மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு முழு நிலமும் கொடுக்கப்பட்டு விட்டது; முதல்வர் உறுதி
1 min readThe entire land has been given to the AIIMS Hospital in Madurai; CM confirmed
18/12/2020
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி
மதுரையில் மத்திய அரசு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவித்தது. அதற்கான அடிக்கல்லும் கட்டப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரி கட்டுமானப்பணி ஏதும் தொடங்கப்படவில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் இதுபற்றி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட மாநில அரசு இன்னும் இடம் தரவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
கொடுக்கப்பட்டு விட்டது
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட முழு நிலமும் கொடுக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக்கொள்ளவில்லை. மத்திய அரசின் அதிகாரிகள் இன்னும் கையெழுத்திட்டு நிலத்தை பெற்றுக்கொள்ளவில்லை.” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மின்துறையை தனியார்மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. கியாஸ் விலையை குறைக்க மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்தல் பிரசாரம்
நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். எடப்பாடி தொகுதியில் இருந்து நாளை முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் தான் பாரதீய ஜனதா உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.