சாத்தான்குளம் வழக்கில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம் -சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி
1 min read10.7.2020
We have seized important documents in the Sathankulam case – CBCID IG Shankarசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார்.
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த வியாபாரிகளான தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக கொலை வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐகள் உள்ளிட்ட 10 போலீசாரை கைது செய்தனர். இந்நிலையில் இறந்த பென்னிக்சின் நண்பர்கள், 5 போலீசார், சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் மகராஜா, ஜெயசேகர், பியூலா ஆகியோரிடம் நேற்று மாலை துவங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது.
இதுகுறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக தற்போது வரை விசாரணை நடத்தி உள்ளோம். அடுத்து என்ன விசாரணை நடத்துவோம்? யாரை கைது செய்வோம்? என முன்கூட்டியே கூற முடியாது. இதுவரை 20க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்து தலைமைக் குற்றவியல் நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். அந்த காட்சிகள் பதிவான டிவிஆர் கருவிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை விசாரணைதான். புதிதாக ஏதேனும் தகவல் வந்தால் அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் வந்ததும் வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.