போதை மாத்திரை கடத்தல்- செங்கோட்டை மருந்து கடைக்காரர் கைது
1 min read17.9.2020
Chencottai shopkeeper arrested for drug traffickingதூத்துக்குடியில் இருந்து கடந்த மாதம் கேரளாவிற்கு வாழைப்பழங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தி செல்லப்பட்டது. கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனைச்சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தலா 24 மாத்திரைகள் கொண்ட 36 கீற்றுகளில் 864 மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வலிநிவாரணி மாத்திரைகள் போதைக்காக கடத்திச் செல்லப்பட்டு விற்கப்பட்டது தெரியவந்ததால் அந்த மாத்திரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் செந்தில் முருகன்(26) கைது செய்யப்பட்டார். மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செந்தில் முருகனிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து அவர் யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டன. இதையடுத்து கலால் வட்ட ஆய்வாளர் பினு, இன்ஸ்பெக்டர் விஜயன், தடுப்பு அதிகாரிகள் சுஜித்குமார், சுரேஷ்குமார், பிரதீப்குமார் மற்றும் சிவில் கலால் அதிகாரி அஜீஷ் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆலப்புழா நீர்கிணறு பகுதியில் வல்லக்கடாவைச் சேர்ந்த நஹாஸ்(35) என்பவரை கொல்லம் உதவி கலால் கமிஷனர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் முருகன், நஹாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு மெடிக்கல் கடை உரிமையாளரை கேரள போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் போதை மாத்திரைகளை கேரளாவில் காயங்குளம், புனலூர், தென்மலை ஆகிய இடங்களில் கடந்த ஓராண்டாக விநியோகித்தது தெரியவந்தது. இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும், இதுபோன்று வேறு தடை செய்யப்பட்ட மருந்துகள் கேரளாவிற்கு கடத்தி வரப்படுகிறதா என்பது குறித்தும் கலால், காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.