தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 4 பேர் பலி
1 min read2.7.2020
தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் இன்று வந்துள்ளனர்.
முதலில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு, இசக்கிராஜாவும், பாண்டியும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களும் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி பார்த்தபோது விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரது உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து தட்டபாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.