திருவண்ணாமலை கோவிலுக்கு தினமும் 500 பக்தர்கள் அனுமதி
1 min read500 devotees are allowed daily to the Thiruvannamalai temple
31-8-2020
ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோவிலுக்கு தினமும் 500 பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவில்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்களை அனுமதிப்பது தடை செய்யப்பட்டது.
பின்னர் கடந்த மாதம் முதல் சிறிய கோவில்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் அதிக அளவு தளர்வுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதனால் செப்டம்பர் 1-ந் தேதி முதல்எல்லாக் கோவில்களையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
திருவண்ணாமலை
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை ) முதல் அனைத்துக் கோவில்களும் திறக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (1-ந் தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
கோவில் தினமும் காலையில் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு கோவிலுக்குள் செல்லஅனுமதி இல்லை.தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கால்களை நீரில் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் கட்டாயம் முகவசம் அணிந்து வரவேண்டும். கோவில் வளாகத்திற்குள் கட்டாயம் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
தேங்காய் பழங்களுக்கு தடை
சாமி சிலை மற்றும் கோவில் பகுதிகளை தொடக்கூடாது. தேங்காய், பழம், பூ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.இருமும் போதும் ,தும்மும் போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். கோவில்களில் நடைபெறும் பூஜை அபிஷேகம் மற்றும் உற்சவத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
60 வயதுக்கு மேற்பட்டோர் ,உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், சுவாசப் பிரச்சனை இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
500 பக்தர்கள்
இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கூறும்போது, அரசின் வழிகாட்டு முறைப்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். தினமும் 500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் வளாகத்தில் பக்தர்கள் அமர்ந்திருக்க அனுமதி கிடையாது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.” என்றார்.