ஓவியத்துக்கும் கற்பு உண்டு / ஆசி. கண்ணம் பிரத்தினம்
1 min read
Oovivathukkum karppu undu story by Aasi.Kannabi Rathinam
20-9-2020
அந்தக் காலத்தில் நான் எழுதிய ஒரு கதைப் புத்தகத்துக்குப் பொருத்தமான உள்படங்கள் வரைவதற்கு இரண்டு ஓவியர்களிடம் சொல்லியிருந்தேன்.
ஒரு நாட்டின் அரசனும் அரசியும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போல் ஒரு படத்தை ஓவியர் மாலி வரைந்து அனுப்பியிருந்தார். அதே போல் பக்கத்து நாட்டு அரசனும் அரசியும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போல ஒரு படத்தை ஓவியர் விமல் வரைந்து அனுப்பியிருந்தார். இருவரின் கைவண்ணங்களும் பாராட்டும்படியிருந்தது. ஆனால் ஒரு சின்ன குறை எனக்குத் தென்பட்டது.
விமல் வரைந்த படத்தில் பொலிவோடு அமர்ந்திருந்த அரசனின் அருகில் அமர்ந்திருந்த அரசியின் முகம் அவ்வளவு பொலிவாகத் தெரியவில்லை. படத்தில் திருத்தம் செய்து வாங்குவதற்குப் போதிய நேரம் இல்லை. உடனே அச்சுக்கு அனுப்ப வேண்டும். இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து மாற்றம் செய்யலாம். அந்தக் காலத்தில் அது முடியாது.
மாலி வரைந்த படத்தில் இருந்த அரசியின் முகம் பொலிவாக இருந்தது. மாலியின் பட அரசியின் முகத்தை வெட்டி எடுத்து விமல் படத்து அரசியின் கழுத்தில் உட்கார வைத்தேன். கச்சிதமாகப் பொருந்தியது. அதேபோல் மாலியின் படத்திலும் ஆள் மாற்றி ஒட்டினேன். சரியாகவே இருந்தது. அச்சுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனேன். மாற்றம் செய்ததை மனைவியிடம் சொன்னேன்.
“பொம்பிளைன்னா உங்களுக்கு அவ்வளவு மலிவா போச்சு… படத்தில் ஈஸியா ஆளை மாத்திட்டீங்க. நிஜத்தில் அப்படி நடந்தா ரெண்டு நாடுகளுக்கிடையிலயோ அல்லது ரெண்டு குடும்பங்களுக்கிடையிலயோ பெரிய போரே நடக்கும் தெரியுமா? என்றாள்.
“இனிமேலும் இப்படி பெண்களைக் கொச்சைப்படுத்தாதீங்க. ரெண்டு ஓவியர்களும் வருத்தப்படப் போறாங்க” என்று படபடத்தாள்.
உடனே அச்சகத்துக்கு போன் போட்டேன்.
“புக்ல ஒரு சின்ன கரெக்சன் இருக்கு. நாளைக்கு அதைச் சரிசெய்து பிரிண்ட் பண்ணலாம்” என்றேன்.
எதிர் முனையிலிருந்து சரி ஸார் என்று சொன்ன குரல்… அரைகுறைகளெல்லாம் கதை எழுத வந்தா இப்படிதானிருக்கும்” என்று முனங்கி யபடியே ரீசீவரைக் கீழேவைக்கும் ஓசை என் காதுகளில் விழுந்தது.
ஆசி. கண்ணம்பிரத்தினம்