எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்பட்டதா? – எஸ்.பி.பி.சரண் பதில்
1 min readHas the Central Government been asked to assist in the treatment of SP Balasubramaniam? – SPB Charan Answer
28/9/2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்கு மத்தி அரசிடம் உதவி கேட்கபட்டதாக வந்த தகவலுக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட முடியாமல் இருந்ததாகவும், மத்திய அரசிடம் உதவி கேட்டதாகவும் பேசப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டாததால் துணை ஜனாதிபதி உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலை பெற்றதாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகிகள் இன்று(திங்கட்கிழமை) கூட்டாக நிருபர்களிடம் பேட்டி அளித்தனர்.
இதில் சரண் கூறியதாவது:-
என் தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமிணயத்துக்கான மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. அவ்வப்போது சிகிச்சைக்கான கட்டணத்தை நாங்கள் ஆஸ்பத்திரியில் செலுத்தி வந்தோம். மருத்துவ காப்பீட்டு மூலமும் கட்டணத்தை செலுத்தி வந்தோம்.
ஆனால் என் தந்தை சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவர் இறந்தததும் எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டோம். அதற்கு கட்டணத்தை பற்றி இப்போது பேச வேண்டாம் . உடலை எடுத்துச் செல்லுங்கள் என்றுதான் கூறினார்கள்.
மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு கூறியிருந்தது.
சிகிச்சை கட்டணம் குறித்து வெளியான தகவல் தவறானது.
கட்டணத்தை செலுத்த யாருடைய உதவியையும் நாடவில்லை.
கொரோனாவால் சாகவில்லை
கொரோனா காரணமாக என் தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணமடையவில்லை. நுரையீரல் தொற்று காரணமாகவே இறந்தார். எதிர்பாராத மரணம் என்பதால், அதனை ஜீரணிக்க நீண்ட காலமாகும். இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறினார்.