கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்
1 min read
Bird flu spreading in Kerala
4.1.2021
கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவுகிறது.
பறவை காய்ச்சல்
கேரள மாநிலம் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்துப் பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு 1500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கி உள்ளது.
இந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் செயல்படும் பறவை நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கேரளாவில் பரவியது பறவை காய்ச்சல் தான் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து கேரள கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜூ கூறும்போது, ‘‘நோய் அறியப்பட்ட பகுதியில் பறவைப் பண்ணை வைத்திருப்பவர்கள், வளர்ப்பு பறவைகளை அழித்து நோய்ப்பரவலை தடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அழிக்கும் பறவைகளுக்கான இழப்பீட்டை அரசு வழங்கும்’’ என்று அறிவித்துள்ளார்.
வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5என்8 வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016&ம் ஆண்டு பறவை காய்ச்சல் பரவியது குறிப்பிடத்தக்கது.