கொரோனாவில் இருந்து மீண்டவரை மீண்டும் தாக்குமா?
1 min read
Will the returnee from the corona attack again?
29-7-2020
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களை மீண்டும் கொரோனா தாக்குமா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.
கொரோனா
மனிதர்களை அம்மை, காலரா போன்ற தொற்றுகள் தாக்கினால், அவர்களை மீண்டும் தாக்காது என்பார்கள். காரணம் அவர்கள் உடலில் அதற்கான எதிர்ப்பு சக்திகள் உருவாகிவிடும்.
அதேபோல் கொரோனா தாக்கியவர்களை மீண்டும் தாக்குமா என்பதில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. இது மற்ற வைரசை போல் அல்ல. ஒருவர் உடலுக்குள் புகுந்து கொண்டால் தன்னை பல்வேறு விதங்களில் மாற்றிக் கொள்வதாகவும், அதனால் இது ஒரு முறை வந்தாலும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள்
ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இது தொடர்பாக விஞ்ஞானிகளுக்கே இன்னும் உறுதியாக தெரியவில்லை.
ஆனால் ஒருவரை கொரோனா தாக்கிய பின்னர் மீண்டும் தாக்குவதற்கு சாத்தியம் இல்லை என்பது பல விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
எதிர்ப்பு சக்தியின் காலம்
இதுபற்றி சுகாதார வல்லுனர்கள் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்” என்கிறார்கள்.
ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் அவர்களுக்கு மீண்டும் கொரோனா தாக்குவதில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் அல்லது அந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள்.
விஞ்ஞானிகளை பொறுத்தமட்டில், ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி என தெரிய வந்தபின்னர் அவர்கள், மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்று எதுவும் இல்லை என்கிறார்கள். எனவே ஒருவருக்கு மீண்டும் கொரோனா வந்தால், அதை அவர் மற்றவர்களுக்கு பரப்பும் ஆபத்து இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
3 மாதங்கள்
இதுபற்றி பாஸ்டன் மருத்துவ கல்லூரி உலக பொது சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் பிலிப் லாண்ட்ரிகன் கூறும்போது, “முதல் முறை தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பின்னர் அதே நபர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது இப்போதுதான் வளர்ந்து வருகிற அறிவியல்” என்கிறார்.
கடந்த வாரம் வெளியான அமெரிக்க ஆய்வு, லேசான தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள், சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், அவர்கள் மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளன.
ஆனால் ஆன்டிபாடிகள் மட்டுமே வைரசுக்கு எதிரான ஒரே பாதுகாப்பு அல்ல. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளும் பாதுகாப்பை வழங்க உதவும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரை மீண்டும் தாக்குமா என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அப்படி மீண்டும் வருமேயானால் அது, “நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் இருக்கிறது (நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்), பணிக்கு செல்லலாம்” என்ற கருத்தை பாதிப்பதாக அமையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.