பி.எச்.பாண்டியன் மணிமண்டபம்; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
1 min readP. H. Pandian Manimandapam; Edappadi Palanisamy opened
4.1.2021
சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மணி மண்டபத்தை முதல்&அமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.
பி.எச்.பாண்டியன் மணிமண்டபம்
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக கோவிந்தபேரியில் 20 சென்ட் நிலத்தில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உருவசிலையுடன் நினைவுமண்டபம் அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளது. மணி முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மணிமண்டபத்தை திறந்து வைத்த பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சேஷனைப் போல..
நெல்லை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கிடைக்க போராடியவர் பி.எச்.பாண்டியன். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, கட்சியில் இருந்தவர் பி.எச்.பாண்டியன். 1977 முதல் 1989 வரை தொடர்ந்து 4 முறை சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 1985 முதல் 89 வரையிலும் சபாநாயகராக இருந்தார்.
இந்திய அரசியலமைப்பில் எத்தனையோ பதவிகள் இருந்தாலும் பாமரனுக்கும் தெரிவது போன்ற சில பதவிகளை வகித்த ஆளுமைகளால் அதற்கு சிறப்பும் ஊடகவெளிச்சமாகும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் தலைவராக இருந்த சேஷனைப்போல சபாநாயகராக பி.எச்.பாண்டியன் இருந்த பிறகுதான் அந்த பதவிக்கே ஒரு வெளிச்சமும் சிறப்பும் கிடைத்தது. ஒருவரது அறிவும் ஆக்கவும் எத்தகைய உயர்விற்கு இட்டுச்செல்லும் என்பதற்கு பி.எச்.பாண்டியன் உதாரணமாவார்.
நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் செயலாக்கம் பெற நீதிமன்ற ஆணைகளை பெற்றவர். தமிழகத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது 10 ஆயிரம் டன் அரிசி விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு ஆணைப்பெற்றவர். 1986ல் செங்கற்பட்டு, கிழக்குகடற்கரை சாலையில் 17 ஆயிரம் ஏக்கர் அபகரிப்பு நிலத்தை மீட்டவர். அவரது ஊரான கோவிந்தபேரியில் 5 ஏக்கர் நிலம் தந்து மனோ கல்லூரி உருவாக காரணமானவர். அங்கு தற்போது 1500 மாணவர்கள் பயில்கின்றனர். அவர் அசாத்திய துணிச்சலோடு திகழ்ந்தார்.
சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நியூயார்க்கில் பேசியபேச்சின் சாரம்சமான “தைரியமாக பிரச்னையை எதிர்த்து நில். ஒருபோதும் பயந்து ஓடாதே. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள்” என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பிஎச்பாண்டியன்
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிச்சாமி பேசினார்.
சட்ட நுணுக்கங்கள்
விழாவில் துணைமுதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: பி.எச். பாண்டியன் கிரிமினாலாஜி, சட்டக்கல்வியில் முதுகலை பயின்றவர். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களில் 26 ஆண்டுகள் பயணித்து புகழ்மிக்க கிரிமினல் வழக்குகள், அரசியலமைப்பு சட்ட வழக்குகளிலும், பொதுநல வழக்குகளிலும் வெற்றிபெற்றவர். தமது அரசியல் கிரிமினல்களையும் சந்திக்கவேண்டும் என எம்.ஜி.ஆர்., இவரை இணைத்துக்கொண்டார். அவர் கரைத்து குடித்த சட்டநுணுக்கங்கள்தான் சட்டமன்றத்தில் அவர் பல சரித்திர நிகழ்வுகளை நடத்தி காட்டஉறுதுணையாக இருந்தது. பன்முகத்தன்மை கொண்டவர்.
சட்டசபை வழக்குகளில் அவர் அப்போது சொன்ன சட்டநுணுக்கங்கள் இன்றளவும் எடுத்துக்காட்டப்படுகிறது. தம்மை தேர்ந்தெடுத்த சேரன்மகாதேவி தொகுதிக்கு சிறந்த பணிகளை மேற்கொண்டார்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
முன்னதாக பி.எச்.மனோஜ்பாண்டியன் வரவேற்றார். அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.