கோர்ட்டு அவமதிப்பு வழக்கு; வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்
1 min readContempt of court case; Lawyer Prashant Bhushan fined one Rupee
31-8-2020
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல வக்கீல் பிராந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
விமர்சனம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு கடுமையாக விமர்சினம் செய்திந்தார்.
முந்தைய தலைமை நீதிபதிகளின் செயல்பாடு குறித்தும் டுவிட்டரில் அவர் விமர்சித்திருந்தார். நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
அவமதிப்பு வழக்கு
இதை தொடர்ந்து வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதனை அடுத்து ஆகஸ்டு 20-ம் தேதி விசாரணை நடத்திய சுப்ரீம்கோர்ட்டு, தீர்ப்பு தேதியை ஆகஸ்டு 25-க்கு தள்ளி வைத்தது.
பின்னர் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “பூஷண் பொதுநல வழக்குகள் மூலமாக நல்ல பணிகளை செய்திருக்கிறார். அவரை தண்டிக்க வேண்டாம்” என்று கடந்த 25-ம் தேதி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பூஷண் தனது பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனது முழு நம்பிக்கை அடிப்படையில் வெளியிட்ட டுவீட்களுக்கு வருத்தம் தெரிவிப்பது, உண்மையானதாக இருக்காது என்று பூஷண் கூறி அதை நிராகரித்துவிட்டார். இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும் பூஷண் வருத்தம் தெரிவிக்காமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். தண்டனையை அனுபவக்க தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை தொடர்பான தீர்ப்பு ஆகஸ்டு 31-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அபராதம்
அதன்படி பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(திங்கட்கிழமை) தண்டனை விவரத்தை அறிவித்தது. அப்போது, பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஒரு ரூபாய் அபராதத்தை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை மற்றும் 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்பட தடை விதித்து உத்தரவிட்டனர்.