தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனை
1 min read
Corona vaccine 3rd phase test in Tamil Nadu soon
12/10/2020
கொரேனா தடுப்பூசியான ‘கோவேக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்க உள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசியை உலக நாடுகள் பல கண்டு பிடித்த வரும் நிலையில் இந்தியாவிலும் அந்த மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. அவை தற்போது பரிசோதனையில் உள்ளன.
ஐதராபாதில் செயல்பட்டு வரும், பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டு பிடித்துள்ளது.
அந்த மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி, பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்க விளைவு இல்லை
தமிழகத்தில் சென்னை அருகே காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லுாரியில், அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாதால் 2-வது கட்ட பரிசோதனையில் வெற்றி கிடைத்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
3-ம் கட்ட பரிசோதனை
இதனை அடுத்து 2-ம் கட்டமாக 150க்கும் மேற்பட்டோருக்கு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை நடந்தது. மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதிலும் இதுவரை பக்க விளைவுகள் இல்லை.
இதனால் இந்த மாத இறுதிக்குள் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.
6 மாதங்கள்
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிப்பதில், இரண்டு கட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில், மூன்றாம் கட்ட ஆய்வை தொடங்குகிறோம்.
இதுவரை கோவேக்சின் மருந்தால், பக்கவிளைவு ஏற்படவில்லை. எனினும், மருந்தின் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, ஆறு மாதங்கள் தேவைப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.