரூமுக்குள்ள போய் எதையோ ஒளித்து வைத்தார்.

“ஆச்சரியமா இருக்கு. கடைக்கு போயிட்டு வந்திருக்கீங்க?”.
“இந்தப் பய சிகரெட் வாங்க மறந்துட்டான். நான் போய் வாங்கிட்டுவந்தேன்”.
வந்ததும் டிவி கூட பார்க்கல .கட்டிலில் சும்மா படுத்திட்டார்.
“என்ன படுத்துட்ட்டீங்க?”
“உடம்புக்கு ஒரு மாதிரியா இருக்கு நீ வேலை முடிஞ்சதும் படுத்து த்தூங்கு.”

ராத்திரி 10 மணி இருக்கும் சத்தமா பேரைச் சொல்லிக் கூப்பிட்டாரு. இல்லை .கத்தினான். இவ்ளோ எந்திருச்சு ஓடுனா கட்டிலில் படுத்தபடியே “பத்மா நான் குடிச்சிட் டேன்ம்மா.”.
” தெரியுமே ” புதுசாவா குடிக்கிறீங்க? அதான் தினமும் குடிக்கிறீங்களே”.
இல்லடி இன்னைக்குச் சரக்கோடு சேர்த்து விஷத்தையும் குடிச்சிட்டேன்.
” ஐயோ என்ன ஆச்சு உங்களுக்கு?”.
“எல்லாரும் சொல்றதப் பார்த்தா கட்டாயம் எனக்கு கொரோனா பாசிட்டிவ் தாண்டி. பசி இல்ல, உடம்பு களைப்பா இருக்கு. இருமல் வருது. சளி இருக்கு. தூக்கம் வரல.எனக்கு சின்ன ஆபரேஷன் வேற பண்ணியிருக்கா,

சுகர் இருக்கு, பிரசர் இருக்கு,. அதோடு கெட்டப்பழக்கம் இருக்க. அடுத்த தெருவுல ஒருத்தன் போயிட்டானா?. எங்க ஆபீஸ்ல என்கிட்டயே இருந்தவனுக்கு வந்திருக்கு. 10 நாளாவே எனக்கு த்தெரியும் . உனக்கு வந்துடக் கூடாதுன்னுதான் ஒதுங்கி ஒதுங்கி இருந்தேன்.
கொரோனா பாசிட்டிவ்ன்னா எங்காவது ஆஸ்பத்திரில போய் என்னால படுத்துக் கிடக்க முடியாது. செலவும் எக்கச்சக்கமா ஆகும். கொரோனான்னு எல்லாருக்கும் தெரிஞ்சா கேவலம் .அதனால விஷத்தைக் குடிச்சிட்டேன்.
சாகப் போறேன்டி. ஐயோ நெஞ்சு வலிக்குது! வயிறு எரியுது! ஆம்புலன்சுக்கு ப் போன் பண்ணு”. “தைரியமாக விசத்தக் குடிச்சிட்டு இப்ப என்ன ஆம்புலன்ஸ். விஷத்தைக் குடிசிட்டு சாகிறதுக்குப் பதிலா நோய் வந்து செத்திருக்கலாமே. உங்களுக்கு நோய்வந்துருந்தால் எனக்கும் வருமே. அப்படின்னா என்னப் பத்தி உங்களுக்குக் கவலையே இல்ல. நீங்க போயிட்டா என் கதி என்ன? அதையெல்லாம் நீங்க யோசிக்கல. சுயநலம், பயம். இவ்வளவு பயம் இருந்தா இந்த சிகரெட்டையும் தண்ணியை யும் விட்டால் என்ன. டிவில கண்ட கண்ட செய்தியைப் பார்த்துட்டு,அது எல்லாம் உங்களுக்கு இருக்குன்னு நெனச்சுப் பயந்துட்டீங்க. இந்த பயம்தான் எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம். சுகர் இருக்கிற எல்லாத்துக்கும் கொரூனா வரணும்னு அவசியம் இல்லை. சின்ன ஆபரேஷன் பண்ணுன எல்லாருக்கும் வரணும்னு அவசியம் இல்லை. பட்டப்படிப்பு படிச்சிருக்கீங்க. அனாவசியமா டிவியை ப் பார்த்து அவன் சொன்னான், இவன் சொன்னான்ன்னு உங்களுக்கு இருப்பதாகக் கற்பனை பண்ணிருக்கீங்க. இது தேவையில்லாத பயம். இதுக்கு த்தேவை நோய் எதிர்ப்பு ஆற்றல் தான். அந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது மன தைரியம்தான். அது உங்ககிட்ட இல்லை.”

