சுரண்டையில் டாஸ்மாக் சூப்பர்வைசர் வெட்டிக்கொலை
1 min read
12.8.2020
Tasmac Supervisor Assassination in Surandaiதென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரை, அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (51). இவர் ஊர்மேலழகியான் என்ற ஊரில் டாஸ்மாக் கடை சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உஷா (41). இவர்களுக்கு விஷ்வா (14), வினிஸ் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். தற்போது ஊரடங்காக இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகள் முத்துப்பாண்டியனின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளத்திற்கு சென்று விட்டனர்.முத்துப்பாண்டியன் மட்டும் சாம்பவர்வடகரை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியனை 3 மர்ம நபர்கள் கழுத்தை துண்டால் இறுக்கியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். இன்று காலை வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர் அங்கு முத்துப்பாண்டியன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துப்பாண்டியனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தென்காசி எஸ்.பி. சுகுணாசிங் பார்வையிட்டார்.
முத்துப்பாண்டியன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து சாம்பவர்வடகரை போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.