சிவாஜிகணேசனை மதிப்பீடு செய்த ஜெமினிகணேசனுக்கு இது நூற்றாண்டு!
1 min read
Actor Gemini Ganesan is 100 years old (17-11-2020)
தமிழ்த்திரையுலகில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், புரட்சிநடிகர் எம்ஜிஆரும் கோலோச்சிய காலத்தில் அரசியலில் தோன்றும் 3-வது அணி போல், கதாநாயகனாக வலம் வந்தவர், ஜெமினிகணேசன். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக்கொண்டு, புதுக்கோட்டையில் குடியேறிய ராமசாமி அய்யருக்கும், கங்கம்மாவுக்கும் 17-11-1920-ல் பிறந்து, கணபதிசுப்பிரமணிய சர்மா என பெயர் சூட்டப்பட்டவர் தான் பின்னாளில் சினிமாவுக்கு வந்த ஜெமினி.
இவருடைய தந்தை
ராமசாமி அய்யர்
புதுக்கோட்டை அரண்மனையில்
வேலை செய்தார். ஜெமினி 10 வயது சிறுவனாக இருந்தபோதே தந்தை காலமாகிவிட்டார். இதனால்
சித்தப்பா வீட்டில் வளர்ந்தார்.
ஜெமினியின் அத்தை பெயர்
முத்துலட்சுமி. இவர் தடைகளை மீறி டாக்டருக்குப் படித்து, ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு
முத்துலட்சுமி ரெட்டி என்று பிரபலமானார். தேவதாசி முறையை ஒழிக்க
சட்டம் கொண்டுவர காரணமானவர் தான், இந்த முத்துலட்சுமிரெட்டி.
ஆரம்பகாலத்தில் ராமகிருஷ்ண மடத்தில்
தங்கி படித்த ஜெமினி, பிறகு புதுக்கோட்டை
மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் படித்தபின், தாம்பரம்
கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து
பி.எஸ்சி. பட்டம் பெற்றார். தன் அத்தை முத்துலட்சுமி போல
டாக்டர் ஆகவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அப்போது மருத்துவக்கல்லூரிகள் அதிகம் கிடையாது. இடம் கிடைப்பதும் மிகவும் கஷ்டம்.
அந்த நேரத்தில் திருச்சியைச்சேர்ந்த
அலமேலு என்கிற பாப்ஜிக்கும், ஜெமினிக்கும் திருமணம் நடந்தது. ஜெமினியின் மாமனார்,
திருமணம் முடிந்தபின்
டாக்டர் படிக்க சீட் வாங்கித்தருகிறேன் என்று உறுதி அளித்து இருந்தார். ஆனால், திருமணமான கொஞ்சகாலத்திலேயே மாமனார் காலமாகிவிட்டார். இதனால் டாக்டர் ஆகும் ஜெமினியின் கனவு தகர்ந்தது
எனவே, வேறு வேலை தேடி, சென்னை
கிறிஸ்டியன் கல்லூரி
வேதியியல் பிரிவில்
விரிவுரையாளராக சேர்ந்தார்.
சிவாஜி கணேசனை மதிப்பீடு செய்த ஜெமினி கணேசன்
பின்பு அதை விட்டு,
ஜெமினி ஸ்டுடியோவில் போய்ச்சேர்ந்தார். மனிதவள ஆற்றல் துறையில் (Human resource development)
கேஸ்டிங் டைரக்டர் ஆகப் பணியாற்றினார்.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் புதுமுகங்களின் திறமைகளை பரிசோதித்து, ஸ்டுடியோ உரிமையாளர்
வாசனுக்கு குறிப்பு எழுதித்தரும் வேலை அது. அந்த வகையில் அவரிடம் பரிசோதனைக்கு வந்தவர் தான்,
வி.சி. கணேசனாக இருந்து பிறகு நடிப்பின் இமயமாக உயர்ந்த சிவாஜிகணேசன்.
அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப்பார்த்துவிட்டு
“இந்த பையனின் கண்ணும் முகமும் அபாரமாக இருக்கிறது. நிச்சயம் ஒரு நல்ல நடிகராக இவர் விளங்குவார்’
என்று கம்பெனிக்கு குறிப்பு எழுதிவைத்தார், ஜெமினி. அவர் எழுதிவைத்தது போலவே, சிவாஜிகணேசன் நடிப்புலகின் உச்சம் தொட்டது தனிக்கதை.
பிறகு, 1947-ல் ஜெமினி மிஸ் மாலினி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய அடையாளமே, வெறும் கணேசனாக இருந்த அவருக்கு ஜெமினிகணேசன் என்ற பெயரைக் கொடுத்தது.
மிஸ் மாலினியில் அவருக்கு சிறிய வேடம் தான். அடுத்து 1952-ல் வந்த தாயுள்ளம் படத்தில் ஜெமினி கவர்ச்சி வில்லனாக நடித்திருந்தார். (இதன் கதாநாயகன் ஆர். எஸ். மனோகர் பின்னாட்களில் நிரந்தர வில்லனாக நிலைபெற்றவர்).
ஜெமினி கணேசனுக்கு கதாநாயகன் அந்தஸ்து வழங்கிய முதல் படம் 1953-ல் வெளியான “பெண்”. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.
அவரது திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953-ல் வெளியான “மனம்போல மாங்கல்யம்”. இதில் அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.
தொடர்ந்து, காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெற்றுவந்த ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாக அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாக முன் நிறுத்தியது.
இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், புகழ்பெற்ற இயக்குனர்களான பீம்சிங், ஸ்ரீதர், கேஎஸ் கோபாலகிருஷ்ணன், கே. பாலசந்தர் ஆகியோரின் முதல் விருப்பத் தேர்வாக இடம் பெற்றார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய “கற்பகம்”, “சித்தி”, “பணமா பாசமா”, “சின்னஞ்சிறு உலகம்” ஆகிய படங்கள், ஜெமினி கணேசனுக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.
ஸ்ரீதரின் மாபெரும் காவியமான கல்யாணப் பரிசு படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். “தாமரை நெஞ்சம்”, “பூவா தலையா”, “இரு கோடுகள்”, “வெள்ளி விழா”, “புன்னகை”, “கண்ணா நலமா”, “நான் அவனில்லை” எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. “நான் அவனில்லை” திரைப்படத்தை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப்படம் வணிகரீதியில் தோல்வி அடைந்தாலும், பிலிம்பேர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. “பாசமலர்”, “பாவமன்னிப்பு”, “வீரபாண்டிய கட்டபொம்மன்” ஆகியவை சிவாஜிக்கு மட்டுமின்றி ஜெமினிகணேசனுக்கும் வெள்ளிவிழாப் படங்களாக அமைந்தன. ஜெமினி நாயகனாக நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள், பணமா பாசமா, கல்யாணப்பரிசு.
எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் “முகராசி” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.
சாவித்திரியுடன் காதலும் கல்யாணமும்
எந்த ஒரு நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி, ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சாவித்திரியுடன் அவர் நடித்த முதல் படம் “மனம்போல மாங்கல்யம்”. இதன் படப்பிடிப்பு நடைபெற்ற வேளையில்தான் இருவரும் காதலித்து மணம் புரிந்து கொண்டனர். இதற்குமுன் இருவரும் இணைந்து நடித்த “மிஸ்ஸியம்மா”வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும். இன்று கூட தொலைக்காட்சிகளில் இந்தப்படத்தைப்பார்க்கும் பலரும், ‘இவ்வளவு நேர்த்தியாக கதை சொல்ல முடியுமா?” என வியந்து பாராட்டுவார்கள்.
பின்னணிப் பாடகர்களில் டி.எம். சவுந்தரராஜனின் குரல், சிவாஜிக்கும், எம்ஜிஆருக்கும் கச்சிதமாகப் பொருந்தும். அதேபோல் ஜெமினி கணேசனுக்கான திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவருடைய ஆரம்பகாலப் படங்களில் பின்னணி பாடிய ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. சீனிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்தி விட்டது.
ஏஎம் ராஜாவின் “பாட்டுப்பாட வா”, பிபி சீனிவாசின் ” காதல் நிலவே கண்மணிராதா”, “இளமைக்கொலுவிருக்கும்”,” துள்ளித்திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேனின்று” , ” மயக்கமா கலக்கமா” போன்ற பாடல்களை குறிப்பிட்டுச்சொல்லலாம்.
தமிழில் மட்டும் 97 படங்களில் நடித்துள்ள ஜெமினி, பிறமொழிப்படங்களையும் சேர்த்து 200 படங்கள் வரை நடித்துள்ளார். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து வெளிவந்த “லலிதா”. சிவாஜியின் நண்பனாக அவர் நடித்த “உனக்காக நான்” படமும் அதே காலகட்டத்தில் வந்தது. பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவற்றில், கமலஹாசனின் தந்தையாக அவர் நடித்த “உன்னால் முடியும் தம்பி” சிறப்பான இடம் பெற்றது. அவர் கடைசியாக நடித்த படம், “அவ்வை சண்முகி” யாக வந்த கமலை காதலிக்கும் காதல் மன்னன் வேடமாகவே அமைந்தது.
ஜெமினி கணேசன் இயக்கிய
ஒரே படம் “இதய மலர்”. இந்தப் படத்தில்
“லவ் ஆல்’ என்று தொடங்கும்
ஒரு பாடலை ஜெமினி கணேசன் பாடியிருக்கிறார்.
70 வயதிலும் திருமணம்
ஜெமினி-பாப்ஜி தம்பதிக்கு ரேவதி, கமலா, நாராயணி,
ஜெயலட்சுமி ஆகிய மகள்கள்;
ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்புகளில் நடிக்கவந்த புஷ்பவல்லியை
கணேசன் காதலித்து இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.
ஜெமினி-புஷ்பவல்லி தம்பதிக்கு
ராதா, ரேகா ஆகிய 2 மகள்கள். இவர்களில் ரேகா, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
ஜெமினி-சாவித்திரி தம்பதிக்கு
விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உண்டு.
ஜெமினி தன் 70-வது வயதில்
ஜூலியானா என்ற
தன்னுடைய காரியதரிசியை
திருமணம் செய்துகொண்டார்
ஜெமினிகணேசனுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ஜெமினிகணேசனுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி அளிக்க முன்வந்ததாகவும், ஜெமினி வேண்டாம் என மறுத்து விட்டதாகவும் சொல்வார்கள்.
ஜெமினி கணேசன் பெற்ற விருதுகள்:
பத்மஸ்ரீ, கலைமாமணி, பிலிம்பேர், எம்ஜிஆர் தங்கப் பதக்கம்
ஆகியன.
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த ஜெமினிகணேசன்,
22-03-2005 அன்று தனது 85-வது வயதில் சென்னையில் மரணம் அடைந்தார்.
இன்று (17-11-2020) அவருக்கு 100 வயது. அவரது நூற்றாண்டு விழாவை அவருடைய குடும்பத்தினராவது கொண்டாடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
–மணிராஜ்,
திருநெல்வேலி.