அகம் என்ற வார்த்தைக்கு இத்தனை அர்த்தமா?
1 min read
Ilakkiya Virunthu By Muthumani
.
இருவர் உரையாடல் கீழ்க்கண்டவாறு.
- அகம் கொண்டு அகம் மெழுகும் அகமே என் அகத்தைக் கண்டாயா?
- உன் அகம் என் அகத்தைத் தின்று விட்டது. என் அகத்தால் உன் அகத்தை அடித்தேன். என் அகம் ஒடிந்து விட்டது. உன் அகம் ஓடிவிட்டது.
ஒருவர் கேட்ட கேள்விக்கு அடுத்தவர் சொன்ன பதில்…. ஏதாவது புரிகிறதா?
இந்த உரையாடலில் அகம் என்ற சொல் பல முறை வந்துள்ளது. ஆனால் ஒரே பொருல் தரவில்லை.
அகம் என்னும் சொல் பல்வேறு பொருட்களைக் குறிக்கும். சரி இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்வியையும் அதற்குரிய பதிலையும் சற்று புரியும்படியாகச் சொல்வோம். - மாட்டுச் சாணத்தால் வீட்டை மெழுகிக் கொண்டிருக்கும் பெண்ணே என் ஒட்டகம் இப்பக்கம் வந்ததைப் பார்த்தாயா?
- உன் ஒட்டகம் வாசலில் காயப் போட்டிருந்த என் கோதுமையைத் தின்றுவிட்டது. நான் கையில் வைத்திருந்த கரண்டியால் ஒட்டகத்தை அடித்தேன். என் கரண்டி ஒடிந்து விட்டது. உன் ஒட்டகம் ஓடிவிட்டது.
அகம்… மாட்டுச்சாணம், வீடு, பெண், ஒட்டகம் ஆகிய பொருட்களை கேட்கப்பட்ட வினாவில் தருகிறது.
அகம்.. ஒட்டகம், கோதுமை, கரண்டி அல்லது அகப்பை, ஆகிய பொருள்களை பெறப்பட்ட விடையில் தருகிறது.
சிவகாசி. முத்துமணி.