தமிழ்நாட்டில் 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
1 min read
Plasma treatment was successful for 57 people in Tamil Nadu; Minister Vijayabaskar
4-8-2020
தமிழ்நாட்டில் 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குணம் அடைந்தவர்கள் விகிதம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு எடுத்த பன்முக நடவடிக்கையால் குணமடைந்தோர் விகிதம் 77.8 சதவீதம் ஆக உள்ளது.
நாட்டிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை நிலையங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதேபோல் 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அளிக்கும் வசதியும் தமிழகத்தில் உள்ளது. இதுவரை 28,92,395 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை
தமிழகத்தில் இதுவரை 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தவறான தகவல்கள்
தமிழகத்தில் கொரோனாவால் 43 டாக்டர்கள் இறந்துவிட்டதாக ஆதாரமில்லாத செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த செய்தி தவறானது. திமுக., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறான தகவல்களை வெளியிட்டு டாக்டர்களின் மனஉறுதியை சீர்குலைக்க வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.