தலையில் கல்லைப் போட்டு வாலிபர் படுகொலை -நண்பர்கள் வெறிச்செயல்
1 min read
Assassination of a youth by throwing a stone at his head – Friends hysteria
10-9-2020
கூடங்குளம் அருகே மதுகுடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சேர்ந்து வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர்.
நண்பர்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள அடங்கார்குளத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் சுகந்தன் (வயது25). கூலித்தொழிலாளியான இவரும், அருகேயுள்ள மேலசிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வருவார்கள்.
நேற்று( புதன்கிழமை), முருகனின் பெற்றோர் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து அவர், தனது நண்பரான சுகந்தனிடம் செல்போனில் பேசினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. என்னுடைய வீட்டிற்கு வந்தால் நாம் இருவரும் சேர்ந்து மதுஅருந்தி விட்டு புரோட்டா, சிக்கன் சாப்பிடலாம். நான், அவற்றை வாங்கிவைத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுகந்தன் அவரது பெற்றோரிடம் முருகன் வீட்டிற்கு சென்று தூங்கி விட்டு மறுநாள் காலையில் வருவதாக கூறிச் சென்றார்.
அன்று இரவு 9 மணிக்கு முருகன் வீட்டிற்கு சுகந்தன் சென்றார். பின்னர் அங்கு வைத்து சுகந்தன், முருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மது அருந்தி விட்டு புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
கொலை
இதில் ஆத்திரமடைந்த சுகந்தன், முருகனையும், அவரது நண்பரையும் தாக்கினார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து சுகந்தனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அங்கிருந்த கிரைண்டர் கல்லை தூக்கி அவரது தலையில் போட்டனர். இதில் சுகந்தன் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து முருகனும், அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகந்தனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனையும், அவரது நண்பரையும் தேடிவருகின்றனர்.