குழந்தைகள் முன்னிலையில் அரைநிர்வாணமாக நின்ற ரெஹானாவின் முன்ஜாமீன் தள்ளுபடி
1 min read
Rehana’s pre-bail dismissal for standing half-naked in front of children
25-7-2020
குழந்தைகள் முன்னிலையில் தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து, வலை தளத்தில் பதிவிட்ட வழக்கில், ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனுவை, கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ரெஹானா
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. பெண் உரிமை ஆர்வலர் என்று தன்னை கூறிக் கொள்ளும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்று பெரும் சர்ச்சையை கிளப்பினார். அவருக்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் “உடல் மற்றும் அரசியல்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ரெஹானா பாத்திமா அரை நிர்வாணமாக படுத்திருக்க, அவரது 14 மற்றும் குழந்தைகள் பாத்திமாவின் உடலில் ஓவியம் வரைவது போன்றும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து விமர்சித்து இருந்தனர். அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜாமீன் மனு
இதுபற்றி பா.ஜ.வை சேர்ந்த அருண் பிரகாஷ் கேரள போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் திருவல்லா போலீசார் பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமின் கோரி பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் “குழந்தைகளுக்கு பாலியல் கல்வியும் உடல் மீதான புரிதலும் அவசியம்; அதனால் என் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே எனது உடலில் படம் வரைய வைத்தேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
தள்ளுபடி
இந்த மனு நீதிபதி உன்னிக்கிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். அவர் கூறும்போது, ” குழந்தைகள் பாலியல் கல்விக் கொடுக்க விரும்பியிருந்தால் அதை தன் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதை நியாயப்படுத்த முடியாது. அதை நாகரீகமாகவும் கருத முடியாது.” என்றார்.