ஆறுமுகநேரியில் சாக்லெட் வடிவில் புகையிலை விற்பனை
1 min readSale of tobacco in the form of chocolate at Arumuganeri
18/12/2020
ஆறுமுகநேரியில் மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து ‘சாக்லெட்’ வடிவிலான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டது.
புகையிலை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது ஆறுமுகநேரி பேயன்விளை கீழத் தெருவை சேர்ந்த சக்தி விஜயன் (வயது 40) என்பவரது வீட்டில் 12 மூடைகளில் 250 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவைகளை போலீசார் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
கைது
இதனைத் தொடர்ந்து சக்தி விஜயனை போலீசார் கைது செய்தனர். இவருக்கு புகையிலைப் பொருட்களை விநியோகம் செய்த உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த ஜேக்கப் (55) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த மாதம் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக ஆறுமுகநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.
ஜேக்கப் மற்றும் சக்தி விஜயன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சாக்லெட் வடிவில்…
போலீசாரால் கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் அனைத்தும் இந்தி எழுத்துகளுடன் கூடிய பாக்கெட்டுகளின் உள்ளே விதவிதமான சாக்லேட் மற்றும் பிஸ்கட் வடிவங்களில் இருந்துள்ளன.
வடமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட போதை ரகமான இப்பொருட்கள் அனைத்தும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
தற்போது பிடிபட்டுள்ள புகையிலை பொருட்கள் இரண்டரை லட்சம் ரூபாய் என்று மதிப்பிட பட்டாலும் கொரோனா நெருக்கடி காலத்தில் ரூ. 5 லட்சத்திற்கு கைமாறியது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட ஜேக்கப், சக்தி விஜயன் ஆகியோருக்கு வட நாட்டு கும்பல்களுடன் நேரடி தொடர்பு உள்ளதா? அல்லது இடைத்தரகர்கள் உள்ளார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராட்டு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிவித்தார்.