சீனா மீண்டும் அத்துமீறல்; இந்தியா முறியடிப்பு
1 min readChina re-encroached; Breaking India
31-8-2020
எல்லைப் பகுதியில் சீனா மீண்டும் அத்து மீறலில் ஈடுபட்டது. ஆனால் அதை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டனர்.
எல்லையில் மோதல்
இந்திய மற்றும் சீன படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சீனா தரப்பிலும் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை சீன அரசு மறுத்தது.
இதையடுத்து எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்தது. இரு தரப்பும் படைகளை குவிக்கத் தொடங்கின. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னரேன சீன எல்லைப் பகுதியில் அமைதி திரும்பத் தொடங்கியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மீண்டும் அத்து மீறல்
பேச்சு வார்த்தை ஒருபுறம் நடக்கும் நிலையில் போர் அமைதி ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29-ந் தேதி நள்ளிரவு சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாகவும் இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்தார்.
முறியடிப்பு
இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கர்னல் அமான் ஆனந்த் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ராணுவ தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.