சித்ரா தற்கொலை விவகாரம்; ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ. விசாரணை
1 min read
Chitra suicide case; R.D.O. to Hemnath. Investigation
17/12/2020
நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது கணவர்ஹேம்நாத்திடம் ஆ.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
சித்ரா தற்கொலை
டெலிவிஷன் நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா தற்கொலை தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர். இதில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
அதாவது சித்ரா மீது சந்தேகம் அடைந்த ஹேம்நாத் அவரை துன்புறுத்தி இருப்பது தெரியவந்தது.
ஆர்.டி.ஒ. விசாரணை
திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர்.
சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். பிற்பகல் வரை விசாரணை நீடித்தது.
சித்ராவிடம் நெருங்கி பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.
சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.