பணக்குடியில் தந்தையை வெட்டிக் கொன்ற 2 மகன்கள்
1 min read
2 sons who hacked their father to death
2/11/2020
சொத்து தகராறில் தந்தையை வெட்டிக் கொன்ற 2 மகன்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சைக்கிள் பழுதுபார்க்கும் கடை
நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகர் ரோடு ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 65). இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு கென்னடி (40), ராஜா (36), சேகர் (32) ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 3 மகன்களும் கொத்தனார்களாக வேலை செய்து வருகின்றனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் தனது பூர்வீக வீட்டை மூத்த மகன் கென்னடிக்கு எழுதி கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற மகன்களான ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் சேர்ந்து தங்களுக்கு சொத்தில் பங்கு தருமாறு கூறி, தந்தை காமராஜ், அண்ணன் கென் னடி ஆகியோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
கொலை
நேற்று முன்தினம் இரவில் காமராஜ் தனது வீட்டில் மூத்த மகன் கென்னடியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் தந்தை காமராஜ், அண்ணன் கென்னடி ஆகியோரிடம் தங்களுக்கு சொத்தில் உள்ள பங்கை பிரித்து தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, தந்தை என்றும் பாராமல் காமராஜை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற அண்ணன் கென்னடிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த கென்னடி உயிருக்கு போராடியவாறு கிடந்தார். பின்னர் ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து அப்பகுதியினர் பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த கென்னடியை மீட்டு சிகிச்சைக்காக பணகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த காமராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜா, சேகர் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பணகுடியில் சொத்து தகராறில் தந்தையை மகன்களே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.