இ-பாஸ் நடைமுறையில் இருப்பது ஏன்? – முதல்-அமைச்சர் விளக்கம்
1 min readWhy is e-pass in practice? – cheef Minister Description
27-8-2020
இ பாஸ் நடைமுறையில் இருப்பதற்கு என்ன காரணம் என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஆய்வு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் சென்றார். அங்கு நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல் – அமைச்சர், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பரிசோதனை
கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.நமது மாநிலத்தில்தான் அதிகளவு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.
அதேபோல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அச்சப்பட வேண்டாம்.
கடலூரில் இதுவரை 8 ஆயிரத்திற்கு அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளன. கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்படுகின்றன. கடலூரில் தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
தேர்வு ரத்து
மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும விதமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரியர் பேப்பரில் பாஸ் என்ற அறிவிப்பு ஓட்டுக்காக கூறப்பட்டது இல்லை. கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இ-பாஸ்
இ – பாஸ் நடைமுறையில் இருப்பதால் தான் யார்-யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை தொழில்துறையினர் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.
தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கவே ஒவ்வொரு மாவட்டமாக சென்று அவர்களை சந்தித்து வருகிறேன். அரசு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்களுக்கு கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பங்கேற்பதும், பங்கேற்காததும் அவர்களின் எண்ணம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.