பொங்கலையொட்டி 3 நாட்கள் பூங்கா, கடற்கரைக்கு செல்ல தடை
1 min read
Pongalaiyotti 3 days park, no go to the beach
12.1.2021
பொங்கல் விடுமுறை நாட்களான 15ந் தேதி முதல் 17ந் தேதி வரை 3 நாட்களுக்கு பூங்கா, கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறை
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல்-. அதற்கு மறுநாள் காணும் பொங்கல். இந்த நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள பூங்காக்கள், கடற்கரைக்கு சுற்றுலா செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனுமதி இல்லை
காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் அனைத்து கடற்கரையிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் ஜனவரி 15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.