தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
1 min read
Increase in the number of healers from Corona in Tamil Nadu
4-8-2020
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது பரவல் வேகம் சற்று குறைந்து உள்ளது. அதேபோல் குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
5,063 பேர்
தமிழ் நாட்டில் இன்று(செவ்வாய்க்கிழமை) மட்டும் 5,063 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 28 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 60 அரசு ஆய்வகங்களிலும் 65 தனியார் ஆய்வகங்களிலும் (மொத்தம்125 ஆய்வகங்கள்) இன்று பரிசோதனை செய்யப்பட்டன. இன்று 55,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 28 லட்சத்து 92 ஆயிரத்து 395 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,041 பேர் ஆண்கள், 2,022 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,62,476 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,05,782 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
குணம் அடைந்தவர்கள்
தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 6,501 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 08 ஆயிரத்து 784 ஆக உள்ளது.
இன்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை விட டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் நேற்றை விட இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது.
சாவு
இன்று மட்டும் கொரோனாவுக்கு 108 பேர் இறந்துள்ளனர். அதில் 83 பேர் அரசு ஆஸ்பத்தரிகளிலும், 25 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது.
இ ன்று சென்னையில் 23 பேரும், கன்னியாகுமரியில் 9 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவையில் 7 பேரும், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலியில் தலா 6 பேரும், மதுரை, தென்காசி, தேனி, திருவண்ணாமலையில் தலா 4 பேரும், கடலூர், சேலம், விருதுநகரில் தலா 3 பேரும், ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர், திருச்சி, வேலூரில் தலா 2 பேரும், தருமபுரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 55,152 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 276 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 21 ஆயிரத்து 383 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 33 ஆயிரத்து 626 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,023 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர, இன்று, விருதுநகரில் 424 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், தேனியில் 292 பேருக்கும், கடலூரில் 264 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், கோவையில் 228 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், தூத்துக்குடியில் 189 பேருக்கும், திருநெல்வேலி 155 பேருக்கும், கன்னியாகுமரியில் 128 பேருக்கும், தென்காசி 45 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1,143 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். (சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று குணம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.) இதுவரை சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,969 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று காஞ்சிபுரத்தில் 559 பேரும், விருதுநகரில் 447 பேரும், செங்கல்பட்டு, தென்காசியில் தலா 386 பேரும், தூத்துக்குடியில் 349 பேரும், திருவள்ளூரில் 319 பேரும், கோவையில் 233 பேரும், தஞ்சாவூரில் 200 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.