” நான் சாகக் கிடக்குறேன் நீ வசனம் பேசுறியேடி.”.
” எப்போதுமே நீங்க அப்படித்தான் உள்ளுக்குள்ள பயந்துகிட்டு வெளியே வாய்ச்சவடால் பேசுறது. உங்களுக்காவது ஒரு மைனர் ஆபரேஷன். நான் ரெண்டு பெரிய ஆபரேஷன் பண்ணி இருக்கேன். உங்களை விட அதிகமாக வேலை பார்க்கிறேன். துணி துவைக்க பாத்திரம் விளக்க, வீடு சுத்தம் செய்ய,கடைக்குப் போறேன். எனக்குத் தான் முதல்ல வரணும். இதுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை வேணுங்க. தைரியம் வேணும்.ஒருவேளை நோய் வந்தாலும் முறையான சிகிச்சை எடுத்துக்கி ட்ட்டா குணமாக்க முடியும் .தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாவது போல, நிறைய பேர்குணமாகி வீட்டுக்கும் போறாங்க. அதையெல்லாம் நீங்க பாக்கலையா.? நம்பிக்கையும், போராட்டமும் தான் வாழ்க்கை. பயம் எந்தப் பலனையும் தராது.”.
” ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணு”.
“இப்ப சொல்லுங்க ,சிகரெட்டையும் குடியையும் விடுறீங்களா என்ன?.
“சத்தியமா சொல்றேன்டி இனிமே ரெண்டையும் விட்டுடறேன்”.
“தைரியமா இருப்பீங்களா?”.
“இருப்பேன்டி.”.
” இருங்க வாறன்”.
கிச்சனுக்குப் போய் சூடா காபி கொண்டு வந்து “குடிங்க.”

“சாயங்காலம் நீங்க கடைக்குப் போன உடனே ரூமுக்குள்ள எட்டி பார்த்தேன். ஒரு பாட்டில் இருந்தது. மது. நீங்க கடைக்குப் போயிட்டு வந்து கொஞ்ச நேரத்தில் பாத்ரூம் போனீங்க. அப்போ, திரும்பவும் உங்க ரூமை எட்டிப் பார்த்தேன். ஒரு சின்ன பாட்டில் மோந்து பார்த்தேன் விஷம். உடனே ஜன்னல் வழியாக அதைக் கொட்டிட்டு கழுவி அதுல கபசுரக் குடிநீர் ஊற்றி வைத்தேன். நீங்க குடித்ததும் விஷம் இல்லை கபசுரக் குடிநீர். நீங்க எழுதி வைத்திருந்த கடிதத்தையும் படிச்சேன். நீங்க ஒரு பயந்தாங்கொள்ளி.”

 கட்டிலை விட்டு எழுந்து மனைவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். 

“இப்பவாவது சொல்லுங்களேன் அந்தப் பாழாப் போன சிகரெட்டையும் தண்ணியையும் விட்டுத்தள்ளுங்கள். சும்மா சவடால் பேசறத விட்டுட்டு மனசுகுள்ள தைரியத்தை வளர்த்துக்கிடுங்க வந்தது வரட்டும் .எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் .போராட்டம்தாங்க வாழ்க்கை. பயந்து பயந்து தினமும் சாகறதுக்கு, ஒரேடியா ஒருநாள் செத்தால்தான் என்ன.”

“எவ்வளவு அழகா பேசுற?. இவ்வளவு நாளும் உன்னைப் பேசவிடாம நான் கத்தி கத்தி வீனாப் போய்ருக்கேன். நீ விஷயம் தெரிஞ்சுக்கிட்டு பேசாம இருந்திருக்க நான் விவரம் தெரியாமல் கத்திக்கிட்டே இருந்திருக்கேன். வாடி என் செல்லம்” மனைவியை அன்போடு கட்டிப்பிடித்துக்கொண்டான்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.