June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இலக்கிய நிழலில் இளைப்பாறலாம்! (6)தலையை தானமாக கொடுக்க முனைந்த மன்னன்/ முத்துநாயகம்

1 min read

Relax in the literary shade! (6) The king who sought to donate the head

சோழநாட்டில் பெருந்தலைச் சாத்தனார் என்ற பெரும் புலவர் ஒருவர் இருந்தார்.

பெயருக்கு ஏற்ப அவருக்கும் ‘பெரும் தலை’தான். கல்வியில் சிறந்தவர்.

இருந்தும், புலவரிடம் பொருள் இல்லாததால், அவரது குடும்பத்தை வறுமை, அடித்துத் துவைத்து கந்தலாகக் காயப்போட்டு இருந்தது!

தமிழ், மானம்- இவை மட்டுமே புலவரிடம் மிச்சம் இருந்தது.

இவற்றில் ஒன்று போனாலும், புலவருக்கு உயிரும் போய்விடும்!
எனவே, தமிழும், மானமுமே அவருக்கு உயிராய் இருந்தது!

தரம் இல்லாதவர்களிடம் போய் அவரது இரவல்கரம் உதவிகேட்டு நீளாது. அதற்காக தகுதியான புரவலரைத்தேடி புலவர் புறப்பட்டார்.

சோழ நாட்டைக் கடந்து, கொங்கு நாட்டு எல்லையில் நடந்துசென்றார்.

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு மணியோசை, அவரது செவிகளில் வந்து விழுந்தது.

உற்றுப் பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு யானை வந்தது!

பெருந்தலைச் சாத்தனாருக்கு பெருமகிழ்ச்சி.
“மன்னவனே வருகிறானோ!” என்று மனம் நினைக்க, ஆவலாய் அவர் இருக்க, அருகே வரவர இன்னும் அளவில்லா மகிழ்ச்சி!

வந்தவன் மன்னன் அல்லன்; நண்பன். ஆம்! பெருஞ்சித்திரனார் என்ற இன்னொரு பெரும்புலவர்.

யானையில் இருந்த சித்திரனார், இறங்கி ஓடிவந்தார். நடந்துவந்த நண்பன் சாத்தனாரை, நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க நேர்ந்ததால், ஆவலில் ஆரத்தழுவிக் கொண்டார்.

இருவரும் நலம் விசாரித்தனர். நண்பனிடம் பொய் சொல்வது நட்புக்கு அழகல்லவே?

உள்ளபடியே சாத்தனார், தனது குடும்பம் பட்டினியால் படும்பாட்டை, ஒன்றுவிடாமல் ஒப்புவித்தார்.

சித்திரனார், நண்பனுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆற்றுப்படுத்தினார்.

“நண்பா! உன்போல்தான், என்னையும் வறுமை வாட்டியது. முதிரமலையை ஆண்டுவரும், வள்ளல் குமணனிடம் சென்றேன். எனக்கு பரிசில்களும் தந்து, அதைச்சுமந்து செல்ல இந்த யானையையும் தந்தான். நீயும் அவனிடம் செல்; உன் வறுமையைச் சொல்!” என்றார்.

நண்பனின் வார்த்தைகள் நம்பிக்கை தரவே சாத்தனார், முதிரமலையை நோக்கி நடந்தார்.
(அது தற்போது, உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள ‘குதிரை மலை’ ஆகும்)

பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகிய கடை ஏழு வள்ளல்களுக்குப் பிறகு கொடையில் சிறந்தவனாய் போற்றப்படும், குறுநில மன்னன் குமணன்.

அவனுக்கு ஒரு தம்பி உண்டு. பெயர் இளங்குமணன். அண்ணன் மீது அன்புக்குப் பதிலாக அவன் அழுக்காறு கொண்டிருந்தான்.

குமணன் அள்ளிக் கொடுப்பது, புகழ் எடுப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அண்ணனைக் காலி செய்துவிட்டு திண்ணையில் ஏறி அமர, நாளும் எண்ணிக் கொண்டிருந்தான்.

குமணன் அதைக் குறிப்பால் உணர்ந்தான். தம்பியோடு போராட எண்ணாமல், தானே காடு புகுந்தான்.

ஆசைப்படி இளங்குமணன் அரியணையில் ஏறி அமர்ந்தான். அது மட்டுமா? அண்ணனை ஒழித்திட அவசரமாக ஆணை ஒன்றும் இட்டான்!

அதுகேட்டு மக்கள் மட்டும் அல்ல; முதிரமலையே அதிர்ந்தது!

இவ்வாறு அங்கு நடந்த ஆட்சி கவிழ்ப்பையும், மக்கள் உணர்வையும் காதில் கேட்ட, புலவர் சாத்தனாரும் பேரதிர்வு கொண்டார்.

அவரை வறுமைத் துரத்தியது!
மன்னனிடமா? அண்ணனிடமா?
இனி யாரிடம் போய், உதவி கேட்பது? என்ற கேள்விகள் மனதில் எழுந்தன.

