எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எழுத முயற்சிக்கிறார்; மகன் சரண் தகவல்
1 min read
SP Balasubramaniam tries to write; Son Charan says
27-8-2020
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எழுத முயற்சிப்பதாக அவரது மகன் சரண் கூறினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மயக்க நிலையில் இருந்த அவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர், 90 சதவீதம் மீண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவருக்கு, ‘ரோபோடிக்’ உதவியுடன் ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரி நிர்வாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை சீராக உள்ள நிலையில், வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார்” என, கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
எழுத முயற்சி
நேற்று மதியம் மருத்துவமனைக்கு சென்றேன். என்னிடம் ஏதோ சொல்ல, எழுதிக் காட்ட முயற்சி செய்தார். ஆனால், அவரால் பேனாவை சரியாகப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும், இந்த வாரத்தில் பேனாவை பிடித்து எழுதிக் காட்டுவார் என நம்புகிறேன். அவர் இசை கேட்கிறார்; விரல்களை அசைக்கிறார். பாட முயல்கிறார். இவை அனைத்தும், அப்பா மீண்டு வருவதற்கான நல் அறிகுறிகள்.
இவ்வாறு சரண் கூறினார்.