June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டிலேயே அதிக மழை பொழிந்த இடம், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊத்து!

1 min read

The highest rainfall in Tamil Nadu is in the Nellai district.

3/1/2021

தமிழ்நாட்டைப்பொருத்தவரை குளிர்கால மழை, கோடைகாலமழை, தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என நான்கு பருவங்களில் மழை பொழிகிறது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பெற்ற மழை அளவு குறித்து இங்கே காணலாம்.

குளிர்காலம்

ஜனவரி, பிப்ரவரி ஆகிய 2 மாதங்கள் தமிழகத்திற்கு குளிர் (பனி) காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு சராசரியாக 27.9 மில்லி மீட்டர் மழை பெறும்.
கடந்த 2020-ம் ஆண்டு குளிர் காலத்தில் சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சராசரி மழை பதிவானது. மற்ற எல்லா மாவட்டங்களும் மழை பற்றாக்குறையை சந்தித்தன.

கோடை காலம்

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் தமிழ்நாட்டுக்கு கோடை காலம் ஆகும்.
இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலே மிக அதிக மழை பெய்யும் மாவட்டம் கன்னியாகுமரியாகும். ஒட்டு மொத்த தமிழகத்தை எடுத்துக் கொண்டால் கோடை காலத்தில் சராசரியாக 126.4 மிமீ மழை பொழிகிறது. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 75.7 மிமீ மழை மட்டுமே பதிவானது. இது 40 சதவீத பற்றாக்குறை.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் போதிய மழை பதிவானது. அம்மாவட்டத்தில் பதிவான மழை அளவு 267.7 மி.மீ. மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை தான்.

தென் மேற்குப்பருவமழை

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் இயல்பு மழை அளவு 342 மிமீ. ஆனால் கடந்த ஆண்டு 421.4 மிமீ மழை பதிவானது .இது இயல்பை விட 24 சதவீதம் அதிகம்.
தென்மேற்குப் பருவமழைக்காலத்தில் அதிகம் மழை பெய்த மாவட்டங்கள் பின்வருமாறு:-

1)நீலகிரி 1,373 மிமீ
2)கோயமுத்தூர் 1,112 மிமீ
3) வேலூர் 598.1 மிமீ
4) சேலம் 560 மிமீ
5) கன்னியாகுமாரி 504.6 மீமீ

தேவாலா, சின்னகல்லாறு, வால்பாறை, கோதையாறு ஆகிய பகுதிகள் அதிக மழையைப் பெற்றன.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக மழை பெய்த மாவட்டம், தூத்துக்குடி.


வடகிழக்குப் பருவமழை

அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழைக் காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் இயல்பு மழை அளவு 450 மிமீ. .ஆனால் 477 மிமீ மழை பதிவானது .

வடகிழக்குப்பருவ மழையை தமிழகத்தில் அதிகம் பெற்ற 5 மாவட்டங்கள்:

1) சென்னை 1,041 மிமீ
2) நாகப்பட்டினம் 1,038 மிமீ
3)கடலூர் 946 மிமீ
4) திருவாரூர் 834 மிமீ
5) செங்கல்பட்டு 830 மிமீ.

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் பெய்த இடங்கள் :

1.ஊத்து (நெல்லை மாவட்டம்) 2,640மிமீ
2.நாலுமுக்கு நெல்லை) 1,986 மிமீ
3.மாஞ்சோலை (நெல்லை) 1,668மிமீ
4.டிஜிபி அலுவலகம் (சென்னை) 1,543 மிமீ
5.பரங்கிப்பேட்டை (கடலூர் )1,341 மிமீ
6.கடலூர் 1,323 மிமீ

வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் மிக அதிக மழை பதிவானதில் முதல் மூன்று இடங்களை நெல்லை மாவட்டம் பெற்றுள்ளது. (ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை). அதிலும் மணிமுத்தாறு மலையில் தேயிலைத்தோட்டங்கள் விரிந்து பரந்துள்ள ஊத்து பகுதியில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 2,000 மி.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இது உச்சக்கட்ட மழைப்பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை பற்றாக்குறை மாவட்டங்கள்

வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிலேயே மிக குறைவான மழையை பெற்ற இடங்கள்:-

1)வெண்ட் வொர்த் தேயிலை எஸ்டேட் (நீலகிரி) 35மிமீ
2) பர்வுட் எஸ்டேட் ( நீலகிரி) 78 மிமீ
3) களியல் (கன்னியாகுமரி) 79 மிமீ
4) மசினக்குடி (நீலகிரி) 85 மிமீ
5) கிருஷ்ணகிரி 90 மிமீ
6) தாளவாடி (ஈரோடு) 105 மிமீ
7)அன்னூர் (கோவை) 107 மிமீ

கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, திருச்சி, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்கள் மழை பற்றாக்குறையை சந்தித்தன.

கன்னியாகுமரியும், கோவையும் மழை பற்றாக்குறையை சந்தித்தாலும் மற்ற பருவகாலங்களில் நல்ல மழையைப் பெற்றுள்ளன. அதாவது, இவ்விரு மாவட்டங்களில் ஒட்டு மொத்த ஆண்டு மழைப்பொழிவு 1,000 மிமீ தாண்டியுள்ளது.

ஆண்டு மழைப்பொழிவு



கடந்த 2020-ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக (ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை) தமிழகத்தில் அதிகம் மழை பதிவான முதல் 10 மாவட்டங்கள்:-

1) நீலகிரி 1,885 மிமீ
2) கோயமுத்தூர் 1,585 மிமீ
3) சென்னை 1,572 மிமீ
4) நாகப்பட்டினம் 1,420 மிமீ
5)கடலூர் 1,323 மிமீ
6) திருவாரூர் 1,304 மிமீ
7) திருவள்ளூர் 1,229 மிமீ
8) விழுப்புரம் 1,137 மிமீ
9) சிவகங்கை 1,112 மிமீ
10) பெரம்பலூர் 1,102மிமீ

கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் மிக அதிகமான மழையைப் பெற்றது, சிவகங்கை மாவட்டம் (1,112 மிமீ மழை). இரண்டாவதாக குமரி மாவட்டம் 1,100 மிமீ மழையைப் பெற்றுள்ளது.

வேலூர், அரியலூர் மாவட்டங்களும் தலா 1,000 மிமீ தாண்டி மழைபெற்றுள்ளன. இவை உள்பட 13 மாவட்டங்கள் 1,000 மிமீ க்கு மேல் மழையை பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் நிவர், புரெவி ஆகிய இரு புயல்கள் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வந்தன. இவை கடலோரப்பகுதிகளை கடுமையாகத் தாக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கரையை நெருங்கியதும் இவை வலுவிழந்து நல்ல மழையை மட்டும் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்திருக்கும் இந்த 2021-ம் ஆண்டிலும் தமிழ்நாடு நல்ல மழையைப் பெறும் என்றும், அதிலும் குறிப்பாக இந்த ஜனவரி மாத குளிர் காலத்திலும் அதிக மழையைப் பெற வாய்ப்பு உள்ளது என்றும், வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

–மணிராஜ்,
திருநெல்வேலி. .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.