தாகம் தீர்க்க தண்ணீரிடம்தான் போகவேண்டும். கானல்நீரிடம் அல்ல, என்பதை அறியாதவரா புலவர்?

குமணனைத் தேடி காட்டுக்கே சென்றார்.

கல், முள்ளெல்லாம் கடந்து, அந்த நல்லுள்ளம் கொண்ட, வள்ளலைத் தேடிக் கண்டார். புலவரைக் கண்டதும் குமணன் முகம் மலர்ந்தான். அவரை மார்போடு தழுவி மனம் மகிழ்ந்தான்.

“செந்தமிழ்ப் புலவரே! பொன், பொருள்; அரண்மனை, அதிகாரம் எல்லாம் என் கரம் இருந்தவேளை நாடுதேடி, நீர் வரவில்லை! இன்று காடுதேடி வந்திருக்கிறீர். உமது கவலை என்ன?”என்று கனிவாகக் கேட்டான்.

சாத்தனார் கண்கலங்கினார்.

“வருவோர்க்கு எல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளலே! குமணா!! நான்படும் இன்னல்கள் ஒன்றா? இரண்டா? அதை உன்னிடம் அன்றி, நான் யாரிடம் சொல்வேன்?
சொல்கிறேன், கேள்…

எமது இல்லத்தில் அடுப்பு எரியவில்லை. காளான் முளைத்திருக்கிறது!

வறுமையால் வாடும்,
எம் மனையாளின் மார்பு
வற்றிவிட்டது; பால் இல்லை!

சுவைத்தும் சுவைத்தும்
எதுவும் சுரவாததால்,
எமது குழந்தை
கதறி அழுகிறது!

பிஞ்சு முகத்தைப்
பார்த்துப் பார்த்து
எம் மனைவி கண்களில்
கண்ணீர் பெருகுகிறது!

கையறுநிலையில்
அவள், என்முகம் பார்க்க,
நானோ, உன்முகம் பார்க்க
ஓடோடி வந்தேன் குமணா! ஓடோடி வந்தேன்!”
இவ்வாறு அவர்படும் வறுமையை வார்த்தைகளால் வரைந்து காட்டினார்,
சாத்தனார்.

அதுகேட்டு குமணனின் உள்ளம் குமுறியது.

“புலவரே! உமது வறுமைக் கொடியது. என்னை நாடிவந்த உம்மை வெறுங்கையோடு அனுப்ப நேரும் என்றால், நான் நாடு இழந்ததைவிட அது மிகக்கொடியது!” என்று கூறியவாரே உடைவாளை ஒரு கையால் உருவினான்.

சாத்தனாரோ, செய்வதறியாது மறுகினார்.
குமணன் தொடர்ந்தான்…

“புலவரே! என் தம்பி இளங்குமணன், என் தலையை கொண்டு வருவோர்க்கு, கோடி பொற்காசுகள் விலை தருவதாக ஆணையிட்டு இருக்கிறான்! என் தலையைக் கொய்து, அவன் கையில் போய் கொடும். உம் வறுமைப்பிணி தீரட்டும்! இதோ வாள். இதோ என் தலை!” என்று அந்தத் தமிழ்ப்புலவன்முன், தலைதாழ்ந்து நின்றான்!

சாத்தனாரின் உள்ளம் பதறியது. உடல் நடுங்கியது. கண்கள் சுழன்றன! குமணனின் கையிலிருந்த வாளை, கலக்கத்தோடு வாங்கினார்.

குமணனின் தலையை வெட்டவா? இல்லை. இதோ, புலவரே பதில் சொல்கிறார்…

“குமணா! உன் தலையைக் கொய்தா, என் வறுமையைக் களையவேண்டும்?
உன் உயிரைக் கொன்றா, என் வீட்டு விளக்கை ஏற்றவேண்டும்?

மாட்டேன்! ஒருபோதும் மாட்டேன்!

நீ எத்தனை குடும்பங்களில் வறுமையைக் களைந்தவன்?
எத்தனை தமிழ்ப்புலவர் இல்லங்களில் விளக்கை ஏற்றியவன்?

உன் தலையை வெட்ட, நான்மாட்டேன்! உன் தலையில் மீண்டும் மகுடம் சூட்டாமல், விடமாட்டேன்!” என்று மனதிற்குள் சூளுரைத்தார்.

பின்னர், வாளுடன் புறப்பட்டு இளங்குமணனைக் காண, அவன் அரண்மனைக்கு விரைந்தார்.

அரியணையில் அமர்ந்து இருந்தான், இளங்குமணன்.
அப்பொழுது வாயிற் காவலன் வந்தான். தலைவணங்கி நின்றான்.

“மன்னா! கையில் வாளுடன் ஒரு புலவர் வாயிலில் நிற்கிறார். தங்களைக் காண விரும்புகிறார்!” என்றான்.

“தலை இருக்கிறதா?” என்று இளங்குமணன் பதற்றமாகக் கேட்டான்.

“இருக்கிறது மன்னா! புலவருக்கு தலையெல்லாம் இருக்கிறது!” என்றான்.

மன்னனுக்கு சட்டென்று கோபம் வந்தது.
“மூடா! முதலில் நீ போடா. புலவரை வரச்சொல்!” என்று ஆத்திரத்தில் ஆணையிட்டான்.

