ஆகஸ்டு 15-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு
1 min read
Corona vaccine from August 15; Indian Medical Research Council notification
3-7-2020
இந்தியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு 16-ந் தேதி முதல் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரலாம் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்து உள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா எண்ணற்றோரின் உயிரை காவு வாங்கி வருகிறது. இந்த கொடிய கொரோனாவுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக மருந்தோ, தடுப்பூசியோ கண்டு பிடிக்கவில்லை.
ஆனால் பல்வேறு நாடுகள் இதற்கான ஆராய்ச்சயில் இறங்கி உள்ளது. பல நாடுகள் மருந்து கண்டுபிடித்து அதை பயன்படுத்தும் வகையில் ஆய்வு செய்து வருகிறது.
ஆகஸ்டு 15-ந் தேதி முதல்
இந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து, ‛கோவேக்சின்’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியின், இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றது.
இதனை அடுத்து கொரோனா தடுப்பு மருந்து சோதனையை துரிதப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஐ.சி.எம்.ஆர்., கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 7 -ந் தேதி முதல் மனிதர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். மேலும், சோதனை வெற்றி அடைந்தால் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும், ஆகஸ்ட் 15-ந் தேதி தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவே கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு தடுப்பூசி
இதற்கிடையே ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் காடிலா நிறுவனமும் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மருந்து முதல்கட்டமாக விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதித்து பார்க்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். மனிதர்களிடம் நடத்தப்படும் முதல் கட்ட பரிசோதனையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகளை அடுத்து இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.