June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மாணவர்களின் தற்கொலைக்கு முடிவு கட்டுங்கள்

1 min read

End student suicide

14-9-2020

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடந்தது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 14 நகரங்களில், 238 தேர்வு மையங்களில், 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வுக்கு முடிவு வரும்போது தேர்வு பெற்ற மாணவ-மாணவிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவர். குநை்த மதிபெண் எடுத்தவர்களின் குடும்பத்தினர் வேதனை அடைவார்கள். ஆனால் தேர்வு தொடங்கும் முன்னரே தமிழகத்தில் மூன்று குடும்பத்தினர் தாங்கொண்ணா துயரத்தில் ஆழந்துள்ளனர்.

தற்கொலை

மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்க்கா, தர்மபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோடை சேர்ந்த மோதிலால் ஆகியோர் தேர்வுக்கு முன்தின நாள்( சனிக்கிழமை) தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
அவர்கள் நீட் தேர்வுக்கு பயந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வளர்ந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இந்த பிஞ்சுகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டது வேதனையிலும் வேதனை. அவர்களின் பெற்றோருக்கு தீராத கவலை.

தடுக்க வழி

இந்த முடிவுக்கு நீட் தேர்வுதான் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். இன்னொரு தரப்பினர் இதை மறுக்கிறார்கள்.
நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா என்ற விவாததிற்கு நான் இப்போது வரவில்லை. ஆனால் இதுபோன்ற தற்கொலைகள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

மாணவர்கள் தற்கொலை என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அப்போதெல்லாம் பள்ளி இறுதி தேர்வு முடிவு வரும்போது ஆண்டு தோறும் சில மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள். பெரும்பாலும் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் இந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் இப்போது தேர்வு முடிவு வெளிவரும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவ-மாணவிகளிடம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம் பள்ளி இறுதி தேர்வு முடிவோ மதிப்பெண்ணோ அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
ஆனால் இப்போது மருத்துவ படிப்புக்கு ஆசைபடுபவர்கள்தான் பெரும்பாலும் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை வேண்டாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இதற்கு முன்பு பிளஸ்2 தேர்வு மதிப்பெண் வந்தவுடேனேயே தங்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்குமா கிடைகாதா என்று ஓரளவு புரிந்து விடும். ஆனால் இப்போது அப்படி அல்ல. பிளஸ்2 தேர்வில் மதிப்பெண் ஒரு பொருட்டே அல்ல. நீட் தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என்று மாணவர்கள் மட்டும் அல்ல அவர்களின் பெற்றோரும் நினைக்கிறார்கள். அப்படி நினைத்து, ஆசைப்பட்டு அது நடைபெறாமல் போகும்போது அவர்கள் விரக்தியின் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிடுகிறார்கள்.

பக்குவப்படுத்த வேண்டும்

இந்த விரக்தி மாணவ-மாணவிகளுக்கு எப்போதுமே இருக்க கூடாது. இதற்கு ஆசிரியர்களும், பெற்றோரும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்கும்போதே அவர்களின் மனதை பக்குவப்படுத்த வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்தால் மருத்துவ படிப்பு. இல்லை என்றால் என்ன படிக்கலாம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதே நேரம் அவர்களை நீட் தேர்வுக்கு ஊக்குவிக்கவும் வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்கள் இதில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். முதலில் அவர்கள் தங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் எப்படியும் டாக்டராக்கிவிடுவேன் என்ற வைரக்கியம் பெற்றோரிடம் இருக்க கூடாது. அதுவும் தங்கள் ஆசையை பிள்ளைகளிடம் ஒருபோதும் திணிக்க கூடாது. அப்படியானால்தான் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் சக்தி கிடைக்கும்.

இப்போது அரசியல் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். அதை மாணவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்…. கோர்ட்டுக்கு சென்றார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக நீட் தேவை என்று கூறிவிட்டது.
எனவே மாணவ-மாணவிகள் நீட் தேர்வை சந்திக்கும் தகுதியை உருவாக்கி கொள்ள வேண்டும்.

பயிற்சி

இதற்காக அரசு இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. அந்த பயிற்சி வகுப்பு தரமாக அமையவில்லை என்பது பலரது குற்றச்சாட்டு. எனவே அதை சிறப்பாக நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் அரசியில் கட்சியினர் எத்தனையோ சமூக நல சேவைகளை செய்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து தங்கள் கட்சி சார்பாக நீட் உள்பட பல்வேறு பயிற்சிகளை அளிக்கலாம்.
நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் அரசியல் கட்சிகூட இந்த இலவச பயிற்சியை அளிக்கலாம். காரணம் இது அறிவை புகட்டும் படிப்பு. அந்த படிப்புக்கு என்றுமே அழிவு கிடையாது. நீட் பயிற்சி எடுத்த மாணவர்களுக்கு ஒருவேளை மருத்துவ படிப்பு கிடைக்க வில்லை என்றாலும் அந்தப் பயிற்சி அவர்களை வேறு போட்டித் தேர்வுக்கு தகுதி ஆக்கும்.
அரசியல் கட்சியினர் நீட்டுக்கு எதிராக போராட்டம் ஒரு புறம் நடத்தினாலும் கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏழை மாணவர்கள் பலர் டாக்டராக வாய்ப்பு உண்டு. அவர்களின் போராட்டம் வெற்றிபெற்று நீட் ஒழிந்தாலும்கூட அவர்கள் கொடுத்த பயிற்சி மாணவர்களுக்கு என்றென்றும் துணை நிற்கும்.
நீட் தேர்வை ஆதரிக்கும் பாரதீய ஜனதா கட்சி கூட கிராமப்புறங்களில் நீட் பயிற்சியை வழங்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.