போலீஸ் நண்பர்கள் குழு கலைக்கப்படுமா?
1 min readWill the Friends of Police be dissolved?
5-7-2020
போலீஸ் நண்பர்கள் குழு கலைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
போலீஸ் நண்பர்கள் குழு
தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக இருக்க போலீஸ் நண்பர்கள் குழு (பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் ) அமைக்கப்பட்டது.
இந்த போலீஸ் நண்பர்கள் குழு அமைக்க காரணமாக இருந்தவர் பிரதீப் வி பிலிப். இவர் போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த போது இந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தார். பிரதீப் வங்கி அதிகாரியாக இருந்து பின்னர் போலீஸ் அதிகாரியாக மாறியவர் . இலக்கிய ஆர்வலான இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் திருநெல்வேலியில் அவர் டி.ஐ.ஜி.யாக இருந்தபோது பிரண்ட்ஸ் ஆப் போலீசை ஊக்குவித்தார். அந்த அமைப்பு வளர மிகவும் உறுதுணையாக இருந்தார். அவ் தற்போது தமிழ்நாடு சிவில் சப்ளை யில் அதிகாரியாக உள்ளார்.
குற்றச்சாட்டு
நல்ல ஒரு பலனை எதிர்பார்த்து இந்த போலீஸ் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டது. ஆனால் நாள் ஆக.. ஆக. இந்த குழு பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளானது. அதாவது போலீசாரின் எடுபடியாக மாறியதாக குற்றம் சாட்டப்படுகிறது. வாகனங்களை மறைத்து லஞ்சம் வாங்குவது, போலீஸ் காவலில் உள்ளவர்களை அடிப்பது போன்ற செயல்களுக்கு போலீசார் இவர்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீஸ் நண்பர்கள் குழு பல இடங்களில் ரவுடிகள் போல் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல்தான் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியேேர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் இந்த போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது.
சாத்தான் குளம் சம்பவத்தை அடுத்து இன்னும் 2 மாதங்களுக்கு அந்த குழுவை, போலீஸ் நிலைய வேலைக்கோ, ரோந்து பணிக்கோ ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், போலீஸ் தலைமையகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து, வாகன தணிக்கை மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளில் இந்தக்குழுவை பயன்படுத்தக்கூடாது. போலீஸ் நிலையத்திற்குள் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, இந்த போலீஸ் நண்பர்கள் குழுவை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டார். இதேபோல் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், அந்த குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு., போலீஸ் ஸ்டேசனுக்குள் சென்று பணியாற்ற மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழு சமூக பணிகளில் ஈடுபட தடையில்லை என தெரிவித்துள்ளார்.
கலைப்பா?
இந்தநிலையில், போலீஸ் நண்பர்கள் குழுவை தமிழகம் முழுவதும் பயன்படுத்த தடை விதிக்கப்படலாம் என்றும் , அந்த குழுவை கலைக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.