காமராஜரின் அஸ்தியில் குளித்த தொண்டர்
1 min readVolunteer bathed in Kamaraj’s bones
2/10/2020
பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மீது அளப்பரிய பாசமும் கொண்டவர் செல்வராஜ்.
தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் இணைய தளம் மூலம் பெருந்தலைவர் பற்றியும் சிவாஜிகணேசன் பற்றியும் எழுதி வருகிறார். அவர் காமராஜரின் அஸ்தி பற்றிய நிகழ்வை இங்கே எடுத்துரைக்கிறார்…
——
என் தந்தை கிளாசியோம் (ஊர்:பெரியதாழை) . அவர் காங்கிரசின் பால் மிகுந்த பற்று கொண்டவர். பெருந்தலைவர் காமராஜரின் தீவிர தொண்டர்
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இயற்கை எய்த( மரணம்) அன்று நான் ஊரில் இல்லை.வெளி ஊரில் சென்றிருந்தேன். அப்பெருமகனின் முகம் காண என் தந்தையால் செல்ல இயலவில்லை. என் தந்தையின் முயற்சியில் எங்கள் ஊரிலிருந்து ஒரு வாடகை லாரி வரவழைக்க பட்டு சுமார் 60 பேர் மக்கள் தலைவனை காண (இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள ) அனுப்பப்பட்டார்கள்.
ஊர் பெரியவர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் வந்து என் தந்தையுடன் அமர்ந்து கண்ணீர் சிந்தி தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
எங்கள் ஊரிலிருந்து சென்னைக்கு சுமார் 450 கிலோ மீட்டர் தூரம். சென்றவர்கள் வரும்போது அவர்களை வரவேற்க அணி திரண்டவர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.
சென்றவர்கள் வந்ததும் பலர் கண்ணீருடன், பலர் ஏக்கங்களுடன் ,சிலர் களைத்து வந்தார்கள். அனைவரையும் வரவேற்று ஆறுதல் கூறி குடிப்பதற்கு நீராகாரம் வழங்கபட்டது.
ஒரு நண்பர் ( பெயர் – தாமரை பாண்டி ) என் தந்தையை தனியாக அழைத்து சிறிதாக தாளால் சுற்றப்பட்ட ஒரு பார்சலை கொடுத்து, ஐயா இது தலைவரின் பெருங்காலின் அஸ்தி. கவலாளிகள் ஒரு பக்கம் கூடத்தை கட்டுபடுத்த முயன்ற போது நான் பெரும் முயற்சி செய்து தலைவனின் அஸ்தியை எப்படியாவது தொட்டு வணங்கி விட வேண்டும் என்று தீர்மானித்து கால் பகுதியில் அப்பச்சியை தொடும்போது பெரு விரலை தொடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உடனே அதை கையில் எடுத்து கொண்டேன். யாரிடமும் காண்பிக்கவில்லை.
காரணம், வெளியில் தெரிய வந்தால் வாங்கி விடுவார்களோ என்று நினைத்து எவரிடமும் காட்டாது கொண்டு வந்தேன் என்றார்கள்.
தாமரை பாண்டி அவர்கள் உடன்குடியில் இப்பொது வசித்து வருகின்றார்கள்.
அந்த அஸ்தியை எங்கள் ஊர் கடலில் கரைப்பதற்காக ஒரு விழாவிற்கும், பொது கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்த்திருந்தார்கள்.
தலைவனின் அஸ்தியை 75 சதவீதம் கடலில் கரைக்கவும் மீதி 25 சதவீதம் வீட்டிலும் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடலில் அஸ்தி கரைப்பு எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தலைமை நடந்தது. கடலில் தலைவனின் அஸ்தியை கரைப்பதற்கு கட்டுமரங்கள் தயார் செய்யபட்டு பலரும் கட்டு மரத்தில் ஏறும்போது எனது 15ம் வயதில் நானும் காட்டுமரத்தில் ஏறிக்கொண்டேன். பெருந்தலைவரின் அஸ்தியை கருப்பையா நாடார் அவர்கள் (முன்னாள் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். சேர்மன். கரைசுத்துப்புத்தூர்- திருநெல்வேலி மாவட்டம் ) கடலில் கரைத்தபோது அந்த கரைசலில் நான் குதித்தேன்.
கட்டுமரத்தில் ஏறியபோது என் உடலில் பெருந்தலைவரின் அஸ்தியாக இருந்தது. அப்படியே கரைக்கு வந்தபோது அங்கு ஒருவர் ( பெயர் நினைவு இல்லை)கூறினார்கள், நீ பாக்யம் பெற்றவன்.
இதுபோல்தான் உன் தந்தையும் கன்யாகுமரியில் பாரத மாத காந்திஜியின் அஸ்தி கரைத்தபோது உன் தந்தையும் பல தடைகளையும் கடந்து மகாத்மாவின் அஸ்தி நீரில் குதித்து பாக்யம் பெற்றார்கள். இன்று தென்னாடு காந்தியின் அஸ்தியின் பாக்கியம் உனக்கு கிடைத்துள்ளது என்று என் கை பிடித்து வாழ்த்தினார்கள்.
அன்றய நினைவுகள் இன்றும் என் மனதில் நிலாடுகின்றது, மகிழ்வு தருகின்றது. கண்ணிலே என் தந்தையின் நினைவுகள் நீராக வடிக்கின்றது . பிறகு பொது கூட்டம் முடிந்து அனைவரும் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றார்கள் . பொதுக்கூட்டத்தில் அதிகமாக என் தந்தையின் அச்செயலை பற்றியே பாராட்டி பேசினார்கள்.
மேலும் எங்கள் வீட்டில் பெருந்தலைவரின் அஸ்தி இருப்பதை கேள்விப்பட்ட சுற்றுவட்டார தோழர்கள், நடிகர்திலகத்தின் அன்பர்கள் வந்து வணங்கும் வண்ணமே இருந்தார்கள் .
ஒரு முறை என் தந்தையின் நண்பர், வீட்டில் அஸ்தி வைக்க கூடாது. அது வீட்டுக்கு நல்லதல்ல எடுத்து கடலில் கலக்கி விடுங்கள் என்றபோது, என் தந்தை சினம் கொண்டு, இதை பற்றி பேசுவதாக இருந்தால் இனி வீட்டிற்கு வர வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டர்கள்.
நண்பரோ என் தந்தையின் கை பிடித்து மன்னித்து விடுங்கள். அப்பச்சி தலைவர் மீது தங்களுக்கு இருக்கும் பக்தி, அன்பு, மதிப்பு இவைகளை எண்ணி பெருமை படுகிறேன் என்று கூறி சென்றார்கள்.
வீட்டிலிருந்து சென்ற நண்பர், தான் சந்தித்த நண்பர்களிடமும் இந்த சம்பவத்தை சொல்லி மகிழ்ந்துள்ளார்கள்.
அப்பழுக்கற்ற ஏழை தலைவனின் மீது என் தந்தை கொண்டிருந்த மதிப்புதனை கண்டு நான் இன்றும் நினைவு கூர்ந்து பெருமை கொள்கின்றேன். அன்றய நினைவுகள் இன்றய என் மகிழ்வுகள் . கண்ணிலே கண்ணீர் துளிகள்.