பெருந்தலைச் சாத்தனார் கையில் வாளுடன் அவைக்குள் நுழைந்தார்.

அவரை அமரவைத்து, இளங்குமணன் இனிதே பேசினான். புலவருக்கு அவன்மேல் நன்மதிப்பு இல்லை. இருந்தும் குமணனின் நிலையை நினைத்து, அவனிடம் இரங்கிப் பேசினார்.

“மன்னா நீ வாழ்க! இந்த உலகம் நிலையற்றது. இந்த மனிதர்கள் வாழ்வு நிலையற்றது. புகழ் ஒன்றே நிலை பெற்றது. அது வீரத்தாலும் கொடையாலும் வருவது.

இதை அறிந்துதான் வள்ளல்கள், வாரி வழங்கினார்கள். அவர்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். அதனால்தான் அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். இப்படி நிற்பவர்கள் சிலரே!

பலர் செல்வம் நிறைந்து இருந்தும் பிறருக்கு ஈயும் குணம் இல்லாததால் புகழ்பெறாது மறைந்தொழிந்தனர். இதை அறிந்துதான் உன் தமையன் அள்ளி வழங்கினான்.
அதை தெரிந்துதான், நான் சோழ நாட்டிலிருந்து, கொங்கு நாடு வந்தேன்.
அவன் காட்டில் இருக்கிறான் என்றதும் நான் அங்கே சென்றேன்.

எனது வறுமைநிலை கேட்டு, கண்ணீர் விட்ட அவன், ‘புலவரே! உமக்கு ஏதேனும் கொடாமல் வறிதே நீவீர் சென்றால், அது நான் நாடு இழந்ததைவிடக் கொடியது. என் அருமைத் தம்பி என் தலையைக் கொண்டு வருவோருக்கு பரிசு அறிவித்து இருக்கிறான். எனது தலையை கொய்துசென்று, என் தம்பியிடம் கொடும்!’ என இந்த வாளை என்னிடம் கொடுத்தான். அவனிடம் வேறு பொருள் இல்லாததால், தலையையே தானமாகத்தர முன்வந்தான் (‘வாள் தந்தனனே, தலை எனக்கீய’) அத்தகைய தயாளனைத் தமையனாகப் பெற்ற பாக்கியவானே, இளங்குமணா! உன்னை நான் பார்க்க வந்தேன்!” என்றார் புலவர்.

இளங்குமணன், புலவரின் அறிவுரையால் இளகினான். மெழுகாக உருகினான். அதை உணர்ந்த சாத்தனாரின் கண்கள் பனித்தன.

இதோ, புறநானூற்றில் இடம்பெற்ற, பெருந்தலைச் சாத்தனாரின் அந்த உருக்கமான, இரண்டு செய்யுட்கள்…

(1)மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே;

துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;

தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன
வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்;

ஆடுமலி உவகையோடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே.
(புறம்-165)

(2)ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
………… ….. ……. ….. (புறம்-164)

பொருட்சுருக்கம்:-

(1)நிலை இல்லாத இந்த உலகத்தில் நிலைபெற நினைத்தவர்கள், தம் புகழை நிறுவிவிட்டு இறந்தார்கள். செல்வந்தர்கள் பலரோ, வறுமையால் இரப்பவர்க்கு ஈயாமல், வள்ளல்களின் வரிசையில் சேராமல் போனார்கள்.
பாடி வருபவர்களுக்கு யானைகளைக் கொடுக்கும் நல்ல புகழை உடைய வலிய குதிரைகளை உடைய தலைவன் குமணனைப் பாடி நின்றேன்!
தன்னிடம் பரிசு பெறாமல் யாரும் வறிதே சென்றால், தான் நாடு இழந்ததைவிட மிகவும் கொடுமையானது என்று கூறி, தன்னிடம் வேறு பொருள் இல்லாமையால், தன் தலையை எனக்கு பரிசாக அளிப்பதற்காக, வாளை என்னிடம் தந்தான். போரில் புறமுதுகு காட்டி ஓடாத அத்தகைய உன் தமையனைக் கண்ட வெற்றிக் களிப்போடு, நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.

(2)எமது இல்லத்தில் சமையலே செய்யாததால், அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. எம் மனையாள் உடல் மெலிந்து வருந்தியபடி இருக்கிறாள். பால் இல்லாததால் தோலோடு சுருங்கி, மார்பகத் துளைகள் மூடி வற்றிவிட்டன. அதை சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தைப் பார்த்து, கண்ணீர் மல்கும் என் மனைவியின் துன்பத்தை கண்டு, போரில்வல்ல குமணா! உன்னை நாடி வந்தேன்.

(பின்குறிப்பு:- புலவரின் முயற்சியால் பின்னர் அண்ணன், தம்பியினர் பகை மறந்து இணைவர். முதிரமலை மன்னனாக குமணனுக்கு மீண்டும் முடிசூட்டப்படும்.)

-க.முத்துநாயகம்,
லாலாக்குடியிருப்பு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.