இந்தியா ஒரே நாளில் 20,035 பேருக்கு கொரோனா
1 min read
India corona for 20,035 people in one day
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தை கடந்த பிறகு, தொடர்ந்து 3 மாதங்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
அந்த வகையில் டிசம்பரில் மட்டும் சுமார் 8 லட்சத்து 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட பாதிப்பை விட 35 சதவீதம் குறைவு ஆகும்.
ஏற்கனவே கடந்த அக்டோபரில் 29 சதவீதம், நவம்பரில் 32 சதவீதமும் பாதிப்பு குறைந்திருந்தது. ஒரு மாத பாதிப்பு முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் 10 லட்சத்தை தாண்டியது. அதன் பிறகு பரவல் வேகம் உச்சத்துக்கு சென்ற நிலையில் டிசம்பரில் 10 லட்சத்திற்குள் வந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 11,400 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். மே மாதம் 4,267 பேர் உயிரிழந்த நிலையில், ஜூன் மாத பலி எண்ணிக்கை 11,988 ஆக உயர்ந்திருந்தது.
அதன்பிறகு நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்தது. செப்டம்பரில் மட்டும் சுமார் 33 ஆயிரம் உயிர்களை வைரஸ் காவு வாங்கி இருந்தது. கடந்த 7 மாதத்தில் டிசம் பரில் பலி எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 20,035 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,02,86,709 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,215, மராட்டியத்தில் 3,509, மேற்குவங்கத்தில் 1,170, சத்தீஸ்கரில் 1,035 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் நேற்று 256 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,48,994 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மராட்டியத்தில் 49,521, கர்நாடகாவில் 12,090, ஆந்திராவில் 7,108, தமிழ்நாட்டில் 12,122, கேரளாவில் 3,072, டெல்லியில் 10,536, உத்தரபிரதேசத்தில் 8,364, மேற்குவங்கத்தில் 9,712, ராஜஸ்தானில் 2,696, சத்தீஸ் கரில் 3,371, அரியானாவில் 2,905, குஜராத்தில் 4,306, மத்தியபிரதேசத்தில் 3,606, பஞ்சாபில் 5,341 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
வீடு திரும்பினர்
நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 23,181 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 2,54,254 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 17.31 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 10,62,420 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.