இந்தியாவின் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு
1 min readChina occupies 38,000 square kilometers of India’s land
17-9-2020
இந்தியாவின் 38000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
அறிக்கை
இந்தியா-சீனா எல்லை பிரச்சினை மற்றும் எல்லையில் சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்ற மேல்சபையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று( வியாழக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும் முயற்சியில், கல்வான் பள்ளத்தாக்கில் கர்னல் சந்தோஷ் பாபு தனது 19 துணிச்சலான வீரர்களுடன் உயர்ந்த தியாகத்தை செய்தார். அதன்பின்னர் படை வீரர்களின் மன உறுதியை மேலும் அதிகரிப்பதற்காக பிரதமர் லடாக் சென்றார்.
ஆக்கிரமிப்பு
இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 38000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
அத்துடன் சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5,180 சதுர கி.மீ. இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனாவிற்கு வழங்கி உள்ளது.
அருணாச்சல பிரதேச எல்லையின் கிழக்கு செக்டாரில் 90000 சதுர கிலோ மீட்டர் இந்திய பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.
சிக்கல்கள்
இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம். எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இதனை இந்த அவை புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.