நடிகை சித்ரா தற்கொலை சம்பவத்தில் கணவர்ஹேம்நாத் கைது- பரபரப்பு தகவல்கள்
1 min read
Actress Chitra’s husband arrested in suicide case
15/12/2020
டெலிவிஷன் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு தூண்டியது எப்படி என்று அவர் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
சித்ரா தற்கொலை
டெலிவிஷன் நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்கொலைக்கு காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சம்பத்தன்று சித்ராவுடன் அவரது கணவரான ஹேம்நாத் தங்கி இருந்தார். அவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. அடுத்த மாதம் அவர்கள் திருமணம் செய்ய இருந்த நிலையில் சித்ராவும் ஹேம்நாத்தும் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்துள்ளனர்.
போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பல தரப்பிலும் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சித்ராவின் தாயார் விஜயா கூறும்போது தன்னுடைய மகள் சாவுக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று கூறியிருந்தார்.
ஹேம்நாத்திடம் மட்டும் போலீசார் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
கைது
இதையடுத்து சித்ராவுக்கு சொந்தமான மற்றும் ஹேம்நாத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை நேற்று (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் விசாரணையின்போது ஹேம்நாத் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
சந்தேகம்
சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன் பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் சித்ராவுனங நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டுள்ளார்.
சித்ரா எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார். இதுபற்றி சித்ராவிடம் ஹேம்நாத் “எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், எந்த நடிகருடன் ஆட்டம் போட்டாய் என எனக்கு தெரியும். எனக்கு தெரியாத விசயங்களை மறைக்காமல் என்னிடம் சொல்” என பல கேள்விகள் கேட்டு சித்ராவை மன உளைச்சலை ஏற்படுத்தினார்.
மேலும் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த நாடகத்தில் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதனை வைத்தும் சித்ராவிடம் ஹேம்நாத் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் சித்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
வாக்குவாதம்
சம்பவம் நடந்த அன்று கடைசியாக நடந்த படப்பிடிப்பிற்கு சென்ற ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் அறைக்கு சென்றவுடன் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் சித்ராவிடம், ‘நீ இருப்பதை காட்டிலும் சாவதே மேல், செத்துப்போ’ என்று கூறிவிட்டு ஹேம்நாத் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதனால்தான் சித்ரா தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக சித்ரா தனது தாய் விஜயாவிடம் பேசி இருக்கிறார்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
பண நெருக்கடி
மேலும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடைபெறவில்லை அல்லவா? இதனால் சித்ரா வருமானம் இல்லாததால் பண நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் திருவான்மியூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிய சொகுசு கார் ஒன்றும் வாங்கி இருந்தார்.
மேலும் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்த திருவேற்காட்டில் உள்ள பிரபல மண்டபத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் கணவர் ஹேம்நாத்தும் திடீரென்று சித்ராவிடம் நீ நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த சித்ரா கடைசியாக ஓட்டலுக்கு வந்தபோது ஹேம்நாத்திடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.